Thursday 17 October 2013

பெண்ணியம்



"பெண்ணியம்",
அரிதாரத்தால் அலங்கரித்து 
பொய்மையினால்  
முலாம் பூசப்பட்ட 
அழகுச் சொல்


குறிப்பிடப்பட்டது 
பெண்ணாயினும் 
குறிப்பிட்டவன் ,
ஆணென்பதால் தான் 
உட்குறிப்புகளையும்
உடன் சேர்த்து விட்டானோ?


நாளுக்கொரு 
நவநாகரீகப் போராட்டம் அவளுக்கு,
அவள் எதிர்கொள்வது 
தனிப்பட்ட ஆணையல்ல 
ஆயிரம் ஆண்டுகளாய் 
அசையாதிருக்கும் 
ஆணாதிக்க சமூகத்தை


அழுகைகளும்ஆதங்கங்களும் 
நிரம்பிய விழிகளுக்குள்ளிருக்கும்

வேள்வித் தீயே 
அவளது,
ஒவ்வொரு விடியலையும் 
உண்டாக்கித் தருகிறது


பெயரளவிலாவது 
பெண்ணியம் காத்திருக்கப்படின் 
பல ,
பெயரறியா சகோதரிகள் 
பிரியா விடை பூண்டிருப்பரோ?


என் செய்ய,
உண்மைகள் மறைக்கப்படுவதும் 
ஊமைகள் உருவாக்கப்படுவதும் 
பாரத தேசத்திற்கு 
புதிதல்லவே !


பெண்ணவளை,
போகப் பொருளாக்கும் 
வஞ்சக நெஞ்சமே !
உம்மை ஈன்றவளும் 
உடன் பிறப்பாய் உள்ளவளும் 
பெண் தான் என்பதனை 
என்று தான் 
நீவீர் உணரீரோ ?


போலிப் பெண்ணியமதனை
மாற்றித் தாரீரா..
இல்லை,
புது விதிகளதை
நாங்களே,
புகுத்திக் கொள்ளவா?



தோழரே ! தோழியரே !

"பெண்ணியம்"
அது உண்மையாய் உருப்பெற 
வேண்டும் கொஞ்சம்,
உங்கள் "கண்ணியம்"

2 comments:

  1. அழுகைகளும், ஆதங்கங்களும்
    நிரம்பிய விழிகளுக்குள்ளிருக்கும்

    வேள்வித் தீயே
    அவளது,
    ஒவ்வொரு விடியலையும்
    உண்டாக்கித் தருகிறது..............அருமை கண்ணம்மா

    ReplyDelete
    Replies
    1. adaimazaikku enathu nandrigal ..

      Delete