Sunday 29 September 2013

8 காதல் கடிதங்கள் கடிதம் 3 – செடி


பிரியமுள்ள பூங்குழலி,
           உடம்பும் உள்ளமும் சுகமா? உன் காதல் இங்கே உள்ளபடியால் நானும் சுகம். என் பெருங்கனவை வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன், பூங்குழலி. இருண்டவன் கண்ணுக்கு கண்டதெல்லாம் பேய் என்பது போல காதலிக்கிறவன் என் கண்ணுக்கு காண்பதெல்லாம் நீயாக தெரிகிறாய் பூங்குழலி. உனக்கும் இதே நிலைமை தானா அங்கே. இப்போதும் எப்போதும் உன்னருகிலே இருக்க வேண்டும் என என் மனது அடம் பண்ணுகிறது. அதற்கு பதில் என்ன சொல்லப் போகிறாய்.
நேற்றைய முன்தினம் முதன்முதலாய் நாம் இருவரும் தனிமையில் சந்தித்த போது ஏற்பட்ட மயக்கம் இன்னும் தெளியாமல் உன் பெயரையே முனுமுனுத்துக் கொண்டிருக்கிறேன். யாருமற்ற சலனமில்லாத இடம். உனக்கும் எனக்கும் துணையாக காற்றும் கதிரவனின் ஒளியும் மரங்களும் மட்டுமே. நீல நிற சுடிதாரில் நீ தேவதையாக மின்னினாய். உன் பாதம் இம்மண்ணில் பட்டு தேர்ப்போல மெள்ள அசைந்து என்னை நோக்கி நடந்து வந்தபோது நான் சொர்கத்தில் தான் நிச்சயம் இருந்திருப்பேன்.
என்ன பேசினோம் நாம்? பேசுவதில் கவனம் இருந்தால் தானே பேசியது நினைவிருக்கும். நாம் பேசியதை ஒட்டுக் கேட்ட அந்த மரத்தின் மஞ்சள் பூக்களை கேட்டுவிட்டேன். அவை வெட்கத்தில் சிவந்துவிட்டது. விடு பேசியது போகட்டும்.
       விதைத்து வேர் நீண்டு, துளிராகி, சிறு செடியாக இலை விடும் நேரத்தில் எவ்வளவு அழகு. அந்த அழகைப்போல் நம் காதலும் பேரழகு. மாசற்ற பேரழகு.
         இரவுகளின் உறக்கத்தில் உந்தன் கனவு தரும் இம்சைகளை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. உன்னை நினைத்து கொஞ்சம் பாவமாய் தான் இருக்கிறது. ஏன் என்றா கேட்கிறாய்? எப்படி தான் எந்தன் கனவு தரும் இம்சைகளை பொறுத்துக்கொள்கிறாயோ? காதலில், பொறுத்தார் நீடுழி வாழ்வர்.
         துளி நேரம் ஒய்வறியாத கடல், கரையினில் தன் அலைகளை அனுப்புவது போல் எப்போதும் என் காதல் உன்னை சேர்ந்துக்கொண்டேயிருக்கும். காதலில் திளைத்த இதயம் கவலை மறந்துப்போனது. சிறகுகள் முளைத்து வானில் பறந்துப்போகிறது. அந்த கடல் அளவு காதலை குடித்தாலும் தாகம் அடங்காது போல, மீண்டும் மீண்டும் உன்னை காண கண்கள் தேடுகிறது.
        சந்திக்கும் போது பேசவேண்டும் என ஆயிரம் சங்கதி வைத்திருந்தேன். ஆயிரத்தையும் தூரப்போட்டு வேறு ஏதோ பேசிவிட்டேன். ஆயிரம் லட்சமாகிவிட்டது. லட்சத்தை பேச, வரும் ஞாயிறு உட்சத்தில், நாம் தனியே சந்திக்கும் பட்சத்தில் சொல்கிறேன். மிச்சத்தை நம் பார்வை பரிமாறிக்கொள்ளும்.


                               உன் வருகைக்கு காத்திருக்கும்.

                                        அருள்மொழி.

Sunday 22 September 2013

நிலமெல்லாம் நீ வேண்டும்!!!



நெல்லெல்லாம் சருகான
திசையெல்லாம் அனல் காற்று;

ஊற்றெல்லாம் புதரான
வழியெல்லாம் சுடும் காடு;

வற்றிப்போன கரையெல்லாம்
வெயில் வதக்கிய மீன் குஞ்சுகள்;

கண்ணுக்கெட்டிய தொலைவு வரை
கருப்பு வெள்ளையாய் எங்கும்
கூனி கிடக்கிறது பச்சை வயல்கள்;

பூத்துக்குலுங்கிய மரக்கிளைகள்
எலும்புக்கூடாய் நிற்க்கிறது;

நிழல்கள் இல்லாத பாதையில்
கருகிக் கிடக்கிறது இலைகள்;

ஊரின்றி அமையாது உலகு
நீரின்றி அடங்காது உசுரு
நிலமெல்லாம் நீ வேண்டும்!!!
வற்றாத ஊற்றாக
கிணறெல்லாம் நீ வேண்டும்.

எட்டாத கனியாக;
சொட்டாத தேனாக;
விண்ணோடு நிலைக்காமல்,
மண்ணோடு மழையாக நீ வேண்டும்.

வெயில் பொசுக்கிடும்
உழவனின் உடலின்
வேர்வையில் கலந்து
ஓவியம் தீட்டிட வேண்டும் நீ….

சிட்டுக் குருவிக்கும், சுட்டி அணிலுக்கும்,
தொட்டி மீனுக்கும், பட்டி ஆட்டுக்கும்
வற்றாத தேனாக வேண்டும் நீ….

மழையே மண்ணெல்லாம்

நீ வேண்டும்.

Saturday 21 September 2013

சென்னையில் மழை





தீப்பிழம்பாய் எரிந்து  கிடந்த சாலைகள்,
 
தத்தளிக்கின்றன கரை கண்டிட....!

விறகுகளாய் வெறித்து நின்ற மரங்கள்,
 
பச்சை கவசம் பூண்டு பளபளப்பாய்...!

கடும் வெயில் பார்த்து காய்ந்து போன குடைகள்,
 
மழையில் குளிக்கும் கொண்டாட்டங்கள் இன்று..!

குளிர் அறையில் அமரத் துடித்த காலம் போய்,
 
வெளியில் வராதா வெயிலென
தேநீர் குவளைகளுடன் பேச்சுக்கள் செவிகளில்..!

 
நீர் கண்டிடாத குளங்கள்,
நிரம்பி ஆறாய் ஊருக்குள்...!

 
தரைதட்டி குரிகித் திரிந்த மீன்கள்,
குதித்தெழுந்து கூச்சலிடும் குறும்புகள் குளத்தருகில்...

 
பூமித்தாயின் வயிற்றுப் பசியால்,
ஒடுங்கிய பள்ளங்களில் எல்லாம்..
 
நிறைந்து நிற்கிறது ,
மேகத்தின் கண்ணீர்...!

 
கோடைகாலப் பாதுகாப்பு ,
பலப்படுகிறது ஒருபுறம்...
 
மரங்களுக்கு நீரூற்றி..!

வான் நீலம் எதிரொளிக்கும் நீரில்ளெல்லாம்,
 
பசுமையின் ஆதிக்கத்தால் பங்கேற்கிறது பச்சை நிறம்..!

மறைந்து கிடந்த மாசுக்களும்...
 
மட்காத கழிவுகளும்...
துரத்தப்படுகின்றன தூரல்களால்...!!

 
துயர் நீக்கப் பிறந்த தேவதையின் சின்னமாய்...
சிறுகச் சேர்த்து ஒருநாளில் செலவிடும் முரண்வாதிகளாய்..
 
மேல்நோக்கி முகம் பார்க்க,
தீராமல் முத்தமிடும் காதல் கடலாய்....
  
வானுடைத்துக் கொட்டுகிறது,,,
சென்னையில் மழை!!! 

அழகின் முழுமுதலே





உன் முகம்   பார்த்து  விரியாத கண்களே  இல்லை..
வெள்ளைப் பளிங்கு மாளிகையைப்  பார்த்து,
வியக்காதவர்,  எவரிருப்பார்  சொல்??

என்னையே,  எனக்கு  பிரதிபலித்துக்  காட்டும்,
உன் கண்ணாடிக் கண்கள்,
அம்மம்மா!!
உனக்காக  உருவெடுத்த பெயர் தான் “கயல்விழியா”??

எந்த கோணத்தில் பார்த்தாலும்,
அழகாகத்  தெரியும் ஒரே முக்கோணம்,
உன் மூக்குதானடி!!!!

நீரில் மலர்ந்திருந்த, 
இரு தாமரை இதழ்களைக்  காணவில்லையாம்..
கள்ளி,
அதை உன்  உதடுகளாக்கி  வைத்திருகிறாயா??

அழகே!

செவ்வண்ணப்  பாதங்களை ஏந்தும்,
காலணிகள், நானாக ஏங்கும், பேரழகி  நீ!!!

பெண்களாலே வர்ணிக்கப்படும்,
பெண்ணழகி  நீ !!!

தத்தித்  தத்தி நடக்கும்  குட்டி வாத்தைப்  போல் ,
சாய்ந்த  நடையழகி நீ!!!

வேறென்ன  சொல்ல ,,,

பிறைநேர்   நெற்றியழகி,
பிஞ்சுக்குழந்தை நிகர் பேச்சழகி!!!

கொடிமலர் இடையழகி,
இடை தொடும்  காற்குழலழகி!!!

உன் அழகிற்கு முற்றுப்புள்ளி  வைக்க  வாய்ப்பில்லை…
முற்றுப்புள்ளியற்ற  கவிதையை எழுத, எனக்கும் வழியில்லை…
வர்ணனைகளே, வர்ணிக்கக்கூடும்,
நீதான் என் “அழகின் முழுமுதலே “!!!

Thursday 19 September 2013

என்ன செய்ய காத்திருக்கிறோம்




பாரினிலே நல்ல நாடு,
நம் பாரத நாடு,
மதம் பிடித்ததினால்
வந்தது கேடு,
நிலை கெட்டதடா
அன்றோடு

பசிக்கு அன்னமிட்ட
பாரதப் பண்பாடு
கதி கலங்கி நிற்குது
பட்டினியின் நெஞ்சோடு
உயிர் போகாமல்
ஓடுது சுடுகாடு

என்ன செய்ய காத்திருக்கிறோம்
நம் நாடு நலம் பெற
நம் நாடு வளம் பெற

ஆள்பவன் சுத்தமில்லைஅவன்
ஆசையும் விட்டதில்லை
மக்களை மறந்தின்று
நாட்டையும் மறந்து விட்டான்
அரியணையில் ஏறியவன்
அதிகம் உறங்கி விட்டான்.

என்ன செய்ய காத்திருக்கிறோம்
நம் நாடு நலம் பெற
நம் நாடு வளம் பெற

உழைப்பாளி உசுர எல்லாம்
முதலாளி உறிஞ்சுடுறான்
அப்பாவி காச எல்லாம்
கடன்காரன் பறிச்சுடுறான்

தேச சண்டையில
உலகம் ஆடுதடா
ஆத்து சண்டையில
நாடே மாறுதடா
ஜாதி சண்டையில
வீதி நாறுதடா
வேலி சண்டையில
வீடே ஓடுதடா

பாதி முடியும் முன்னே,
மீதி போன தெங்கே
பாவம் தீரும் முன்னே,
கங்கையும் தீருமங்கே

எழுந்திடுவோம்
நம் வேகத்திலே
முடித்திடுவோம்
நம் காலத்திலே

என்ன செய்ய காத்திருக்கிறோம்
நம் நாடு நலம் பெற

நம் நாடு வளம் பெற

Wednesday 18 September 2013

கிராமத்து வாழ்க்கை!




வறுமையானது தான் என்றாலும்
  வசந்தமான வாழ்க்கை!
நடை பயண கஷ்டம் கூட,
    இளம் தென்றலால் இஷ்டமாகும்..
தாரிடப்படாத தாய் பூமியை,
    முத்தமிட்டுத் திளைக்கும் பாதங்கள்..
 கிராமத்துக் காதல்களின்,
    அரங்கேற்ற மேடைகளாய் வயல்வெளிகள்!
முதுமையின் கனிமையும்,
     இளமையின் இனிமையும்,
இணைந்து உறவாடும் இல்லறம்..
     மலருடன் விளையாடும் பூங்காற்று,
மண்மணம் மாறாத பெண்மை..!
     கூடி உண்ணும் சுவையில்
 குழந்தைகளின் சந்தோஷம்…!!
     பெரும் வளர்ச்சி கண்ட
 நகரங்களோடு ஒப்பிட்டாலும்..,
     பொய்யற்ற அன்பில், 
புகழாரம் சூடி நிற்கிறது..
     ”கிராமத்து வாழ்க்கை”!!!


Tuesday 17 September 2013

8 காதல் கடிதங்கள் கடிதம் 2 – துளிர்



பிரியமுள்ள பூங்குழலி,
            கிடைக்கப்பெற்றேன் உன் கடிதம். என் தாய் எவ்வளவு வலியயையும் எவ்வளவு மகிழ்ச்சியையும் என்னைப் பெற்றப் போது பெற்றாளோ அவ்வளவு வலியை உன் கடிதம் கிடைக்கும் முன்னரும் அவ்வளவு மகிழ்ச்சியை கிடைத்தப் பின்னரும் நான் பெற்றேன்.
கடைத்தற்கரிய, ஒரு வேளை கிடைக்கவே முடியாத வரமோ என்று நினைத்த அந்த காதல் பரிசை தந்துவிட்டாய் எனக்கு. காதல் கடலில் நீந்த உந்தன் துணைக்காக காத்திருந்தேன். வந்துவிட்டாய் இப்போது, விழுந்துவிட்டாய் காதல் கடலில் என்னோடு. இனி கரையேது, படகேது. காலம் முழுதும் நீந்தியே கிடப்போம்.

       பூங்குழலி, ஆசையை விதைத்தேன். அதற்கு தினமும் நீர் விடுத்தேன். இப்போது அது துளிர் விட்டது. உன்னை நெஞ்சில் தாங்குவேன். துயர் பட விடேன். ஆனந்தத்தில் மூழ்கடித்து அரவணைப்பேன். ஒரு கணம் பிரியேன். உனக்காகவே உயிர் வளர்ப்பேன்.

நித்தம் நித்தம் உன் கொலுசு சத்தம்
என் காதில் விழ வேண்டும்
கொலுசின் சத்தமா உன் இதழ் முத்தமா
என்ற சந்தேகம் எழ வேண்டும்

          பேருந்து நிறுத்தத்தில் நம் காதல் தொடங்குகிறது. என்ன ஒரு முரண். உன் விழி அம்புகள் என் நெஞ்சை பற்றிய நொடியே சுற்றமும் சூழ்நிலையையும் மறந்தேன். நீ பேருந்திற்காக காத்திருக்கிறாய். உன்னை நோக்கி நான் வருகிறேன். முதன் முதலில் உன்னோடு உரையாடப் போகிறேன். உன்னிடம் நான் முதலில் பேசிய வார்த்தைகள் மனதில் இல்லை. என்ன பேசினேன் என்று இன்றளவும் நினைவில்லை. ஆனால் உன் கண்களும் என் கண்களும் நேர்க்கோட்டில் பரிமாறிக்கொண்டது. அந்த கணம் நாம் இந்த பூமியில் இருக்கவில்லை என்ற எண்ணம் நிச்சியம்.

         அந்த புது உலகம் தந்த நம்பிக்கையில் தான் என் காதலை முன்பளித்த கடிதத்தில் தெரிவித்தேன். என் காதல் நம் காதலானது நீ தந்த கடிதத்தில். நம் காதல் நம் வாழ்வில் நீங்காதிருந்து உலகத்தின்று நீங்காமல் எப்போதும் உயிர் வாழ வேண்டும் என்பதே என் விருப்பம்.

      உயிரே பூங்குழலி, நான் கேட்ட காதலை தந்துவிட்டாய். இனி நீ கேளாத இன்பமும் காணாத உலகமும் உனக்கு சொந்தம்.

காதலுடன்,
அருள்மொழி.

Friday 13 September 2013

பயணம்....




இதமான இளம் குளிரில் 
  தொடங்கியது என் பயணம்..
வெளிச்ச நினைவுகளால் இன்று
 இருட்டிலும் சிரிக்கிறேன்..
தள்ளு முல்லுகள் அற்ற 
 ஒற்றையடிப் பாதை..
ஒவ்வோர் அடியிலும் 
 செவி தொடும் நலம் விசாரிப்புகள்..
சீவி முடிந்து பின்னலிட்டும்
 களைத்துப் பார்க்கும் தென்றல்..
சூரியக்கரம் பூமிதொட 
 தடை போடும் மாமரங்கள்..
வந்த சேதி கேள்விப்பட்டால் 
 வரிசையிடும் உறவுகள்..
பலவீட்டுப் பலகாரங்களுடன் 
 பகிர்ந்து கொள்ளும் அன்பு..
உறவு சொல்லி உரிமை கொண்டாடும்
 அண்டை வீடு அன்பர்கள்..
பாதம் தொட்டு சில்லிட்டு பின்
 வயல் வெளி ஓடும் வாய்கால் நீர்..
பூச்சிகளின் இசை மீட்டலில்
 புன்னகைக்கும் பூக்கள்..
அகவை தொண்ணூறு தொட்டும் 
 ஏர் உழும் கால்கள்..
கேசம் வெள்ளையடித்தும்
 நாற்று நடும் கைகள்..
பண்பும், கலாச்சாரமும் கலந்து 
 கட்டபெற்ற வீடுகள்..
அன்பாய் அதிகாரமிடும் தந்தை..
 அதிகாரமாய் அன்பு செய்யும் அன்னை..
சிறுவயது நண்பனாய் 
 சிரித்துப் பேசும் தம்பி..
அத்தை மகள் மாமன் மகனென
 கேலி பேசும் சுற்றத்தார்..
கண்டதும் கட்டித் தழுவி 
 ஆர்ப்பரிக்கும் நண்பர்கள்..
சொல்லிலடங்க சந்தோஷத்தில் 
 சொக்கிப் போன நிமிடங்கள்..
நீண்டு கொண்டே போன என் நினைவுகளுக்கு,
 முற்றுப் புள்ளி வைத்தார் நடத்துனர்..
     ”தாம்பரம் வந்தாச்சு இறங்குங்க”

Sunday 8 September 2013

8 காதல் கடிதங்கள் கடிதம் -1 : விதை




பிரியமுள்ள பூங்குழலி,
           துளி நேரம் உன்னை பிரிய மனமில்லாத அருள்மொழி எழுதிக்கொள்வது. நீ அங்கு நலமா? நலமில்லை நான் இங்கு உன்னை பார்த்த நொடியிலிருந்து, மனநலமில்லாமல் உலகத்தில் பற்றற்று உனையே ஒற்றியிருக்கிறேன்.
           பார்வையில் என் அன்பை பரிவர்த்தனை செய்துவந்த நான், உன் ஓரக்கருவிழி என்னை பார்த்ததில் தைரியம் கொண்டு காதிதத்தில் என் உள்ளத்தை சொல்ல முயல்கிறேன்.
           பசியில்லை, உறக்கமில்லை வேறேதும் நினைப்பில்லை உனையன்றி. தொட்டால் சுடும் தீ இப்போது என் நெஞ்சத்தில் கொழுந்துவிட்டு எரிகிறது, கண்களில் தீப்பிழம்பாய் உன் உருவம். குளிரான உன் புன்னகையை தந்து என்னை ஆட்கொண்டு ஆற்றிவிடு என்னோடு சேர்ந்துவிடு.
           பின்னால் நீ பிறக்கப் போகிறாய் இந்த கரையருகில் என்றுணர்ந்துத்தான் வைத்தாரோ இந்நதிக்கு பெயர் ‘பொன்னி’ பொன்னி தந்த பொன்னாலான சிலை நீயல்லவோ!
பூங்குழலி,
     பொன்னி படும் இடமெல்லாம் செழிக்கும் வளம்.
பொன் நீ,
     உன் பாதம் பட்ட இடமெல்லாம் மல்லிகை வனம்.

           பெண்ணிற்கு இலக்கணம் உன்னிடம் கண்டேன், பேரழகு சிலையே நெஞ்சில் உன்னை கொண்டேன், உனைத்தவிர வேறாரும் நினையேன் உயிர்வுள்ள வரை.
           எவரிடமும் சொல்லாத ஒரு சொல்லை, கொள்ளாத ஒரு உணர்வை, தராத என் இதயத்தை தந்துவிட்டேன் உனக்கு. என் அன்புக்கு உரியவளே பூங்குழலி,
நான் உன்னை காதலிக்கிறேன்.
I Love You.
    
                           உன் காதலுக்கு காத்திருக்கும்,
                                      அருள்மொழி.