Wednesday 9 July 2014

உறக்கமில்லா இரவுகள்





யோசித்துப் பார்க்கும் போது 
எவ்வளவு அழுக்கானவன் நான்.
கூரான நகங்களை கீறி கீறி 
மண்னை கிளறும் கோழியைப் போன்று
நினைவுகள் நெஞ்சை கீறி கிளறுகின்றன.
நினைவுகள் நிச்சியமாக 
அசைவ பிரியமாக தான் இருக்கும்,
என் ரத்தத்தை குடிப்பதில் 
அதற்கு அத்தனை மகிழ்ச்சி.

முகத்தையும் உடம்பையும் 
கழுவி சுத்தமாக வைத்துக்கொள்கிறேன்.
கண்களை கழுவி 
நல்ல வெளிச்சத்தைப் பார்க்கிறேன்.
துவைத்த ஆடைகளை உடுத்திக்கொள்கிறேன்.

ஆனால் 
இமைகளை மூடி உறங்கச் செல்கையில் 
யோசித்தால்!!!!
கடந்த காலத்தில் எவ்வளவு அழுக்கானவன் நான்.
எதை ஊற்றி மனதை கழுவிக் கொள்வது?
எப்படி நினைவுகளை கொல்வது?

எப்படித்தான் உறங்கி தொலைப்பது?