Tuesday 30 April 2013

துளித் துளியாய் - 2


நட்பின் அதீதம்



உன் அளவில்லா அழகை

அப்பட்டமாய் நான் ரசித்தபோதும்

உன் கண்களை தவிர

வேறெதையும் பார்த்து நான் பேசியதில்லை.



நீ தொட்டுப் பேசியபோதும்,

தட்டிக் கொடுத்தபோதும்,

அரவணைத்து ஆற்றியபோதும் – நான்

கடுகளவும் கள்ளம் கொண்டதில்லை.



உன் பெயரையும்

என் பெயரையும் இணைத்து

ஏதேதோ புனைத்தபோதும்

நமக்குள் கலக்கம் இருந்ததேயில்லை.



நடுநிசியில் உனைப்

பார்க்க நினைத்தபோதும்,

விடியும் வரை உன்னுடன் கதைத்தபோதும்,

விடிந்தப்பின் உன் மடியில் சாய்ந்தபோதும்

நீ கோபம் கொண்டதில்லை

நான் தாபம் கொண்டதில்லை.



இன்னும் சொல்லப்போனால்

உன் படுக்கையறை வரை

எனக்கு அனுமதியிருந்தும்

என்நிலை நான் கடந்ததில்லை.



எனக்கென உதிர்க்கும்

புன்னகையை மறைத்து - இன்று

எனை கடந்து செல்கிறாய்,

எனக்கு தெரியும்,

இன்னும் ஐந்து நிமிடத்தில்

எனை அழைத்து

“சாரிடா, அத்தையும் மாமாவும் கூட வந்தாங்க ”

என சொல்வாய் என்று....

கருக்கு :

ஆசிரியர்  : பாமா
பிரிவு        : நாவல்
பதிப்பகம் : பாரதி புத்தாலயம்



தமிழகத்தின் தென் பிராந்திய பகுதிகளில் ஏதோ ஒரு கிராமத்தில் வாழ்ந்த பாமா என்னும் இந்த சகோதரி, தன் வாழ்நாள் முழுவதும் தன்னை விடாமல் துரத்திக் கொண்டே இருந்த சாதிய வன்கொடுமைகளின் தாக்கத்தால், தன் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை தொலைத்து நிராதராவாக நின்று கொண்டிருந்த சூழலில், கிறிஸ்த்துவ திருச்சபைகளை சேர்ந்த மாற்கு என்னும் சகோதரரின் உதவியுடன், தனக்கு ஏற்பட்ட அவலங்களில் இருந்து தன்னை மீட்டெடுப்பதற்கு மருந்தாக எழுத்தை நாடினாள். தன் சோகங்களை பேனாவுக்குள் இட்டு நிரப்பி வார்த்தைகளாக வடிவம் கொடுக்க, அதை வாசித்துப் பார்த்த நண்பர்கள், கண்டிப்பாக இதனை அச்சேற்றி புத்தக வடிவில் கொண்டுவர விருப்பம் தெரிவித்தனர். முதலில் அந்த ஆலோசனையை ஏற்க அஞ்சிய பாமா அவர்கள், பின்பு நண்பர்களின் வற்புறுத்தலால் அதற்கு ஒப்புக் கொள்ள, கருக்கு என்ற நாவல் உதயமாகி, தமிழ் இலக்கிய பெருவெளியில் பல சர்ச்சைகளையும், சலனங்களையும் ஏற்படுத்தியது.

இது முதன்முதலில் நாவலாக வெளிவந்த காலகட்டம் 1998. மொத்தத்துக்கு 100 பக்கங்களுக்கு மிகாமல் குறுநாவலின் வடிவம் கொண்டது இந்த கருக்கு. ஆனால் இந்த நாவலில் இடம் பெற்ற சாதிய கொடுமைகளின் சுமையைப் பார்க்கும் போது நாவலின் கணம் கூடித்தான் போகிறது. நாவல் வெளிவந்த போது தன் சொந்த கிராமத்திலேயே பயங்கரமான எதிர்ப்பை சம்பாதித்தார். தங்கள் இனத்தையும் தங்கள் ஊரையும் அசிங்கப்படுத்தி விட்டாள் என்று கூவி பாமாவை வசைபாடத் தொடங்கியது அவர்களது சமூகம். அதே நேரத்தில் நாவலில் இடம் பெற்றிருந்த சொல்லாடல் தமிழ் இலக்கியத்திற்கு புதிது. கிராமங்களில் இயல்பாக மக்களால் பேசப்படும் பேச்சுவழக்கில் எந்த விதமான மொழி பிறழ்வும், கலப்பும் இன்றி அப்படியே எழுதியதால், அந்த மொழிநடையை உட்கிரகித்துக் கொள்வதில் சிலருக்கு சிக்கல் ஏற்பட்டது. அதனாலும் ஆரம்ப காலத்தில் நாவலுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் அதன் கணம் பொருந்திய கருத்தியலை புரிந்து கொண்டு பலதரப்பிலும் அதைப் பற்றி சிலாகிக்க தொடங்க. ஒரு புதிய மொழி நடையுடன் கருக்கு பிரகாசிக்கத் தொடங்கியது.

இந்த கருக்கு நாவல், தலித் சமூகத்தைச் சேர்ந்த பாமா என்ற சகோதரியின் வாழ்வில் நடைபெற்ற தீண்டாமை கொடுமைகளைகளால் கட்டியமைக்கப்பட்டது மட்டுமல்ல. அதன்வழியே ஒரு சமூகத்தின் இழிநிலையை மக்களுக்கு எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்திருக்கிறது. இதனை மூன்று பிரிவுகளாக ஆசிரியர் கையாண்டுள்ளதாகவே தோன்றுகிறது. பள்ளி செல்லும் பிராயத்தில் தீண்டாமை கொடுமை அவரை எவ்வாறு தீண்டியது. அப்போது ஊரில் நிலவிக் கொண்டிருந்த சூழல் என்ன என்பதையும், வெளியூர் சென்று கல்வி கற்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள் என்ன என்பதையும், படித்து பட்டம் பெற்று வேலை செய்த கால கட்டங்களிலும், கன்னியாஸ்திரி மடங்களில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் முயற்சித்தப் போதும் அனுபவித்த கொடுமைகள் என்ன என்பதையும் அந்த வழி சற்றும் குறையாமல் எழுத்தில் வடித்துள்ளார் ஆசிரியர்.

பள்ளி செல்லும் காலத்தில், பள்ளி முடிந்து வீட்டுக்கு கிளம்புவதற்கு முன்னர் பள்ளியிலேயே மாணவ மாணவிகள் சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருக்க, அவர்களின் விளையாட்டு மதில் சுவர் பக்கம் சாய்ந்து வளர்ந்திருக்கும் தென்னை மரத்தின் மீது திரும்புகிறது. அதன் மீது ஏறி விளையாடத் தொடங்குகின்றனர். விளையாட்டின் சுவராஸ்யத்தில் அனைவரும் அந்த சிறிய தென்னை மரத்தில் பிஞ்சு விட்டிருந்த தேங்காய் மீது கைவைக்க.. அது பாமா கைவைக்கும் போது மரத்திலிருந்து கீழே விழுந்துவிடுகிறது. அனைவரும் பயந்து ஓடிவிட, பாமாவும் ஓடி விடுகிறாள். அடுத்த நாள் காலை ப்ரேயர் ஹாலில் தலைமையாசிரியர் “உன் சாதிப் புத்திய காட்டிட்டியே.. ஏண்டி இளநீய புடுங்குனே.. ஸ்கூலுக்குள்ள வராத.. வெளிய போ…” என விரட்டுகிறார். பாமா தான் அறிந்து ஏதும் தவறு செய்யவில்லை என்பதற்கு சாட்சியாக அவர் உதிர்க்கும் கண்ணீர் மட்டுமே அங்கு நிற்கிறது. இது அவர் வாழ்க்கையில் நேரிடையாக ஏற்பட்ட முதல் அவமானம். அதுவும் நன்கு படித்து பட்டம் பெற்ற ஒரு தலைமையாசிரியரின் வாயில் இருந்த வந்த அந்த வார்த்தைகளை அவரால் அவ்வளவு எளிதாக மறக்க முடியவில்லை.

தீண்டாமை என்பதை அறியாத அந்த பிஞ்சு வயதில், அவர் தீண்டாமை, தொட்டா தீட்டாம்… என்கின்ற வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டது வேறொரு சந்தர்ப்பத்தில்… பள்ளி விட்டு வரும் வழியில் தெருவோரம் இருக்கும் பலகாரக் கடைகளையும் வித்தை காட்டுவோரையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வீடு வந்து சேர்வது பாமாவின் வழக்கம்.. அன்றும் வழக்கம் போல் வீடு நோக்கி வந்துகொண்டிருக்கும் போது, தலீத் சமூகத்தைச் சேர்ந்த வயதான பெரியாள் ஒருவர் தனது வலதுகையில் இருந்த ஒரு பொட்டணத்தை அந்த நூல் சரடைப் பிடித்து தூக்கி வந்து கொண்டிருந்தார். அதைப் பார்த்த சிறுமி பாமாவுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வருகிறது. அந்தப் பொட்டணத்தை உற்றுப் பார்த்தால் அது ஒரு வடை மடிக்கப்பட்ட பொட்டணம் என்பதற்கு சான்றாக அதில் எண்ணெய் அப்பிக் கொண்டிருக்க.. அதை நூல் சரடை பிடித்துக் கொண்டே சென்று நாக்கியர் கையில் கொடுத்து விட்டு கூனி கும்பிட்டு நிற்கிறார் அந்த முதியவர்.

பாமாவுக்கோ சிரிப்பு தாளமுடியவில்லை. இவ்வளவு வயதாகியும் சின்ன பிள்ளை மாதிரி நூலைப் பிடித்து பொட்டணத்தை பிடித்து விளையாடிக் கொண்டு அவர் வந்த விதத்தை தன் வீட்டில் சென்று ஸ்லாகித்துச் சொல்ல.. வீட்டில் தாய், அண்ணன் என்று யார் முகத்திலும் சிரிப்பில்லை… “நாமெல்லா அத தொடக்கூடாதாம்.. தொட்டா தீட்டாம்…” என்று முகத்தில் அடித்தாற் போல் பாமாவின் தாய் சொல்லிவிட்டு விருட்டென்று வீட்டுக்குள் செல்ல பாமாவுக்கும் அதற்குமேல் சிரிப்பு வருவதில்லை. பெரியவர் நூல் பிடித்து தூக்கி வந்த அந்த காட்சியை கண்ட நாளில் தான் பாமா தெரிந்து கொண்டாள், “தீண்டாமை பெருங்குற்றம்” என்பது இன்னும் நூல் அளவில் தான் இருக்கின்றது என்பதை.

சில நேரங்களில் பாமா தன் பாட்டியுடன் உயர் சாதியினரின் வீட்டுக்குச் வேலைக்குச் செல்லும் போது, அங்குள்ள பத்து வயது நிரம்பாத சிறுபிள்ளைகள் கூட தன் பாட்டியை பேர் சொல்லி அழைப்பதும், அதை பாட்டி மாத்திரம் அன்றி அந்த வீட்டாரம் கண்டு கொள்ளாமல் இருப்பதைப் பார்த்தும் நெஞ்சம் அதிர்ந்திருக்கிறாள். மேலும் அவர்கள் கூலியாகக் கொடுக்கும் கஞ்சியைக் கூட வாங்க, வீட்டு கால்வாயின் ஓரம் சட்டியை வைத்துவிட்டு காத்திருப்பதும், அதில் பழங் கஞ்சியை ஊற்றும் அந்த வீட்டுப் பெண்மணி, சட்டியில் தன் கை ஒட்டாதவாறு அகன்று நின்று அதை ஊற்றுவதும் மனதை போட்டு பிசைய.. அது அவளுக்குள் கேள்வியாக.. அதற்கு பாட்டியின் பதில் இதுதான். “நாமெல்லாம் தாழ்த்தப்பட்ட சனங்க தான.. காலங்காலமா நமக்கு கஞ்சி ஊத்துற மகராசங்க.. அவுங்கள அப்புடி பேசக்கூடாது….”

இதில் கவனிக்கவேண்டிய ஒரு முக்கியமான விசயம்.. நாம் அடுத்த மக்களை அடக்கி ஆளப் பிறந்தவர்கள் என்கின்ற எண்ணமும், நாம் அடங்கிப் போகப் பிறந்தவர்கள் என்கின்ற எண்ணமும் இரு தரப்பிலும் சிறுவயதிலேயே மனதில் அறியாமல் விதைக்கப்படுகின்றது என்பதுதான். இந்த தவறு இன்றுவரை கூட நடந்து வருவதுதான், நாமெல்லாம் நாகரீகம் அடைந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதை கேள்விக் குறியாக்குகிறது.

இவை தவிர்த்து படிக்க வெளியூர் செல்லும் இடங்களிலும், வேலைக்கு சேரும் இடங்களிலும், கன்னியாஸ்திரியாக போகும் இடங்களிலும் இவர் தன் அடையாளங்களை மறைத்து வாழும் சூழலும் ஏற்படுகின்றது. தான் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவள் என்பது தெரிந்துவிட்டால் பிறர் தன்னைப் பார்க்கும் கேலியான பார்வைகளில் இருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் ஒடுங்கிப் போகும் காலகட்டமும் நாவலில் கடந்து செல்கிறது.

பால்ய பிராயத்தில் கிறிஸ்துவ சபைகளில் கடவுள் மீது நம்பிக்கை கலந்த பயம் ஏற்படுத்துவதற்காக கூறும் சில கட்டுக்கதைகள் எப்படி பயத்தை உண்டாக்கியது என்பதும், அதில் இருந்து அவர்கள் மீண்டு வருவதும் கலகலப்பான பக்கங்கள். குறிப்பாக கோயில் தோட்டத்தில் யாரும் அறியாமல் பறித்த மலர்களை ப்ளக் பாய்ண்டில் சொறுகி, ஷாக் அடித்ததை கடவுள் கொடுத்த தண்டனையாக இருக்கும் என்று எண்ணுவதும், கோயிலில் கொடுக்கப்படும் நன்மய கையால் தொட்டால் கை முழுவதும் ரத்தம் ஒட்டிக்கொள்ளும் என்று பயமுறுத்தியதையும், கடிக்கக்கூடாது என்று சொல்வதையும் சோதித்துப் பார்க்கும் இடங்களை கூறலாம்.

மேலும் சாலியருக்கும் பறையருக்குமான கல்லறை தொடர்பான சண்டையின் போது போலீசின் அட்டூழியமும் வாச்சாத்தியின் சம்பவத்தை நினைவுகூற வைப்பவை. அந்த காலகட்டத்தில் போலீசுக்கு பயந்து ஒரு மாத காலமாக ஆண்களே ஊரில் இல்லாததால், தாங்களே வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றிய பெண்களின் சாமர்த்தியமும் பாராட்ட வேண்டியது. மேலும் பள்ளர், பறையர் இரண்டு சமூகமுமே தாழ்த்தப்பட்ட சமூகமாக இருப்பினும் ஓயாமல் அவர்களுக்கு இடையே நடக்கும் சண்டைகளால் ஆதாயம் அடைவது யார் என்னும் விடை தெரியா கேள்வியையும் நாவல் எழுப்பிச் செல்கிறது.

குறை என்று பார்த்தால், கன்னியாஸ்திரி மடங்களில் சேர்ந்து பிற்பாடு நாம் நினைத்தது எதையும் இங்கு செயல்படுத்த முடியாது என்ற வெறுப்பில் வெளியேறும் பாமாவுக்கு, வாழ்க்கையின் மீதான நம்பிக்கையும் பிடிப்பும் ஒரேயடியாக போய்விட்டது என்பது ஏற்றுக்கொள்வதற்கு சற்று கடினமாக இருப்பதால் அவை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை. மேலும் எழுதிய விசயங்களே சில இடங்களில் மீண்டும் எழுதப்பட்டிருப்பதும் வாசிப்பிற்கான ஒரு தடையாக உள்ளது. மேலும் நிலவியல் சார்ந்த குறிப்புகள், கதை எங்கு நடந்தது என்பது போன்ற விவரணைகள் தெளிவாக கொடுக்கப்படாமல் தவிர்க்கப்பட்டிருப்பது ஏன் என்ற குழப்பமும் தோன்றுகிறது. மேலும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை அப்படியே சொல்வதாகக் கொண்டாலும், பிற சாதிய மக்களை கேலி செய்வது போல் அமைந்திருக்கும் சில இடங்கள் கண்டிப்பாக அவர்களை கோபப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டுள்ளதோ என்றும் ஐயுறத் தோன்றுகிறது. அதை தவிர்த்து இருக்கலாம் என்பது என் எண்ணம்.

சாதியத் தீண்டல்களை நீங்கள் உங்கள் வாழ்வில் நேரடியாக அனுபவித்தவர் இல்லை என்றாலும் பிறருக்கு நிகழ்ந்ததைப் பார்த்தது இல்லை என்றாலும் கூட நீங்கள் கண்டிப்பாக இந்த நாவலை வாசிக்கவும். ஏனென்றால் சாதிய தீண்டாமையின் கூறுகள் நம் கண்ணில் மண் தூவி எப்படி கிளை விரித்திருக்கின்றது என்பதை கண்டுகொள்ள இந்த ”கருக்கு” நாவல் கண்டிப்பாக உதவக்கூடும். உதாரணத்துக்கு உங்கள் ஊரில் அதிக அறிமுகம் இல்லாத ஒருவர் உங்களிடம் பேசும் போது, “தம்பி எந்த தெரு…” என்று கேட்டிருக்கிறாரா… அந்த கேள்வியின் உள்நோக்கம் நீங்கள் எந்த சாதியை சேர்ந்தவர் என்று கண்டு கொள்வதுதான். மேலும் உங்கள் ஊரின் சுற்றமைப்பை எடுத்துப் பாருங்கள். அதில் பழங்காலத்தில் கட்டப்பட்ட பள்ளிகூடங்கள், கோயில்கள், நகராட்சி அலுவலகங்கள், தபால் நிலையங்கள் இவை எல்லாம் எந்தெந்த தெருக்களைச் சுற்றி பெரும்பாலும் அமைந்திருக்கிறது என்பதைப் பார்த்தாலே சாதி நம் கண் மறைவில் எப்படி மறைந்திருக்கிறது என்பதை நாம் கண்டுகொள்ளக் கூடும்.

Monday 29 April 2013

துளித் துளியாய் - 1



துளித் துளியாய் இது என்னுடைய குறுங்கவிதைகளின் தொகுப்பு. இனி இந்த பகுதியில் நீங்கள்  இது போன்று நிறைய துளிகளை எதிர்பார்க்கலாம். இவைகள் வாசகர்கள் மத்தியில் பெறப்போகும் வரவேற்ப்பினைப் பொருத்து பிற்காலத்தில் புத்தகமாக வெளியிட எண்ணியிருக்கிறேன்.

இதில் நிறைய இடங்களில்
காதலிருக்கும், சாதலிருக்கும்,
ஆசையிருக்கும், வாழ்க்கையிருக்கும்
கோபமிருக்கும், வாதமிருக்கும்
தேடலிருக்கும், ஊடலிருக்கும்
குற்றமிருக்கும், குறையுமிருக்கும்
மிச்சமும் தீரும் வரை துளிகள் தூறிக்கொண்டே இருக்கும்....


Sunday 28 April 2013

பாவ நகரம் - VIII

_________________________________________________________________________________

சாரதா சிட் பண்ட் என்ற அமைப்பு மேற்கு வங்கத்தில் மக்களிடம் கவர்ச்சி கரமான திட்டங்களை சொல்லி 500 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்துள்ளது.
                                                                                                  -செய்தி
_____________________________________________________________________________________________

பகுதி 7 காவல் நிலையம்:
கமிஷனர் அலுவலகத்தில் குண்டு வெடித்தை அடுத்து தற்காலிகமாக பகுதி 7 காவல் நிலையத்தில் கமிஷனர் அலுவலகம் செயல்பட துவங்கியருந்தது. அந்த காவல் நிலையம் சற்று பெரிதென்பதாலும் அருகிலேயே ஒரு கட்டிடத்தை வாடகைக்கும் எடுத்து கமிஷனர் அலுவலகம் செயல்பட இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக இரண்டு காவலர்கள் உரையாடிக் கொண்டிருந்தனர். தரண் தனக்கென ஒதுக்கப்பட்ருந்த அறையில் அம்ர்ந்து வங்கி சம்பவம் குறித்த கோப்புகளை பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு எதிரே ஒரு அறையில் ஸ்ரீதர் அமர்ந்தப் பட்டிருந்தான்.
அவனைப் பார்ப்பதற்காக ஜோசப் சார், சபேசன் வெளியே காத்துக் கொண்டிருந்தனர். வெகு நேரம் போராடியும் அவர்களால் ஸ்ரீதரைப் பார்க்க முடியவில்லை. இறுதியாக ஒரு காண்ஸ்டேபிளைப் பிடித்து அவனுக்கு 500 ரூபாய் லஞ்சம் கொடுத்து, ஸ்ரீதரிடம் ஒரு 5 நிமிடம் பேச வாய்ப்பு கிடைத்தது. ஸ்ரீதர் மிகவும் தெளிவாகவே இருந்தான். சபேசன்தான் கலங்கிப் போயிருந்தார்.
நான் எந்தத் தப்பும் பண்ணலப்பா? என் அழுவுறீங்க?
சபேசன் இன்னும் குலுங்கி குலுங்கி அழுதார்.
அப்பா எத்தனை நாளானாலும் நான் தப்பு பண்ணலேனு நிருபிச்சடலாம் பா. நீங்க ஜாமீன்ல எடுக்க மட்டும் ட்ரை பண்ணுங்க
அப்போது அங்கு வந்த அந்த காண்ஸ்டேபிள் சார், கை நீட்டி காசு வாங்குனதால சொல்றேன். ஜாமீன்லாம் கொடுக்க குறைஞ்சது ரெண்டு மூனு மாசமாவது ஆகும்
ஏன்ப்பா? என்றார் ஜோசப் சார்.
நேத்து நடந்தது தெரியும் இல்ல. இவன நேத்தே கோர்ட்ல ஒப்படைக்காத்துக்கு அதுதான் காரணம். இது வேற கொல கேசு எல்லா ஆங்கிள்லயும் விசாரிப்பாங்க எனக் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
ஜோசப் சார் அவனை தனியே அழைத்தார். உன்னோட இந்த பிறந்த நாள் ரொம்ப முக்கியமான பிறந்த நாள்.” சற்று நிறுத்தியவர் சிறிது யோசித்தார். “அத நீ ஜெயில கழிக்கிறத நான் விரும்பல"
அதுக்காக, என்ன தப்பிக்கவா முடியும்”
ஆமா”
என்ன என்பது போல் அதிர்ந்தான்ஸ்ரீதர. “செய்யாத தப்புக்காக இன்னொரு தப்பு செய்ய சொல்றீங்களா?. என்னால முடியாது.”
அவனை அருகில் அழைத்த ஜோசப் சார் அவனுடைய காதில் ஏதோ ரகசியம் சொன்னார். அதைக் கேட்டவுடன் ஸ்ரீதர் அதிர்ந்து நின்றான்.
இன்னும் எல்லாத்தையும் சொல்றேன். நீ சாதாரண ஆளு இல்ல. இதப் பத்தி தெரிஞ்சிக்கனும்னா, நான் சொல்ற இடத்துக்கு வா. வேணாணா விட்ரு"
அதற்குள் அந்த காண்ஸ்டேபிள் வந்து கோர்ட்டுக்கு போகனும் எனக் கூறவே ஸ்ரீதர் யோசனையுடன் உள்ளே நுழைந்தான். சிறிது நேரத்தில் மேலும் சில கைதிகளுடன் இரண்டு காண்ஸ்டேபிகளும் வெளியே வந்தனர். அந்த நிலையத்தின் உதவி ஆய்வாளரும் வர அவர்களை ஏற்றிக் கொண்டு அந்த ஜீப் புறப்பட்டது. அதில் பின்னால் அமர்ந்திருந்த ஸ்ரீதரின் கண்கள் இன்னும் அதிர்ச்சியை தேக்கி வைத்துக் கொண்டு ஜோசப் சாரையே பார்த்துக் கொன்டிருந்தது.


ரகு அந்த இடுகாட்டில், ஒரு கல்லறையின் முன் நின்றிருந்தான். அந்த வங்கியை கொள்ளையடித்த நால்வரில் ஒருவன் ரகு. அந்த கல்லறையில் ஷாலினி என்று எழுதப் பட்டிருந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு:

ரகு வழக்கம் போல் வேலைக்கு செல்லும் போது, ஷாலினிக்கு போன் செய்தான்.
சொல்லுடா செல்லம் எங்க இருக்க?” ஷாலினி வழக்கமான உற்சாகத்துடனேயே பேசினாள்.
இப்பதான் ஆபிஸ் கிளம்பறேன்"
Express Avenueவில் தான் அவன் மேனஜராக வேலை செய்து கொண்டிருந்தான்.
சார், கல்யாணத்துக்கு அப்புறம் இவ்வளவு லேட்டாலாம் வரக்கூடாது"
சரிங்க மேடம். எங்க இருக்கீங்க?"
ஒரு வேலையா நானும் வெளிய போய்ட்டு இப்பதான் வீட்டுக்கு பஸ்ல போய்ட்டு இருக்கேன்"
பள்ளியிலேயே ஆரம்பித்தக் காதல் ஏழு வருட காதல் அது. ஒரு வழியாக வீட்டில் சம்மதம் வாங்கி இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம் நிச்சயம் செய்திருந்தார்கள். ஷாலினி ஒரு பள்ளி ஆசிரியையாக பணி புரிந்து வந்தாள்.
சரி, சிக்கனல் எல்லாம் பாத்து வண்டி ஓட்டு. ஒவர் ஸ்பீடு போகாத.நான் அப்புறமா பேசறேன்"
"சரிங்க டீச்சரம்மா" என்று போனை வைத்தான்.ரகுவுக்கு இதுதான் அவளுடன் பேசுவது கடைசி எனத் தெரியாது.
ஷாலினி சென்ற பேருந்தில் அவளுக்கு முன் இருக்கையில் ஒரு கைதி அமர்ந்திருந்தான். அவனுடன் ஒரு காண்ஸ்டேபிளும், அதற்கு முன் இருக்கையில் ஒரு காண்ஸ்டேபிளும் அமர்ந்திருந்தனர்.கைதியுடன் அமர்ந்திருந்த காண்ஸ்டேபிகள் அவனுடன் ஏதோ பேசிக் கொண்டு வந்தான். பேருந்து ஒரு சிக்னலில் நின்றது.
அப்போது திடீரென ஒரு கும்பல் பேருந்தில் கையில் ஆயுதங்களுடன் ஏறியது. வேகமாக அந்த கைதியை நோக்கி சென்று அவனை தாக்க ஆரம்பித்தது. அந்த இரண்டு காண்ஸ்டேபிள்களும் ஒதுங்கி நின்று கொண்டனர்.

ஷாலினி அதிர்ச்சி அடைந்தாள். அவர்களை நோக்கி "ஏன் சும்மா நிக்கிறீங்க?” எனக் கத்தினாள். அவர்கள் இவளை காதில் வாங்கி கொள்ளவே இல்லை. கூட்டம் பின் வழியாக இறங்கி ஓட ஆரம்பித்தது. இவளுக்கு அவ்வாறு செல்ல மனதே இல்லை. சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. வேகமாக பேருந்திலிருந்து கீழிறங்கி, அங்கிருந்து தன் செல்போன் கேமரா மூலமாக அந்த்க் கொலைப் படலத்தை படம் பிடிக்க ஆரம்பித்தாள்.

இதை கவனித்த ஒரு காண்ஸ்டேபிள், கொலை செய்து கொண்டிருந்த ஒருவனுக்கு சிக்னல் செய்ய, அவன் இவளைப் பார்த்தான். காண்ஸ்டேபிள்களும் அவர்களுடன் கூட்டு என்பது அவளுக்கு உரைக்க ஆரம்பித்தப் போதுதான் தான் மாட்டியிருந்த சிக்கல் அவளுக்கு புரிந்தது. அனைத்தையும் உணர்வதற்குள் இரண்டு கத்திகள் அவளை நோக்கி பாய்ந்தன.

ரகுவுக்கு ஒரு மணி நேரம் கழித்தே விஷயம் புரிந்தது. எப்போதும் தப்ப பாத்தா தட்டிக் கேக்குறனு எவனாவது பொண்ணுங்கள கிண்டல் பண்றவன், பிக்பாக்கெட் அடிக்கிறவன எல்லாம் போலீஸ்ல பிடிச்சு கொடுத்திருக்கா. ஆனா இவ்வளவு பெரிய பிரச்சனையில் இப்படி போய் மாட்டிக் கொள்வாள் என எதிர்ப்பார்க்க வில்லை. மருத்துவமனையில் அவள் உடலைப் பார்த்ததும் ரகு கதறி அழ ஆரம்பித்தான்.

இன்று:

அவனுக்காக தலைவன் ஒரு இரு சக்கர வாகனத்தில் காத்துக் கொண்டிருந்தான். இவன் வெளியே வந்தவுடன் அதை இவனிடம் கொடுத்து விட்டு, அவன் முகம் ஞாபகம் இருக்குல்ல என கேட்டு விட்டு சென்று விட்டான். அதை எப்படி மறக்க முடியும்.

ஷாலினி கொலை குறித்து நடந்த வழக்கில் அவள் அந்த கைதியின் காதலி என்றும், சிறையிலிருந்து கோர்ட்டுக்கு செல்லும் பேருந்தில் இருவரும் பேசிக் கொண்டே வந்ததாகவும், தாங்கள் எவ்வளவு சொல்லியும் இருவரும் கேட்க வில்லை எனவும், அந்த இரண்டு காண்ஸ்டேபிகளும் சாட்சி சொன்னார்கள். முன் விரோதம் காரணமாக ரவுடியும், அவனது காதலியும் கொலை என அனைத்து தினசரிகளும் கதறின.

அந்த இருவரில் ஒருவன் நேற்று நடந்த குண்டு வெடிப்பில் கொல்லப் பட்டு விட்டான். மற்றொருவன் போக்குவரத்து காவல் துறைக்கு மாற்றப்பட்டிருந்தான்.
ஷாலினிக்காக...” எனக் கூறிக் கொண்டே அந்த இரு சக்கர வாகனத்தை உசுப்பி வேகமாக பறக்க ஆரம்பித்தான்.



புகைப்படங்கள்




Saturday 27 April 2013

காதல் காலங்கள் - முகவுரை



காதல் காலங்கள்..


எங்கு நோக்கினும் ஒரே வாகன இரைச்சல்,எதிர் வரும் மனித முகங்களைக் கூட , ஒரு கணம் காண நேரமில்லாது , மக்கள் அலுவலகங்களுக்கோ , அன்றாட அலுவல்களுக்கோ அறக்கப் பறக்க சிதறி ஓடிக் கொண்டிருக்கும் காட்சியினை , ஏதோ வேற்று கிரகத்திலிருந்து வருகை தந்தவனைப் போல் முகம்  சுளித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான் கௌதம் .

             "
என்னடா?" என்ற நண்பனின் குரல் அவனை, மீண்டும் இவ்வுலகிற்கு கொண்டு சேர்த்தது. சலித்துக் கொண்டே "பஸ் இன்னும் வரலையே டா , முதல் நாளே காலேஜ் கு லேட் தா போக போறோம்"  என்றவன் மீண்டும் வெற்று சாலையினையே உற்று நோக்கினான் . அவன் நண்பனோ சற்றும் அசரதவனாய் , "உன்னோட அவசரத்துக்கு பஸ் வந்துருமா கொஞ்சம் வெயிட் பண்ணுடா " என்றவன் வாக்கியத்தை முடிக்கும் முன்னரே பேருந்து ஒன்று பக்கம் வந்து பட்டென்று நின்றது . கௌதமின் இறுகிய முகத்தை பேருந்தின் தரிசனம் புன்னகயினால் அலங்கரித்து விட்டது .

                 
சக பயணிகளுடன் ஏதோ மல்லுக்கட்டிக் கொள்வதைப் போன்று முட்டி மோதி பேருந்தின் ஓரமாய் ஒரு இடத்தைப் பிடித்து , மூச்சு வாங்கிய படியே நண்பனைக் கண்டு கௌதம் ஒரு குறும் புன்னகை பூத்தான் . தட தட வென சக்கரங்களைச் சுழற்றி ஓட ஆரம்பித்த பேருந்து , ஓரிரு அடிக்குள் மீண்டும் நின்றது . "இப்ப என்னடா?" என்று நண்பனை வினவிய படியே பேருந்தின் வெளியே எட்டிப் பார்த்த போது , " நந்தினி சீக்கரமா வா, பஸ் கெளம்பப்  போகுது ..!" என்று தோழி ஒருத்தி கூச்சலிட , ஓட்டமும் நடையுமாய் ஒருத்தி ஓடி வந்து பேருந்துப் படிகளில் கால் வைத்தவுடன் பேருந்து மீண்டும் சக்கரங்களைச் சுழற்றி பயணத்தை ஆரம்பித்தது .

             
அவசர அவசரமாய் பேருந்தினுள் ஏறி , கம்பி ஒன்றைப் பிடிக்க கைகளை நீட்டும் வேகத்தில் யாரோ ஒருவர் பயணச் சீட்டிற்காக கைகளில் வைத்திருந்த சில்லரையினை கீழே தட்டினாள் நந்தினி . "I am extremely sorry" என்று அவள் கூறி தலை திருப்பும் வேலையில் அவள் விழிகள் கௌதம் அவளை முறைத்துக் கொண்டிருப்பதைக் கண்டன. மீண்டும் அவள் "I am sorry " என்று கூற கோபத்தினை அடக்கிக் கொண்டு , பெயரளவில் மட்டும் "Its ok" என்று கூறி முடிக்கும் தருணத்தில் , நந்தினி தடுமாறி பேருந்தின் வெளிய தவறி விழப் பார்த்தாள் , அருகிலிருந்த கௌதம் பட்டென்று அவள் கைகளைப் பிடித்து உள்ளே இழுத்தான் . பதற்றத்திலிருந்து மீளாத நந்தினி ,"" என்று வெறித்த கண்களுடன் கூறினாள் . கௌதம் ,"உள்ள போய் பத்தரமா நில்லுங்க " என்று கூறி விட்டு தன் நிறுத்தம் வந்தவுடன் , நண்பனுடன் இறங்கிக் கல்லூரி வளாகத்தினுள் நடக்க ஆரம்பித்தான் .

               
நண்பன் "டேய் கௌதம்" என்று ஆரம்பித்த உடனே , " கொஞ்சம் அமைதியா வரயா கீழ விழும் போது பாத்துட்டு சும்மாவா இருக்க முடியும் " என்று வாயை அடைக்க , பதிலுக்கு அவன்  " ம் .. ம் .." என்று சிரித்துக் கொண்டு கௌதமின் தோள்  மீது கைகளை போட்ட படி நடந்து சென்றான் . தூரத்தில் பேருந்து புறப்படும் ஓசை கேட்டவுடன் , கௌதம் பேருந்தினை நோக்கி அக்கரைப் பார்வை ஒன்று வீசினான் .

       "
அவ உன்ன தாண்டி பாக்கறா " என்று பக்கம் இருந்த தோழி நந்தினியின் தோள்களைத் தட்ட , அவள் கோபமாய் "அடிதா வாங்கப் போற " என்றாள் . முறைத்துக் கொண்டே , "சரி சரி இப்பவாவது பாத்து நில்லு " என்ற தோழியின் பேச்சைக் கண்டு கொள்ளாதவளாய் , நண்பனுடன் நடந்து சென்ற கௌதமை அவள் விழிகள் உற்று நோக்கின . பார்வைப் பகிர்வின் பகைவனாய் பேருந்து புறப்பட்டது ..

                                                                                 
காட்சிகள் தொடரும் ..