Thursday 18 April 2013

காலத்தின் கவிதைகள்





முன்னங்கால்களில் மண்டியிட்டு
இலைகள் பிடுங்கும்  குட்டி ஆடு

தன்னைத் தானே சுற்றிக் கொண்டு
அன்பைச் சொல்லிடும் மாடப் புறா

கோவில் தீபத்தை ஊதி அணைத்திட
முரண்டு பிடிக்கும் தென்றல்

சத்தமின்றி அடுப்படி நுழைந்து
பானைகள் உருட்டும் பூனை

பதுங்கி பதுங்கி பலகாரம்
ருசிக்கவரும் சுண்டெலி

ரகசியம் சொல்லக் காதைத்
தேடி வரும் குழவி

வெற்றிலை வாயில் கேள்விகள்
துப்பும் கிழவி

கண்ணாடியில் தன்னையே சண்டைக்கு
இழுக்கும் குரங்கு

முருங்க மரங்களில் பூக் கொறித்து
தாவும் அணில்கள்

சகதிக் குட்டையில் முங்கிக் குளிக்கும்
சிட்டுக் குருவி

வாசப்படியை கூட்டி தெளித்து
கோலமிடும் சிறுமி

நட்சத்திரங்களை எண்ணிவிட்டு
கணக்கு சொல்லும் சிறுவன்

வாடிப்போகியும் ஆளை 
மயக்கும் மல்லிகை

இரவில் தெருவெங்கும் 
மணக்கும் வேப்பம்பூ

ஜன்னல் நிலவை 
வம்புக்கு இழுக்கும் கவிஞன்

பொயாய் கடித்து
விளையாடும் குட்டி நாய்கள் 

எருமைக்கு காது குடையும்
காக்கை உறவுகள்

சத்திரத்தில் கதை அளக்கும்
சாமானிய பெருசுகள்

இழவு வீட்டில்
கும்மாளமிடும் சிறுசுகள்

நையென பெய்யும் அடைமழை
சட்டென மின்னும் கத்தரி மின்னல்

இப்படியாய் நீங்களும்
ரசித்திருப்பீர்கள்
கடந்து வந்த
காலத்தின் கவிதைகளை....


விஜய் Che

4 comments:

  1. காலத்தின் கவிதைகள்
    alagu..

    ReplyDelete
  2. நிலவை வம்பிழுப்பதே இந்த கவிஞர்களுக்கு வேலையாய் போய்விட்டது...

    ரசித்துணர்ந்து மகிழ்ந்த வரிகள்......

    ReplyDelete