Thursday 17 January 2013

வரலாறு முக்கியம் அமைச்சரே - 2




சிந்து சமவெளி நாகரிகம் (3300–1300கிமு; முதிர்ந்த காலம் 2600–1900 கிமு):

































கூட்டம் கூட்டமாய் ஆங்காங்கே குடிபெயர்ந்த மக்கள் நாகரிக வளையத்திற்குள் புகுந்தார்கள். அப்படியான முதல் நாகரிகம் தான் சிந்து சமவெளி நாகரிகம். சிந்து (இண்டஸ்) நதிபகுதியில் கண்டறியப்பட்ட நாகரிகம் ஆதலால் இது இப்பெயர் பெற்றது. அப்போதைய இந்த நாகரிகம் இப்போதைய பாகிஸ்தானம் மற்றும் வடமேற்கிந்தியா முழுதும் பரவி இருந்தது. இப்படியாய் கிழக்கே கக்கர்-ஹக்ரா நதி பள்ளத்தாக்கு மற்றும் கங்கா-யமுனா தோஅப்-உம் (இரண்டு நதிகளுக்கு இடையே இருக்கும் நிலப் பகுதி) ,மேற்கே பலுசிஸ்தானத்தின் மக்ரான் கடற்கரையும், வடக்கே வடகிழக்கு ஆப்கானிஸ்தானும் தெற்கே மகாராஷ்டிரமா நிலத்தின் டைமடாபாதும் ஆகிய பகுதிகளில் இந்தநாகரிகம் பரவி இருந்தது. அதன் சமகால நாகரிகங்களான மெசபடோமியா (பண்டைய கிரேக்கம்) மற்றும் பண்டைய எகிப்து நாகரிகங்களை விட மிக பெரிய நாகரிகம் இந்த சிந்து சமவெளி நாகரிகம்.அதிகபட்சம் 5மில்லியன் மக்களை மட்டுமே கண்டிருந்த இது,கைவினையில் புது புது தொழில் நுட்பங்களையும் (காணீலியன் தயாரிப்புகள் மற்றும் முத்திரை செதுக்குதல்), தாதுக்களிலிருந்து உலோகங்களைத் (செம்பு,வெண்கலம்,தகரம்மற்றும் ஈயம்)  தயாரித்து வேலை செய்யும் கலையையும் பிறப்பித்த இடமாக அமைந்தது. செங்கல்லால் கட்டப்பட்ட நகரங்கள் மற்றும் சாலையோர வடிகால் முறை-இவை இதன் சிறப்பம்சங்கள்.


சிந்து சமவெளிநாகரிகத்தை "ஹரப்பன் நாகரிகம்" என்றும் அழைப்பர். ஏன்எனில் 1920-இல்

முதன் முதலில் தோண்டப்பட்ட நகரம் ஹரப்பா (1920 பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப் 

மாகாணம்; இப்போது பாகிஸ்தானத்தில்) ஆகும். இப்படி அகழ்வாராய்ச்சியில் 

கண்டறியப்பட்ட நகரங்களில் கீழ்க்காண்பவையும் அடங்கும்.

*மொகஞ்சதாரோ (யுனெஸ்கோவின்உலகபாரம்பரியதளம்)
*லோதல்
*தோலவிரா
*காளிபங்கன்
*ராக்கிகர்ஹி

மொகெஞ்சதாரோவின் தோண்டப்பட்ட இடிபாடுகள்:



சிந்துசமவெளிமுத்திரைகள்(பிரிட்டிஷ்அருங்காட்சியகம்):



ஹரப்பன் நாகரிக சரிவு:

கி.மு 1800-ல் இந்த அழகிய நகரங்கள் காணாமல் போவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. கி.மு 1700-ல் அது இனிதே நடந்து முடிந்தது. கிட்டத்தட்ட அனைத்து நகரங்களும் மண்ணோடு மண் ஆகின. ஏன் இவ்வாறு நடந்தது? என்ன காரணம்? விஞ்ஞானிகளின் மூளைப் பசிக்கு இதோ இரைக் கிடைத்தது. தோண்டத் தொடங்கினர்.

1953-ல் மார்டைமர் வீலர் என்பவர் இந்திய-ஐரோப்பிய பழங்குடி இனத்தாராகிய, ஆரியர்களின் படையெடுப்பே இந்த நாகரிகம் அழிந்ததற்கு காரணம் என்றார். அதற்கு ஆதாரமாய் அந்த இடங்களில் இருந்து கண்டறியப்பட்ட 37 எலும்பு கூடுகளையும், வேதங்களில் கூறப்பட்ட போர்களையும் கோட்டைகளையும் காட்டினார். எனினும் பின்னால் வந்த அறிஞர்கள் வீலரின் இந்த காரணத்தை ஏற்க மறுத்தனர். ஏன் எனில், வீலர் கண்டறிந்த எலும்பு கூடுகள் இந்த நாகரிகம் அழிந்தப் பிறகு இருந்த காலத்தைச் சேர்ந்தவை.
1994-ல் அந்த எலும்பு கூடுகளை மேலும் பரிசோதித்த கென்னெத் கென்னடி என்பவர் அவைகளின் மண்டை ஓடுகளில் இருந்த தழும்புகள் அரிப்பழிவையே குறிக்கின்றன வேறு எந்த வன்முறையான ஆக்கிரமிப்பையும் குறிக்கவில்லை என்று கூறினார். அன்று முதல் இன்று வரை இவரின் இந்த காரணம் ஏராளமான அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இயற்கைச் சீற்றங்களாலும் எகிப்து மற்றும் மெசபடோமியா பகுதிகளில் அதுவரை நடந்த வர்த்தகம் பாதிக்கப்பட்டதாலும் தான் சிந்து சமவெளி நாகரிகம் அழிவுக்கு உள்ளாகியுள்ளது என்பது வெகுவாக நம்பப்படுகிறது.

முக்கிய காரணம்:

மேலே கூறப்பட்ட காரணங்கள் நம்பக்கூடியவையாகினும், குறிப்பிடும் வகையில் அமைகிறது பின்வரும் கண்டுபிடிப்பு. சிந்து சமவெளி நாகரிக வளையத்தின் கிழக்கு எல்லையான கக்கர்-ஹக்கர் நதி அமைப்பு கணிசமாக அழிந்து வந்திருக்கிறது என்பதே அந்த கண்டுபிடிப்பு. அந்த காலகட்டத்தில் நடந்த ஒரு டெக்டோனிக் சம்பவம் கக்கர்-ஹக்கர் நதி அமைப்பின் நீரை கங்கை பள்ளத்தாக்குக்கு கொண்டுசென்றிருக்கலாம், எனவே இந்த நதி அமைப்பு அழிந்து போய் இருக்கலாம் என்பதே வாதம். இருப்பினும் இந்த டெக்டோனிக் சம்பவத்தின் துல்லிய காலம் இந்த காரணத்தை ஞாயப்படுதுமா என்று கேட்டால், தெரியவில்லை என்பதே விடை.

டெக்டோனிக் என்றால் என்ன?

டெக்டோனிக் என்பது ஓர் அடைச்சொல்(Adjective). இது கிரேக்க வார்த்தையான "டெக்டான்"(Tekton) என்பதில் இருந்து எடுக்கப்பட்டது. அதன் பொருள் "கட்டுமாண பொருள்"(builder). தட்டு தட்டாய் இந்த பூமி முழுவதையும் ஒட்டி
ஒன்றாக்கி இருப்பதால் இந்தத் தட்டுக்கள் டெக்டோனிக் தட்டுக்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த உலகில் உள்ள அனைத்து நிலப்பகுதிகளுக்கும் ஆணி வேராய் அமைவது அவைகளின் அடியே உள்ள டெக்டோனிக் தட்டுகள். இப்படி ஒவ்வொரு குறிப்பிட்ட நிலப்பகுதியும் ஒவ்வொரு டெக்டோனிக் தட்டுக்களால் ஆனவை. இந்த தட்டுகள் தங்கள் நிலையில் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. நகரும் தன்மையைக் கொண்டவை. இவ்வாறு நகர்ந்து கொண்டே இருக்கும் இந்த தட்டுகள் ஒன்றுக்கு ஒன்று முட்டி மோதிக்கொள்ளும் அபாயம் அதிகம். அப்படி மோதிக்கொள்வதன் விளைவு தான் பூகம்பங்களும், சுனாமிக்களும் நதிகளின் நீர் திசை மாற்றங்களும், வற்றிய நதி நிரப்பப்படுவதும், நிரம்பிய நதி வற்றிப்போவதும், இன்னும் பிற இயற்கை சீற்றங்களும்.

நகரும் டெக்டோனிக் தட்டுக்கள்:



இந்த சிந்து சமவெளி நாகரிக அழிவின் பாதிப்பு எப்படி "வேதிக் பீரியட்" எனப்படும் வேதங்கள் பிறந்த காலத்தை நோக்கி சென்றது என்பதை அடுத்த பகுதியில் காண்போம்.


                                                            ஜெய கீதா

No comments:

Post a Comment