Friday 25 October 2013

துளித் துளியாய் - 33


பாவ நகரம் - XIII



எல்லா பெருநகர மக்களுக்கும் இருக்கின்ற ஒரு விநோத பழக்கம் தான் பாவ நகர மக்களுக்கும் இருந்தது. ஒரு மூலையில் இருப்பவன் மற்றோரு மூலையில் போய் வேலை பார்ப்பது தான் அது. அவ்வாறு செல்ல அம்மக்கள் பெரும்பாலும் உபயோகிப்பது பாவ நகர போக்குவரத்து கழக பேருந்துகளை தான். ஒரு நாளைக்கு சுமார் இரண்டு லட்சம் மக்கள் இந்த வசதியை பயன் படுத்தி வருகின்றனர்.

செய்தி தாளில் இருந்ததை படித்து பெருமிதப் பட்டுக் கொண்டார் ஒரு மாநகரப் பேருந்து பணிமனை மேற்பார்வையாளர். சூரியன் வெளி வர ஆரம்பித்திருந்தான்பேருந்துகள் பணிமனைகளை விட்டு வெளியே செல்ல ஆரம்பித்திருந்தன. அப்போது ஒரு ஓட்டுநர் அவரிடம் வந்தார். மேற்பார்வையாளர் அவனைப் பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொண்டார். சில மாதங்களுக்கு முன் அதிவேகமாக ஆபத்தான் முறையில்  பேருந்தை ஓட்டியதாக அவனை பணியிடை நீக்கம் செய்திருந்தனர்.

எப்படிப்பா இருக்க?” என்று ஆரம்பித்தான் மேற்பார்வையாளர்.

என்ன சார் இது. வேகமா போனதுக்கு போய் இப்படி பண்ணீட்டாங்க

நீ வேகமா போனாலும் பரவாயில்ல பா, அடுத்தவன உன்னால போயிட்டா யாரு பதில் சொல்றது

சரி சார் நல்ல வண்டியா குடுங்க, நல்லா பொறுமையா ஒட்றேன்

சற்று நேரம் யோசித்த மேற்பார்வையாளர் ஒரு தொடர் வண்டியை அவனிடம் தந்தார். அவனே நினைத்தாலும் அதை வேகமாக ஓட்ட முடியாது.ஒரு நடத்துநரை அவனுடம் அனுப்பி விட்டு அடுத்த நபருக்கு சென்றார் அவர்.


            தரணும் கண்ணனும் தங்களது ஜீப்பில் ஏறி வேகமாக அருகிலிருந்த பணிமனைக்கு செல்ல ஆரம்பித்தனர். போகும் வழியிலேயே அனைந்து பணிமனைகலுக்கும் தகவல் சொல்லி பேருந்து வழியில் பழுதானால் அங்கேயே சென்று பழுது பார்க்கும் வண்டிகளை தயார் படுத்த செய்தனர். அனைத்து பேருந்து பணிமனைகளிலும் ஒன்று அல்லது இரண்டு வண்டிகளே இருந்தன. அவையும் பழுதடைந்து இருந்தன. நகரின் அனைத்து  முக்கியமான இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். அனைத்து தீயனைப்பு நிலையங்களும் தயார் நிலையில் வைக்கப் பட்டன.


            உறக்கம் கலைந்து எழுந்த ஸ்ரீதர், தனது உடலில் ஏதோ மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர்ந்தான். தூக்க கலக்கம் இன்னும் கண்களில் இருந்தது. அதே போன்று ஏதோ மயக்கமாக இருந்தது. கண்களை மூடி மீண்டும் உறங்கத் தொடங்கினான்.

            தொடர் வண்டியை எடுத்துக் கொண்டு வெளியே வந்த அந்த ஓட்டுநர் பொறுமையாகவே அதை பேருந்து நிலையத்திற்கு கொண்டு சென்றார். காலை வேளை என்பதால் ஜனமும், போக்குவரத்து நெரிசலும் சற்று குறைவாகவே இருந்தது. பேருந்தை நிறுத்தி விட்டு அருகிலுள்ள டீக் கடைக்கு அவனும், நடத்துநரும் செல்ல மக்கள் அந்தப் பேருந்தின் இருக்கையை ஆக்கிரமிக்க ஆரம்பித்தனர்.

            கார்த்திக்கிற்கு இன்று அவசரமாக செல்ல வேண்டும் என்பதால்தான், அந்தப் தொடர் பேருந்தில் ஏறினான். உட்கார இடமில்லை என்றாலும், நிற்பதற்கு இடமிருந்தது. மாநகரப் பேருந்துகளில் அலுவலக நேரங்களில் நிற்க இடம் கிடைப்பதே பெரிய விஷயம். சிறிது நேரத்தில், ஒரு பெண் அப்பேருந்தில் ஏறி அவனருகில் நின்று கொண்டாள். அவள் ஏதோ மிக அருகில் நிற்பது போல் உணர்ந்தான் அவன். அது ஒரு தர்ம சங்கடமான நிலைமையை அவனுக்கு தந்தது. அதே சமயம் ஒட்டுநர், அந்தப் பேருந்தை உசுப்பி உயிர்பித்து ஓட்ட ஆரம்பித்தார்.

            பேருந்து செல்ல செல்ல தனது வேகத்தை அதிகரித்துக் கொண்டே சென்றது. ஓட்டுநர் பொறுமை இழந்து விட்டதாகவே தோன்றியது. அந்தப் பேருந்தை எவ்வளவு வேகம் இயக்க முடியுமோ அவ்வளவு வேகம் இயக்கிக் கொண்டிருந்தார். கார்த்திக் அந்தப் பெண்ணிடம் சிறிது நகர்ந்து நிற்க முடியுமா என கேட்க முடிவெடுத்தான். பேருந்து ஒரு பெரிய மேம்பாலத்தின் மேல் செல்லத் துவங்கி அதில் ஒரு வளைவை நெருங்கியது. கார்த்திக் அந்தப் பெண்ணிடம் சொல்ல வாயெடுக்கவும், ஒரு பெரும் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது.

            தொடர் பேருந்தின் முன் பகுதி தனியாகவும், பின் பகுதி தனியாகவும் பிய்த்துக் கொண்டு வந்திருந்தது. அது மட்டுமல்ல ஒரு பகுதி அந்த வளைவை அடைத்திருந்தது. மறு பகுதி நேர் வழியையும் அடைத்திருந்தது. இதைக் கண்ட பின்னால் வந்த பேருந்து ஓட்டுநர், தனது பேருந்தை சட்டென்று நிறுத்த முற்பட, அதன் ஒரு சக்கரம் தனியாக கழன்று கொண்டது

            தரண் அந்தப் பணிமனையை அடைவதற்கு முன்னேயே, நகரில் ஆங்காங்கே சாலையில் பழுதாகி நிற்கும் பேருந்துகளைப் பற்றியும், அதனால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலைப் பற்றியும் செய்திகள் அவனுக்கு வர ஆரம்பித்தன. அவன் அந்தப் பணிமனையில் கிளம்பாமலிருந்த பேருந்துகளை நிறுத்தி விட்டான். அது மட்டுமின்றி கிட்டத்தட்ட அனைத்து பேருந்துகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆங்காங்கே போலீசாரால் நிறுத்தப் பட்டது.

கார்த்திக்கு ஒன்றைத் தவிர எதுவுமே புரியவில்லை. தன்னால் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு செல்ல முடியாது என்பதே அது. தனது மானேஜருக்கு போன் செய்தான், “சார், இங்க பஸ் எல்லாம் ரிப்பேர் ஆகி நிக்கிது. வரதுக்கு லேட் ஆகும் சார் ”. மானேஜர் பொறுமையாக சொன்னார், “தம்பி நானும் அப்படிதான் மாட்டி இருக்கேன்

            தரண் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான். கண்ணன் அவனிடம் வந்து
அதான் எல்லா பஸ்ஸையும் அங்கஅங்க நிறுத்தி யாச்சு இல்ல, இன்னும் என்ன யோசனை.”

நீ வேலைக்கு கிளம்பி பாதி வழியிலேயே போய்க்கிட்டிருக்க. உன்ன நிறுத்தி நடு ரோட்டுல மணி கணக்கா உக்கார வெச்சா என்ன பண்ணுவ?”

கண்ணனின் பின் மண்டையில் ஏதோ ஒன்று உரைக்க துவங்கியது.

பாவ நகரின் முக்கிய சாலையில் ஒரு பேருந்து போலீசாரால் அரை மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப் பட்டிருந்தது. அதனுள் இவ்வளவு நேரம் பொறுமை காத்துக் கொண்டிருந்த ஒரு பொது ஜனம், லேசாக பொறுமை இழக்க ஆரம்பித்தது, “யோவ்! எவ்ளோ நேரம் தான் நடுரோட்டுலயெ உக்கார வப்பீங்க


                                                                                                                -பாவங்கள் தொடரும்