Friday 11 December 2015

மழை அது அமிழ்தம்





மழை பெய்கிறது

ஊர் முழுதும் ஈரமாகி விட்டது.

தமிழ்மக்கள், எருமைகளைப்போல, எப்போதும் ஈரத்திலேயே

      நிற்கிறார்கள், ஈரத்திலேயே உட்காருகிறார்கள்,

      ஈரத்திலேயே நடக்கிறார்கள், ஈரத்திலேயே படுக்கிறார்கள்

      ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு

உலர்ந்த தமிழன் மருந்துக்குக்கூட அகப்படமாட்டான்.


ஓயாமல் பெருமழை பொழிகிறது,

தமிழ் மக்களிலே பலருக்கு ஜ்வரம் உண்டாகிறது.

நாள்தோறும் சிலர் இறந்துபோகிறார்கள். மிஞ்சி யிருக்கும் மூடர் விதிவசம் என்கிறார்கள்

ஆமடா, விதி வசந்தான்.

‘அறிவில்லாதவர்களுக்கு இன்பமில்லை’ என்பது ஈசனுடைய விதி.

முன்னெச்சரிக்கையில்லாத தேசத்திலே பேரிடர் விளைவது விதி.

தமிழ்நாட்டிலே முன்னெச்சரிக்கையில்லை, உண்மையான தற்காப்புகளை வளர்க்காமல் 

இருப்பனவற்றையும் மறந்துவிட்டுத் தமிழ் நாட்டுப் பார்ப்பார் பொய்க்கதைகளை 

மூடரிடங் காட்டி வயிறு பிழைத்து வருகிறார்கள்.

குளிர்ந்த மழையையா விஷமென்று நினைக்கிறாய்?

அது அமிழ்தம், நீ ஈரமில்லாத வீடுகளில் நல்ல உடைகளுடன் குடியிருப்பாயானால்,


மழை நன்று, அதனை வழிபடுகின்றோம்.



Tuesday 10 November 2015

இது காதல் தோல்வியா??






















-




எது உன்னிடம் என்னை ஈர்த்தது??
ஏன் நீ மட்டுமே
எப்பொழுதும் என் உலகமாக தெரிகிறாய்???  
கேள்விகள் பல என்னுள்
பொங்கி கொண்டு இருந்த நேரம்,
"என்ன டி, கனவா?" என்றாள்  தோழி.
பேச முயன்று தோற்றேன்
சிரித்து விட்டு நகர்ந்தாள்.
உயிர் தோழி அல்லவா, என்னை அறியாமலா இருப்பாள்.!!!

உன் சிறு புன்னகையில்
அப்படி என்னதான் உள்ளதடா...????
அதை ஒருநாள் காணாது
போனாலும் தவித்து தான் போகிறேன்.
நாளை கண்டிப்பாக சீக்கிரம் வரணும்னு
தீர்க்கமாக முடிவெடுத்து,
ஆசிரியை கூறுவதை குறிப்பெடுக்க முனைந்தேன்.   

மாலை தனியாக படிக்க அமர்ந்த என்னை
நீயே ஆட்கொண்டாய்..
அந்தி வானம் சிவந்ததை விட அதிகம் சிவந்தேன்...!!!
ஒருவேளை வெறும் ஈர்ப்போ என்று குழம்பினேன்…
எண்ண ஓட்டத்துக்கு முற்றுபுள்ளி வைத்தது
அம்மாவின் அழைப்பு.

"சாப்பிட்டு தான் போயேன்டி,
உயிரா போகபோகுது" என்றாள் அம்மா.
உயிராகிய அவனை காணாமல் போகுமே..,  
சொல்ல நா எழாமல் இல்லை.

உன் கள்ளமற்ற புன்னகயொன்றே
போதுமாக இருக்கிறதே,
நான் ஜீவணிக்க/சுவாசிக்க...!!!

உலகை வென்றதாக கர்வமடைந்தேன்,
உன் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தற்கே..
தினம் உன்னை தரிசிக்க வாய்ப்பு உள்ளதே..!!

பார்த்து போய் வா என்றாள் அக்கறையுடன் அன்னை.
எதுனாலும் சொல்லுமா என்று தைரியம் சொன்னார் தந்தை.
முதல்நாள் கல்லூரி என்ற பயம் இருந்தாலும்,
உன்னை காண்பேனென்ற உற்சாகமே மேலோங்கியது.

சந்தோச வெள்ளத்தில் மிதந்த
என்னை தடுத்தனர் மூத்த மாணவர்கள்,
ஒரு மூலையில் இருந்த பயம்
மெதுவாக தலை நீட்டியது.

பரிச்சயமான குரலொன்று என் செவி தொட்டது,
"எங்க ஏரியா பொண்ணுடா, பாவம் விடுங்க"
அதே புன்னகையுடன் நின்றிருந்தாய்..
வழக்கம் போல் இமைக்க மறந்தேன்.

என் வகுப்புச் செல்லும் பாதையை விட்டு,
தினம் ஒரு வளாகம் சுற்றுவதுக்கூட
சுகமாகத்தான் இருந்தது...
இல்லாமலா போகும்??? 
உன்னை காண்பதுக்காக அல்லவா..!!

உன்னோடு பேச காரணம் 
தேடித் தேடி துவளும் போது,
உன் பார்வையில் புத்துணர்வு பெற்று 
மீண்டும் தேடல் தொடங்கும்.
என்ன மாயம் செய்தாய் நீ...??? 
நான் இப்படி உனக்காக ஏங்க...!!!

நீ செல்லும் பாதையில் 
எதிரில் வருவதே என் வழக்கமானது
முதலில் புன்னகைகள், நாட்கள் நகர நல விசாரிப்புகள்,
கதைகள் பேச மைதானம் இடமளிக்கவே,
நண்பர்களின் கேலி பேச்சுக்கும் ஆளானோம்..

சொல்லித்தான் தெரியவேண்டுமா.?
என் மனம் விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்ததை..!!
என் உள்ளுர பயமும் இருந்தது,
எங்கே என் கண்கள் காட்டி விடுமோயென்று..!!!

கல்லூரி விழாக்காலம் பூண்ட நேரம்...
அனைவரும் குதூகலித்து வரவேற்க,
நான் மட்டும் வேதனையில் தவித்தேன்.
நீதான் பம்பரமாய் சுழன்று கொண்டிருப்பாய்,
உன் பேச்சு கேளாமல் நான் எப்படியடா மகிழ்வேன்.!!

தமிழனுக்கே உரிய கம்பீரம் 
இதுதானோ, என்று வியந்தேன்.!!
பட்டுவேட்டி அணிந்து, மீசையை 
முறுக்கி நீ மேடையேறிய போது 
விழா முடிந்ததும் என்னை தேடி ஓடி வந்தாய்..
நண்பர்களின் கேலிப்பேச்சு காதில் விழவே, 
பேசாமல் நகர்ந்தேன்.
நீ உணரும் முன், அவர்கள் 
கண்டுக்கொண்டனரோ என்ற எண்ணத்தில்.!

மறுநாள் வழக்கமாக செல்லும் பாதையை மாற்றினேன்.
உன்னை பார்க்க எழுந்த 
ஆவலை என்னுளே சிறைப்படுத்தினேன்.
ஒரு நாள் ஒருயுகம் போல கழிந்ததுதடா..!!
எதிர்பாராமல் முன்வந்து நின்றாய்..
உணருமுன், பேச வேண்டுமென்று இழுத்து சென்றாய்.
சில நிமிடம் அமைதி மட்டுமே நிலவியது..!!
என் நண்பர்கள் என்றாரம்பித்த உன்னை இடைமறித்து,
"அவர்கள் மேல் தவறில்லை, 
என்னை கண்டுக் கொண்டார்களோ
என்றச்சத்தில் ஓடினேன்" என்றேன்.
இயற்பியல் எவ்வளவு இயல்பாக எடுத்தும் ஏறாத எனக்கு,
நீ சொன்ன ஒரே வரியில் எல்லாம் புரிந்தது

"கண்டுகொண்டது உன்னை இல்லை, என்னையடி பைத்தியமே" 

உலகே ஒரு கணத்தில் 
அழகானதாக மாறிய உணர்வு….
என்னை மறந்து நின்றேன், 
கண்ணில் இருதுளி எட்டிப்பார்த்தது...
இதற்காகத்தானே இத்தனை நாள் தவம் கிடந்தேன்.!!!

உன்னை பிரிந்து என்னால் வாழ முடியுமா?
இந்த எண்ணமே என்னை நடுங்க வைக்கிறதே..!!!
எனக்கு துன்பம் கூட பெரிதாய் தெரியவில்லை,
அதை பகிர நீ என்னோடு இருப்பதால்..!!
காதல் என்றால் இது தானா?
உன்னோடு சிரித்த நிமிடங்கள் 
என்னுளே சிற்பமாக உள்ளதே.!
உன் அருகாமையில் மட்டும் 
நடைப்பயிலும் குழந்தையாகிறேன்,
உன் கரம் பற்றி நடக்க...!!!
முட்டாள்தனமாக சண்டை போடும் போதிலும்,
மண்டு மண்டு என்று சிரித்து அணைப்பாயே...
அது ஒன்றுக்காகவே நான் முட்டாளாக சம்மதமே.!!!
யாருமறியாமல் கண் அடித்துச் சென்றுவிடுகிறாய்,
அதிலிருந்து மீளவே அரைமணி நேரம் ஆகுதடா..!!!
உன் கண்ணில் காந்தம் உள்ளதோ.? 
என்னை இப்படி கட்டிப்போடுகிறதே.!!

காதல் ஒருமுறை தான் பூக்குமா??
இல்லையே...உன்னோடு இருக்கும் 
ஒவ்வொரு நொடியிலும் பூக்குதே.!
காதலியின் கை பிடிக்கவா?
அம்மாவின் துயர் துடைக்கவா என்ற நிலையில்
கடமை உணர்ந்து தெளிவாய் முடிவெடுத்தாய்..
தீர்க்கமாக சொன்ன உன்மேல் கோபம் கொள்ளவில்லையடா...!
உன்னை காதலிப்பதில் பெருமைத்தானே கொள்கிறேன்.

என் தோழி சிலர் கோபம் கொண்டனர், ஏமார்ந்தேனென்று.
சிலரோ பரிதாபப் பார்வை வீசினர், காதல் தோல்வியென்று.
இது எப்படி காதல் தோல்வியாகும்!!!????
இன்றும் உன் நினைவுகள் என்னோடு தானே உள்ளது.
கண்மூடி நின்றால் மறுகணம் என் முன்னே நிற்கின்றாய்
மாறாத அதே புன்னகையோடு..!
உன்னோடு இருந்தால் மட்டுமே காதலா???
புரிதலும் காதல் தானே?
இன்றேயில்லை என்றாலும் உன்னோடு 
தானே என் வாழ்வும் முழுமையும்..!
காதலுடன் காத்திருப்பேன் நீ என்னிடம் திரும்ப

அதே புன்னகையுடன்...!!!


Sunday 16 August 2015

நின் கனவு இனி என் கனவு...




நொடித்து அடங்க
எத்தனையோ மூச்சுக்கள்
இங்கே
உலாவிக்கொண்டிருக்கின்றது...
நீர் ஏன் மாய்ந்தீர் ஐயா...

உமக்காக பிராத்தனை
செய்யக் கூட
எங்களுக்கு  நீர்
காலம் கொடுக்கவில்லை

கற்கள் நிறைந்த
பாதையில்
புற்கள் மிதிக்க
கற்றுக் கொடுத்தீரே..
இனி
முட்கள் நிறைந்ததொரு
பாதை வருகிறது...
வழி நடத்த வாரீரோ


கட்டவிழ்க்க முடியாத
ஆயிரமாயிரம்
முடிச்சுக்கள்  அப்படியே
கிடக்க
இனி எப்படி ஐயா
அவிழ்ப்போம் சில
இறுகிய அரசியல்
முடிச்சுக்களை...

நின் உடல் கொண்ட மயானம்
அது ஒரு ஓரத்தில் கிடக்கட்டும்...

முதலில்
அங்கிருந்து எழுந்து வந்து
உம் தடயங்களைப்
பாரும்..

உமக்காக
வீதிகள் தோறும்
விளக்குகள்...

பள்ளிகள் தோறும்
உம் படங்களை ஏந்தித்
திரியும் மழலைகள்

சாலைகள் தோறும்
நின் கனவுகளை தூவிச்
செல்லும் இளைஞர்கள்
என நின் உருக்களைப் பாரும்

எல்லோர் வீட்டிலும்
நெருங்கிய தங்கள் சொந்தத்தை
இழந்த தவிப்பு இன்னும்
அகலவில்லை

ஐயனே
இவைகள்
சாயங்கள் அல்ல வெளுக்க..
நின் அன்பின் வெளிப்பாடுகள்..

என்றும் எங்களை
புத்தி மாறிப்
போகவிடாது உமது
முத்தான புத்தகங்கள்

நின் போல் எவரும்
இனி பிறக்கப் போவதில்லை
பிறப்பினும்
நின் போல் இறக்கப்போவதில்லை
இறப்பினும்
நின் போல் நிலைக்கப்போவதில்லை

கனவுகள் பல சுமந்து
தூங்குவது எளிதல்ல
நீர் தூங்கவில்லை..
நின் பணிகளை எங்களுள்
விதைத்து விட்டு
சற்று இளைப்பாறிக் கொண்டுதான்
இருக்குறீர்கள்

இமயத்தின் சாரலாம்
சிந்து, கங்கையை
யமுனை, கோதா வழியே
காவிரி, வைகையில் இணைத்து..
நின் பாதங்களை நனைத்த பின்னே தான்
மூடும் எங்கள்
இமைகளுக்கு நிரந்தர
ஒய்வளிப்போம்..

நின் கனவு இனி என் கனவு

Saturday 15 August 2015

கனவுலகின் காவலன்





அகண்ட தோள்கள்
ஆழமான கண்கள்
மிடுக்கான தோற்றம்
நின் மேல் 
என் நாட்டம் 

யார் இவன்?
கனவுலகின் காவலனா
இல்லை,
காவியம் சொல்லும்
காதலனா?

தோழிகளின் உச்சரிப்பும்
தொலைக்காட்சியின் நச்சரிப்பும்
உள் ஊடுருவா நிலை!!!
நீ வரும் நேரமாகிவிட்டது...

பதிந்திடா கால் தடமும்
பகிர்ந்திடா பல் மொழியும்
பாவையன்றி,
நீ அறிவாயோ?

ஏனோ 
வழக்கம் போல்
இன்றும் நீ வரவில்லை!!
இதயம் இடியிடிக்க
இமைகள் மழையடிக்க
கன்னமிரண்டும்
கரைந்தே விட்டது.

கண் கானா ஏக்கமும்
தரை தட்டும் தாக்கமும்
என்னை முட்ட
கனவலைகளில்  கால் பதிக்கிறேன்.

மீண்டும்,
அதே ஒற்றை ரோஜாவுடன்
மொட்டை மாடியில் நீ!

நிஜத்தில் வராத
நெருடல்களை மறைத்து
நின்னருகில் நான்!

நீ கனவுலகின் காவலன்
நான் உனதருமை நாயகி

Thursday 6 August 2015

தேசத் தந்தை : அப்துல் கலாம்







என்னவென்று தொடங்க உன்னைப் புகழ,
சர்வமுமாக நிறைந்திருக்கிறாய் புனிதனே!

புண்ணியம் தேடி கால் நனைக்கும் கடைத்தீவினில்
உன் முதல் மூச்சை விட்டு, கண்ணீர் சிந்தி,
அதன் பாவம் கழித்தாயே!

திரும்பும் திசையெங்கும் கடல்,
உன்னை சூழ்ந்து ஆட்கொள்ள முயல,
சராசரி மனிதனாக நீயிருந்திருந்தால்,
கடல் தாண்டாத வெறும் உடலாக மட்டுமே இருந்திருப்பாய்.

கைக்கு எட்டா உயரம், விண்னை கிழிக்கும் பயணம்
இதுவல்லவா உன் இதயம் சொன்ன கனவு!

ஒரு துறையில் சிறந்து விளங்க பலர் சிரமப்பட,
சிறுபுன்னகை செய்துக்கொண்டே கால் பதித்த
ஒவ்வொரு பணியிலும் சிறந்து, வாகை சூடிய
தனித்துவன் நீயல்லவா!

சிறுபாண்மையில் பிறந்து,பெருங்கனவு கண்டு
வேறுப்பட்ட உலகுமுன் கண்டதை நிறைவேற்றி,
திறமைக்கு தடையில்லையென நிருபித்த
உயர்ந்த உயிரொளி நீயல்லவா!

உறக்கத்தில் காண்பது கனவன்று, உன்னை
உறங்கவிடாதிருப்பதே கனவென்று,
புதுவழிக் காட்டி, நம்பிக்கை ஊட்டி,
என்போன்ற இளைஞர்களுக்கு வழி காட்டியானாய்,
வழித்துணையும் ஆனாய்!


ஆசிரியர்,
அணு விஞ்ஞானி,
இசை கலைஞர்,
எழுத்தாளர்,
முதல் குடிமகன்,
எத்தனை பரிணாமம் நீ எடுத்தாய்,
அத்தனையிலும் உன் பெயர் பதித்தாய்!

மனதுக்கு பிடித்த காரியத்தை செய்து கொண்டே
உயிர்நீத்தல் எத்தனை பெரிய உன்னதம்!
உன் கடைசி நொடியிலும் மாணவர்கள் மனதில்
கனவு விதைகளை விதைத்துத் தானே சென்றிருக்கிறாய்!

இனி,
எம் மதத்தில் பிறந்தவனும் தன் மகனுக்கு
நின் பெயர் வைக்’கலாம்’,

Wednesday 22 July 2015

ஓரிரு நொடிகள் தான்..


























மாலை தொடங்கி
விடியலாகிவிட்டது
இன்னும் சதா 
நீ பெய்து கொண்டே இருக்கிறாய்
துளியும் வெளிச்சமில்லாத
இந்த பொழுது எந்நேரமென்று
தெரியவில்லை
நீ நிற்பதற்கான சூசகங்கள்
ஒன்றும் தென்படவில்லை
இன்னும் சிறிது நேரத்தில்
நன்கு விழித்திருந்த 
அந்தச் சுடரும் கரைய இருக்கிறது
உன்னுடன் நனைய
ஆசையிருந்தும் இப்போது
நனையும் நிலையில்
நான் இல்லை.
ஏனெனில்
நினைவில்
உதிக்கின்ற ஓரிரு
வார்த்தைகளையும்
மீதிச் சுடர் முடியும் முன்
எழுதி முடித்தாக வேண்டும்...
காற்றோடு எதோ சதி செய்து
சாளரம் தாண்டி
உன் எரசலால் என் பகுதி
நனைக்க முற்படுகிறாய்
உடல் சிலிர்க்கிறது
ஓரிரு நொடிகள் தான்..
எழுதும் நிலையிழந்து
என்னை முழுதும் உன்னுள்
நனைக்க விழைந்தேன்..
நனைந்தேன்...
எண்ணம் பறித்து
என்னை முழுதும்
உனது ஆக்கினாய்...

துளித் துளியாய் - 67



எதற்காக நான் பிறந்தேன்?










எதற்காக நான் பிறந்தேன்?

எதற்காக நான் பிறந்தேன்?

கேட்க கேட்க ஆயிரம் ஆயிரம்

கேள்விகள் உள்ளே எழுகிறது.


நினைத்தது யாவையும் செய்யவில்லை

யாரோ நினைத்ததை செய்யும் கருவியாய்

உழைத்து, இல்லை பிழைத்து கொண்டிருக்கிறேன்.


ஆசையாய் கண்ட கனவெல்லாம்

கண்முன்னே கரைந்துக் கொண்டிருக்கிறது.

பிறருக்காக வாழவா நான் உயிர் வளர்க்கிறேன்?

பிறருக்காக உழைக்கவா நான் தினம் உண்கிறேன்?

பிறருக்கான கனவை நான் நிஜமாக்கினால்

எனக்கான கனவை யாரிடம் நான் புகுத்துவது?

திசைதெரியாத பயணம்,

துணையில்லாத தனிமை,

கடலுக்கும் கரையுண்டு!

என் மனதின் மரண ஓலத்தை கேட்பாரில்லை!!!