Tuesday 17 September 2013

8 காதல் கடிதங்கள் கடிதம் 2 – துளிர்



பிரியமுள்ள பூங்குழலி,
            கிடைக்கப்பெற்றேன் உன் கடிதம். என் தாய் எவ்வளவு வலியயையும் எவ்வளவு மகிழ்ச்சியையும் என்னைப் பெற்றப் போது பெற்றாளோ அவ்வளவு வலியை உன் கடிதம் கிடைக்கும் முன்னரும் அவ்வளவு மகிழ்ச்சியை கிடைத்தப் பின்னரும் நான் பெற்றேன்.
கடைத்தற்கரிய, ஒரு வேளை கிடைக்கவே முடியாத வரமோ என்று நினைத்த அந்த காதல் பரிசை தந்துவிட்டாய் எனக்கு. காதல் கடலில் நீந்த உந்தன் துணைக்காக காத்திருந்தேன். வந்துவிட்டாய் இப்போது, விழுந்துவிட்டாய் காதல் கடலில் என்னோடு. இனி கரையேது, படகேது. காலம் முழுதும் நீந்தியே கிடப்போம்.

       பூங்குழலி, ஆசையை விதைத்தேன். அதற்கு தினமும் நீர் விடுத்தேன். இப்போது அது துளிர் விட்டது. உன்னை நெஞ்சில் தாங்குவேன். துயர் பட விடேன். ஆனந்தத்தில் மூழ்கடித்து அரவணைப்பேன். ஒரு கணம் பிரியேன். உனக்காகவே உயிர் வளர்ப்பேன்.

நித்தம் நித்தம் உன் கொலுசு சத்தம்
என் காதில் விழ வேண்டும்
கொலுசின் சத்தமா உன் இதழ் முத்தமா
என்ற சந்தேகம் எழ வேண்டும்

          பேருந்து நிறுத்தத்தில் நம் காதல் தொடங்குகிறது. என்ன ஒரு முரண். உன் விழி அம்புகள் என் நெஞ்சை பற்றிய நொடியே சுற்றமும் சூழ்நிலையையும் மறந்தேன். நீ பேருந்திற்காக காத்திருக்கிறாய். உன்னை நோக்கி நான் வருகிறேன். முதன் முதலில் உன்னோடு உரையாடப் போகிறேன். உன்னிடம் நான் முதலில் பேசிய வார்த்தைகள் மனதில் இல்லை. என்ன பேசினேன் என்று இன்றளவும் நினைவில்லை. ஆனால் உன் கண்களும் என் கண்களும் நேர்க்கோட்டில் பரிமாறிக்கொண்டது. அந்த கணம் நாம் இந்த பூமியில் இருக்கவில்லை என்ற எண்ணம் நிச்சியம்.

         அந்த புது உலகம் தந்த நம்பிக்கையில் தான் என் காதலை முன்பளித்த கடிதத்தில் தெரிவித்தேன். என் காதல் நம் காதலானது நீ தந்த கடிதத்தில். நம் காதல் நம் வாழ்வில் நீங்காதிருந்து உலகத்தின்று நீங்காமல் எப்போதும் உயிர் வாழ வேண்டும் என்பதே என் விருப்பம்.

      உயிரே பூங்குழலி, நான் கேட்ட காதலை தந்துவிட்டாய். இனி நீ கேளாத இன்பமும் காணாத உலகமும் உனக்கு சொந்தம்.

காதலுடன்,
அருள்மொழி.

1 comment:

  1. Enna oru romance... Deepan Sangathamil pulavare...neer vaalha..um kaathal vaalha

    ReplyDelete