Thursday 28 February 2013

நம்ம சென்னை...


















அடைமழை பெய்யுது பாரு, அதிசயம் வந்து பாரு,
 
சிங்காரம் அதோட அடைமொழி பேரு, சென்னை என்ற ஊரு.
 
வந்தாரை வாழவைக்கும் சென்னை, வியக்க வைக்கும் உன்னை,
 
தலைநகரம் ஆச்சு, தறுதலையா போச்சு.
 
பட்டணம் ஆன பட்டினம், பளபளக்கும் இங்க கட்டிடம்,
 
என்ன இங்க இல்லை, மனுஷன் தானே தொல்லை.
 
வித விதமா வாகனம், ஜோரா தானே போகணும்,
 
போக்குவரத்து நெரிசல் சாகா வரம் ஆச்சு.
 
பக்குவமா பேசு, பச்சை தமிழன் ஊரு,
 
பத்து பேர அமுக்கி பயணம் பண்ணும் பாரு.
 
வள்ளுவர் கோட்டம், அண்ணா சதுக்கம் சிறப்பு,
 
நாளா பக்கமும் சேறு, வாரி தூத்தும் பாரு.
 
வசை பாடும் பேருந்து, இசை போல கேட்கும்,
 
அப்பன் போட்ட ரோடானு தப்பா உன்ன ஏய்க்கும்.
 
கஷ்டம் இங்க நூறு, ஆனாலும் இஷ்டம் இந்த ஊரு,
 
நாளும்  வாழ நடக்கும் ஒரு போரு, புரிஞ்சிக்கிட்டு ஊரு போய் சேரு.


                                                 - சிந்துஜா

தொடரும் பிரிவின் பயணம்...

































தலையணையில் முகம் புதைத்து அழுதிட தோன்றும் எனக்கு,
உன்னை விட்டு பிரியும் சோகம் தான் காரணம் அதற்கு,
எங்கே நம் உறவு ஆரம்பித்தது என்று சற்றே காலத்தின் பின்னே சென்றேன்,
3
வருடங்களில் எத்தனை மாயம் என் வாழ்வில் என்று நினையும்போதே  வியந்தேன்.

கண்ணீர் துளிகள் மட்டும் மிஞ்சின உன்னுடன் இருந்த காலம் முழுதும்,
கானல் நீராய் சில புன்னகை சிந்தவும் செய்தேன் எனினும்,
பிழை செய்தே விட்டேன் நம் உறவை தொடர்ந்ததால் என்ற நினைவே என்னில்,
ஏமாற்றமும் ஏக்கமும் மாறி மாறி மின்னியது என் சிறு கண்ணில்.

உன்னை பெற தவம் செய்தேனே என்றே அகமகிழ்ந்தேன் ஓர்நாள்,
என்னை வாட்டிய உன்னை துறக்க முடியாமல் மனம் புளுங்கினேன் பலநாள்,
எத்தனை செய்தும் நிரய்படுத்த முடியாத சுற்றம் உன்னுடன் இருக்கையில்,
உன்னுடன் கைகோர்த்து விண்ணை தொடும் அளவில் கனவினை  தொடுத்த நானும் ஒருத்தி முட்டாள்களில்.

விடை பெறும் போதும் கண்ணீர் விடுவேன் என் உதிரம் உறிஞ்சி சக்கையாய் வெளியேறும் என் உடலை எண்ணி,
என்னதான் செய்யவில்லை என்ற கேள்வி, என்ன செய்தாலும்  தேவையில்லை உன் சேவை என்ற உன் வார்த்தை வேள்வி,
நாட்களில் போகிறது உன்னுடனான சொந்தம்,நடைபாதையில் நிற்கிறது என் வாழ்க்கையின் லட்சியம்,
உன்னுடனான கடைசி நாள் பயணம்,சுகமோ சுமையோ தெரியாது ஆனால், அது என் கனவின் இறுதி யாத்திரை.

                                                   - சிந்துஜா

Monday 25 February 2013

மூக்குத்திப் பெண்னே!



















கொத்திக் கொத்திப் போகின்றாய்
மூக்குத்திப் பெண்ணே - உன்
பிஞ்சுக் குரலில் எனை
திட்டிக் கொண்டே கரம்
பற்றிக் கொண்டே போகின்றாய்

விக்கிக் கொண்டே போகின்றேன்
மூக்குத்திப் பெண்ணேஎன்
தொண்டைக் குழியில் உனை
வைத்துக் கொண்டே தினம்
திக்கிக் கொண்டே போகின்றேன்

பத்திக் கொண்டே போகின்றாய்
மூக்குத்திப் பெண்ணே - உன்
நெத்திப் பொட்டில் எனை
சுத்திக் கொண்டே அதை
தொட்டுக் கொண்டே போகின்றாய்

வத்திக் கொண்டே போகின்றேன்
மூக்குத்திப் பெண்ணே - உன்
எண்ணக் கடலில் தினம்
சிக்கிக் கொண்டே
தரை தட்டிக் கொண்டே போகின்றேன் 

தொத்திக் கொண்டே போகின்றாய்
மூக்குத்திப் பெண்ணே - உன்
அச்சுக் குழலில் எனை
தச்சுக் கொண்டே மனம்
பிச்சுக் கொண்டே போகின்றாய்

மக்கிக் கொண்டே போகின்றேன்
மூக்குத்திப் பெண்ணேஎன்
மிச்ச உயிரில் உனை
மொய்த்துக் கொண்டே தினம்
பொய்த்துக் கொண்டே போகின்றேன்
                             
                                                                       - விஜய் Che

என்ன வேணுனாலும் பேசலாம்



2014 இப்பவே சூடுப்பிடித்துவிட்டது. காங்கிரஸ் பிரதமர் வேட்பாளாராக ராகுல் காந்தியும், பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளாராக நரேந்திர மோடியும் கிட்டத்தட்ட அறிவிக்கப்பட்டு விட்டார்கள். மன்மோகன் அரசில் எங்கு பார்த்தாலும் நிறைந்து கிடக்கும் ஊழல் வழக்குகள், சில்லரை வர்த்தக விவகாரம், விலையேற்றம், பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிறுவகித்துக்கொள்ளும் உரிமை, விவசாயிகள் தற்கொலை, செயல்படாத அரசு என ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் விரிந்துக்கிடக்க காங்கிரசின் ஒரே நம்பிக்கை ராகுல் காந்தி. ஊழல் இல்லாத அரசு, வியத்தகு பொருளாதார வளர்ச்சி, காங்கிரஸ் அரசின் மீதான மக்களின் கோபம் என அசுர பலத்துடன் நரேந்திர மோடி இருந்தாலும் ஒரு மதவாதியை சிறுபான்மையினரும், மக்களும் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்பது கேள்விக்குறியே. காங்கிரசின் தேர்தல் பிரச்சாரமும் அதுவாகத்தான் இருக்கும் என்பது இந்து பயங்கிரவாதிகளை ஆர்.எஸ்.எஸ் உருவாக்குகிறது என்று கூறிப் பிரச்சனையை கிளப்பியிருக்கும் உள்துறை அமைச்சர் ஷிண்டேயின் அறிக்கையிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது.

இம்முறையும் மூன்றாவது அணியமைக்க முயற்சிகள் நடைபெறும், ஆனால் அமையுமா என்பது சந்தேகமே. அப்படியே அமைந்தாலும் யார் தலைவர் என்பதில் ஒருமித்த கருத்து ஏற்படுவது கடினம். தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியென 2014 வெடியின் திரியை கொளுத்திப்போட்டதே ஜெயலலிதா தான். அவரது அடிபொடிகளும் நாளைய பிரதமர் என்றே ஒவ்வொரு மேடையிலும் கூவி வருகிறார்கள். 40 தொகுதிகளை வைத்துக்கொண்டு ஒரு நாட்டை ஆள்வது அத்தகைய எளிதான காரியமும் இல்லை. கனவுகளில் இருக்கும் முதல்வரை யாராவது தண்ணி தெளித்து எழுப்பிவிட்டால் அவருக்கும் நல்லது நமக்கும் நல்லது. அவரது நண்பர் நரேந்திர மோடியை எதிர்த்து அவர் நிற்பாரா என்பதும் கேள்விக்குறியே. எனவே முதல்வரின் முடிவில் மாற்றம் இருக்கலாம். தே.மு.தி.கவை வளைத்துபோடும் முயற்சியில் தி.மு.கவும், காங்கிரஸை வளைத்துபோடும் முயற்சியில் தே.மு.தி.கவும் முனைப்பு காட்டுகின்றன. காங்கிரசுடன் தனது கூட்டணியை தி.மு.க தொடருமா என்பது கலைஞரின் அறிக்கையை போலவே புரியாத புதிர்தான், வரும் ஆனா வராது கதைதான். (2014 வரைக்கும் பொருத்திருக்கணுமானு நீங்க பொளம்புறதும் கேக்குது. என்ன பண்றது மன்மோகன் மாதிரியே அவர் அரசும் மெதுவா நகருது.)

அடுத்து நம்ம ஒரு சின்ன பிரச்சனைய பத்தி பேசலாம். வீதியில நடந்து போயிட்டு இருக்கிறப்ப நான் பாத்த கண் கொள்ளா காட்சி. ஒரு படிச்ச தகப்பன் தன் கைக்குழந்தைய தூக்கிட்டு வரான். எப்படி? தன் ஒரு கையில் குழந்தையும் மறு கையில் சிகரட் துண்டும். ஆகா! அந்த நச்சுப்புகை உனக்கும் கெட்டது தான். ஆனா உலகத்தை சமீபத்தில பாத்த அந்த குழந்தை, ரொம்ப பாவம்யா. சிறு வயசுலேயே அந்த குழந்தையோட உடல் நலம் பாதிக்குமா இல்லையா? படிச்ச பட்டதாரியே இப்படி நடந்துக்கலாமா? மாறுங்க. எதிர்காலத்தில உன் புள்ள நல்ல காத்த சுவாசிக்கனும், தெரிஞ்சுக்கோ....

மரணத் தண்டனை வேண்டுமா வேண்டாமா? எனக்கு என்னமோ வேண்டாம்னு தான் தோனுது. தப்பு செஞ்சா தண்டனை கொடுக்கனும், சரி. ஆனா அந்த தண்டனை அவன திருத்தனும், அழிக்க கூடாது. அப்படியே அவன தூக்கில போட்டாலும் மத்தவங்க திருந்துறாங்கலா? எனக்கு என்னமோ இல்லனுபடுது. மரணத் தண்டனை இருந்தும் குற்றம் இன்னும் குறையலயே. அதிகமா தான் ஆகுது. அதுக்கு பள்ளிக் கூடத்தில இருந்தே அன்பு, பாசம் எல்லாம் சொல்லி வளக்கனும். எப்ப வாங்குற மதிப்பெண் தான் ஒருத்தன எடைப்போடுதோ அப்பவே கல்வி சரியில்லாம போச்சு. பல நாட்டுல மரணத் தண்டனைய நீக்கிட்டாங்க. உலகத்துக்கு அறவழியில போராடுனு சொல்லித் தந்த நம்ம நாட்டுல இன்னும் நீக்கல. பொறுத்திருந்து பாப்போம்.

இன்னக்கி எத்தன பேரு நல்லா சந்தோசமா சிரிச்சிங்க? சாயங்காலம் ஆறு மணிக்கு மேல பாத்தா எல்லாரும் ஏதோ மூஞ்சிய தூக்கி வச்சிக்கிட்டு வீட்டுகார அம்மவோட சண்ட போட்ட மாறியே இருக்காங்க. காரணமேயில்லாம சிரிங்க. பழைய ஞாபகத்த நெனச்சுப் பாத்து சிரிங்க. எப்படியோ சிரிங்க. மனசு லேசாகும். ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். மூளை தெளிவா சிந்திக்கும். எல்லாத்தயும் விட நீங்க ரொம்ப அழகா தெரிவீங்க!!! அதுக்குனு யாரும் இல்லாத ரோட்டுல தனியா சிரிச்சு பழகுறேனு சிரிச்சு தொலையாதீங்க. தன்னத்தான் நீங்க பயமுறுத்துறீங்கனு நாய் கடிச்சு வைக்க போகுது. வாங்க என்னவேணும்னாலும் பேசலாம்.....

                                                    - யோகி & கோழி


Saturday 23 February 2013

லட்சங்களில் ஒருவன் - ஈ.வே.ரா



தமிழகத்தில் உள்ள பெரும்பாலோனோர், ஏன் சில நூறு பேரைத் தவிர அனைவரும் தங்கள் பெயர்களில் தங்கள் சாதிப் பெயரை சேர்த்து எழுதுவது, சொல்லுவதில்லை. இத்தகைய பெருமைக்கு காரணமாக இருப்பவர், பெரியார் என்று அழைக்கபடுகிற தோழர் ஈ.வே.ராமசாமி.

ஆம், பெரியார் தனது ரஷ்ய பயணம் முடித்து தமிழகம் திரும்பிய பின்னர் தம்மை தோழர் என்றே அழைக்க மற்றவரை கேட்டுக்கொண்டார். தமிழ் பெண்கள் தங்கள் கணவரை எப்படி அழைப்பார்கள்? மரியாதையும் பக்தியும் மிகுந்து ஏதோ கணவனின் அடிமைப் போல கருதி இந்த காலத்தில் ’என்னங்க’ கருப்பு வெள்ளை காலத்தில் ‘நாதா’. தவறி கூட பெயரை சொல்லவிடாமல் அடிமையுண்டு கிடந்தது பெண்கள் உலகம். ஒரு கூட்டத்தில் தோழர் ராமசாமி, தன் மனைவி நாகம்மையை பார்த்து, இனி தன்னை அவர் “தோழர் ராமசாமி” என்றே அழைக்க வேண்டும் என்று கூறி, அவ்வாறு பொது மக்களிடையே தன்னை அவர் அழைக்கச் செய்து பெண் விடுதலைக்கு விதை விதைத்தார். யோசித்து பாருங்கள், எவ்வளவு பெரிய காரியம் அது. இது நடந்தது அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்னர். 


தோழர் ராமசாமி ஈரோட்டில் பிறந்தார். அவரது குடும்பம் வணிகத்தில் ஈடுபட்டு வந்தது. கடவுள் பக்தியும் அதோடு சேர்ந்து கடவுளின் அவதாரர்களாக சொல்லிக்கொண்ட பிராமணர்களையும் அவர்கள் தொழுது வந்தார்கள். அதற்கு அப்படியே மாறாக இருந்தார் தோழர் ராமசாமி. அவரது சிறு வயதில் அவருக்கு இருந்த கேள்வி கேட்கும் திறமையே அவரை பகுத்தறிவாளராக மாற்றியது. 

“ போட்டோவில் இருக்கிற சாமியெல்லாம் இரண்டு பெண்டாட்டி கட்டிகறது, அப்ப நம்ம அப்பா இரண்டு பெண்டாட்டி கட்டிகலாமா? “

“ வாலிய நேர்ல மோதி ஜெயிக்க முடியாம பின்னாடி இருந்து அம்பு விட்டு கொன்ன ராமன் வீரனா ?, இல்ல கோழை ! “

இதனைப் போல பல கேள்விகள் கேட்டார். பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் தப்பி ஓடிப்போனது  மடக் (மதக்) கூட்டம்.

ஒருமுறை பல பேரிடம் கடன் வாங்கி திருப்பி தராமல் இருந்த பிராமணன் ஒருவனை அவர்கள் சாப்பிடும் சத்திரத்தின் உட்புகுந்து காவலர்களிடம் பிடித்து கொடுத்தார். பிராமணர்கள் சாப்பிடும் இடத்திற்கு அன்னியர்கள் வந்தால் அது பாவம் என்று கருதி அந்த சாப்பாட்டை எல்லாம் கீழே கொட்டிவிட்டார்கள். அதுவும் பிற மக்கள் தானத்தில் கொடுத்த பணத்தில் இருந்து தாயரிக்கப்பட்ட உணவு. இந்த பாவச்செயலைப் பற்றி அவரின் தந்தையிடம் புகார் கொடுக்க வந்தது அந்த கூட்டம். அவர் தந்தை அவரை அனைவர் முன்னிலையிலும் அடித்து கேவலமாக திட்டி தீர்த்தார். அதற்கு அவர் “ மத்தவங்க காசுல ஓசி சாப்பாடு சாப்பிட்டு, அத தீட்டு பட்டுறிச்சினு முழுசா கீழ கொட்டி இருக்கற இவங்க திமிர் புடிச்சவங்களா நான் திமிர் புடிச்சவனா “ என்று கேட்டார். அந்த காலத்தில் நிழவி வந்த கொள்ளை இது. நீங்களும் தெரிந்துக்கொள்ளுங்கள் கேட்காத வரை நியாயம், தர்மம் இவையெல்லாம் உறங்கிக்கொண்டிருக்கும்.  


அவர் உறவுக்கார பெண் நாகம்மையை திருமணம் செய்துக் கொண்டார். அவர்களுக்கு பிறந்த குழந்தை ஐந்தாம் மாதம் இறந்தது. பெரும் சோகத்தில் ஆழ்ந்தார். அந்த சோகமான நேரத்திலே அவர் தந்தை வணிக இடத்தில் கோபம் கொண்டு கண்டபடி திட்டிவிட, வீட்டை விட்டு யாருக்கும் தெரியாமல் வெளியேறி காசிக்கு சென்றார்.


அங்கு அவருக்கு சாப்பிட சோறு கொடுக்காத பிராமணர்கள் மீது கோபம் கொண்டார். ரோட்டில் கிடந்த எச்சில் இலையில் மீதியிருந்ததை உண்டார். சாதியொழிப்பு சுடரொளி அன்று பட்ட அவல நிலை இது. அங்கேயே நிற்கவில்லை அந்த ஒளி, அது மென்மேலும் பிரகாசிக்கவே செய்தது.


பின் தன் வீட்டிற்கு திரும்ப வந்தார். வியாபாரம் செய்ய தன் தந்தைக்கு துணையாக இருந்தார். சிறிது காலம் கழித்து தந்தையின் அனைத்து பொறுப்புகளும் இவரிடம் வந்தது. அப்போது தன் கடையில் வேளைப் பார்த்த ஒருவனுக்கு வேற்று சாதியில் இருந்த பெண்ணை திருமணம் செய்து வைத்தார். அவர் செய்து வைத்த முதல் சாதி மறுப்பு திருமணம் அது. 


ஈரோட்டின் முனிசிபல் சேர்மேனாக இருக்கும் போது அவருக்கு ராஜாஜியின் நட்பு கிடைத்தது. அவரை பின்பற்றி காந்திய கொள்கையில் ஈடுப்பட்டார். மது ஒழிப்பு போரட்டத்தின் போது அவருக்கு சொந்தமான ஐநூறு தென்னை மரங்களை வெட்டச் செய்தார். தென்னை மரம் தலைமுறை தலைமுறையாக பயன் தரும். ஆனால் தான் கொண்ட கொள்கைக்காக எதையும் செய்யும் துணிவு அவரிடம் இருந்தது. இன்று தன் பையில் இருந்து 10 ரூபாய் எடுத்து தருகிற தலைவரை கண்டுப்பிடிப்பது அரிது.


தன் வீட்டு பெண் வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது என்று இன்றும் தடுத்து வைக்கிற ஆண்கள் உண்டு. மது ஒழிப்புப் போராட்டத்தின் போது தன் மனைவி, தன் தமக்கையோடு வீதிக்கு வந்து போராடினார். பெண் விடுதலைக்கு அவர் செய்த ஆரம்பத் தொண்டு இது. கதர் ஆடை உடுத்த வேண்டும் என்கிற காந்திய கொள்கயை பின்பற்ற அவரும் அவர் குடும்பத்தார் வைத்திருந்த அனைத்து பட்டுத் துணியையும் நாடக கம்பெனிக்கு வழங்கிவிட்டார். இது அவரின் தியாக குணத்திற்கு மற்றொரு எடுத்துக்காட்டு.


பதவி, பலம் என்று பெருமைக்கு அனைவரும் அலையும் இந்த காலத்தில் அவர் ஒரே கையெழுத்தில் 29 பதவிகளை ராஜினாமா செய்தார். விடுதலைப் போராட்டத்தின் போது ஆங்கிலேயர்களுக்கு எதிர்ப்பு காட்டும் விதமாக செய்த காரியம் இது. 


ராஜாஜியின் வேண்டுகோளில் காங்கிரசில் சேர்ந்தார். ஆனால் காங்கிரஸ் பிராமணர்களுக்காக மட்டுமே பேசும் கட்சியாக இருந்ததால் அதனை விட்டு வெளியேறினார். சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தார். 


கேரளாவிலுள்ள வைக்கம் என்னும் ஊரில் கீழ்ச்சாதி மக்களுக்கு கோவிலினுள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. அதனை எதிர்த்து அங்கு சென்று போராட்டம் நடத்தி அனுமதி பெற்றுத்தந்தார். அத்தகைய வெற்றியின் பின்னர் ”வைக்கம் வீரர்” என்று அழைக்கப்பட்டார். 


அவர் தான் சொல்வதை அப்படியே கேளுங்கள் என்று சொல்லவில்லை. கேட்டதை உங்கள் அறிவை கொண்டு சிந்தித்துப்பாருங்கள். உங்களுக்கு எது நல்லதாக படுகிறதோ அதனை பின்பற்றுங்கள் என்று கூறினார். அவர் மக்களை யோசிக்க செய்தார். ஒரு மனிதனை தான் ஏன் இந்த நிலைமைக்கு ஆளாக்கப் பட்டோம் என்று யோசிக்கச் செய்தால் மட்டுமே அவன் மனதில் ஒரு ஞானம் பிறக்கும். அதனை பிறக்க வழிச் செய்தார் தோழர் ராமசாமி.


தன்னுடைய எதிரியாக இருப்பினும் அவர்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவதே ஒரு சிறந்த பண்பாளரின் அடையாளம். தோழர் ராமசாமி மிகச் சிறந்த பண்பாளர். திரு.வி.க-க்காக விபூதி பூசிக்கொண்டது, தன் நண்பரின் அறுபது ஆம் பிறந்தநாளுக்காக பழனி மலையேறியது, நண்பருக்காக வீட்டில் பூசை நடத்த ஒத்துக்கொண்டது. இவையெல்லாம் அவரை நல்ல மனிதனாக பிறரை மதிக்கும் ஒரு பண்பாளனாக காட்டியது. 


இன்று பல ஆயிரம் பேர் தீண்டத்தகாதவர்களாய் இருந்தவர்கள், பெரிய பெரிய பணிகளிலும் தொழில்களிலும் படித்த பட்டதாரிகளாகவும் விஞ்ஞானியாகவும் இருக்க முடிகிறதென்றால் அதற்கு முக்கிய காரணம் தோழர் ராமசாமி. தன்னுடைய குலத்தொழிலை தான் ஒருவர் செய்ய வேண்டும் என்று இருந்த வழக்கத்தை மாற்றி இன்று முடிதிருத்துபவரின் மகன் ஒரு மருத்துவராக, பிணம் எரிப்பவரின் மகள் ஒரு பட்டதாரியாக இருக்க செய்தவர் தோழர் ராமசாமி. 


பெண் விடுதலைக்காகவும், பெண் கல்விக்காகவும் அவர் செய்த பணி கடலினும் பெரியது. ஒரு பெண் விடுதலை அமைப்பினரின் கூட்டத்தில் அவருக்கு “பெரியார்” என்று பெயர் சூட்டி தமிழகம் தனக்கு பெருமை தேடிக்கொண்டது.


பெரியார் என்று சொன்னாலே அவரது கடவுள் எதிர்ப்பு தான் அனைவரது உள்ளத்திலும் ஞாபகம் வரும். அவர் கடவுள் இருந்திருந்தால் எதிர்த்திருப்பார். இல்லையென்றானப் பின் அவர் மக்களை பகுத்தறிவாளர்களாய் மாறச் சொன்னார். கடவுள் என்கிற சர்வ வல்லமை படைத்த பொருள் இருக்குமாயின் சமூகத்தில் ஏன் இந்த ஏற்ற தாழ்வு, ஏன் இந்த பாகுபாடு. முன் ஜென்மம் பின் ஜென்மம், பாவம், புண்ணியம், தலைவிதி என்று சொல்லி திரிந்த ஏமாற்று கூட்டத்தின் கொட்டத்தை அடக்க முளைத்த வாள் தோழர் ராமசாமி. 


சாமி, கோவில் என்பது மக்களுக்கு நன்மை செய்யவே ஒழிய நடப்பதை பார்த்து ஓரமாய் ஒதுங்க இல்லை. இதே நாட்டில் தான் ஒரு இந்து கோவிலில் பல கோடி பணம் கொட்டுகிறது, பல லட்சம் மக்கள் பட்டினியில் சாகிகிறார்கள். என்ன ஒரு காட்சி!. 


அவர் தான் சொல்வதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை. தோழர் ராமசாமி உங்களுக்கு இருக்கின்ற மூளையை வைத்து சிந்திக்க சொல்கிறார். சிந்திக்காமல் விரயம் செய்கிற மூளையெல்லாம் மனிதனாக ஏற்றுக்கொள்ள மாட்டாது.


எந்த சாமியையும் சாமியின் பெயரில் அட்டூழியம் செய்யும் சாமியார்களையும் அவர் வாழ்க்கை முழுதும் சாடினாரோ, அந்த “சாமி”யின் பெயரையே தாங்கிய “ராமசாமி” நம் பெரியார். இன்று தமிழகத்தில் நடக்கின்ற அரசியல், பண்பாடு, கலாசாரம் அனைத்திலும் தோழர் ராமசாமி மறைவுண்டு வாழ்ந்து வருகிறார். 

" ஏனென்றால் பெரியார் வரலாறு அல்ல முடிந்து போவதற்கு, அவர் ஒரு தொடர் கதை. தமிழ் இருக்கும் மட்டும் அவர் இருப்பார். "

                                                - கோழி.