Thursday 17 January 2013

அடைமழை சாரல் - II


நன்றி


முன்னுரை


குறள் மழை - 3



தென்னவன் எவனாயினும் தன்னைத் தலை நிமிர்ந்தே பார்க்க வேண்டும் என வரம் பெற்று வந்திருப்பானோ என்னமோ ... இந்த நீல மேனி கொண்டவனின் பெருமையை என் வள்ளுவனைத் தவிர எவரால் இத்தனை சிறப்பாய்க் கூற முடியும். இதோ அறத்துப் பாலின் இரண்டாவது அதிகாரமான "வான் சிறப்பு" அவன் மொழியாய் என்னில்!

நம் அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் முழுக வைக்க
தான் முழுகாமல்இருந்து
மழைப் பிள்ளையை ஈன்றெடுத்து
நம் வாழ்வின் அமிழ்தத்தை நமக்கு ஊட்டிய
இவளின் சிறப்பு
இவனின் உற்ற படைப்பு...

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று

சல சலவென சாரல் அடிக்க
தள தளவென செடிகள் திளைக்க
மள மளவென திண்டிகளைத் தயாரித்தருளும்
மழை உணவு
வற்றிய பூமிகளின் பெரும் கனவு

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

அண்டங்காக்கும் கடவுள் கடலாய் திகழ்ந்தாலும்
ஆகாயம் கொடுக்கும் மழை பொய்த்துவிடின்
நம் பிழைப்பும் நிலைக் குலைந்துவிடும்
மழையைக் கடவுளாய் வணங்கும் என் ஆசான்
என்றும் பொய்த்து பேசான்

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி

மழை இல்லையேல் உழவில்லை
இதனை விழையோடு விரும்பி விளித்திருக்கும்
வள்ளுவன் வியப்பின் விளிம்பு

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்

பொழிந்தால் பலனும்
பிழைத்தால் பளுவும்
கொடுப்பது மழையே
இவன் தந்த இவ்விரண்டடி குறள்
இப்பொருள் பொதித்து பொறித்து வைத்திருக்கிறது
இந்த அரிய கருத்தை...

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

துளியின் துள்ளல் துளியும் தன்னைத் தொடாவிடில்
புல்லுக்கும் பாலூட்டுமோ இப்பரந்த புவி!
துல்லியமாய் தந்திருக்கும் இக்கருத்து
இணையில்லா இவனின் செருக்கு!

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைக்காண் பரிது

அளவில்லா ஆழியும் அழிந்து போகும்
அதனிடமிருந்து கொணர்ந்த நீரை அதனோடு சேர்க்காவிடில்
இதனை எளிதாய் செய்து பேராழிக்கு பெரும் எழில் சேர்ப்பது மழையே!
இது வள்ளுவனின் சிந்தனையே!

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

அவனுக்கென நாம் செய்யும் அன்றாட பூசைகளும்
ஆர்பாட்ட திருவிழாக்களும்
இல்லாது போகும்
நில்லாது பெய்யும் மழை
பெய்யாது போனால்!!
பொய்யா புலவனின் கையில் தான் எத்தனை எத்தனை விந்தை
அவன் சொல்லில் தான் எத்தனை எத்தனை சிந்தை.....

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வரைக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

நல்வினை இரண்டும் நல்காதாகிவிடும்
பல்வினை ஈயும் பளிங்கு துளி பல் காட்டி இளிக்காவிட்டால்
சிந்தனை சிற்பியான என்னவன் தூவிய
எழில்மிகு சொல்லோவியம் இதோ என்னில்.....

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்

நீரில்லா பூமி நிலை இல்லாது போகும்
அந்நீருக்கு ஆதாரமான மழை இல்லாது போனால்
பூமியே இல்லாது போகும்!

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு

                                                           
ஜெய கீதா