Sunday 16 August 2015

நின் கனவு இனி என் கனவு...




நொடித்து அடங்க
எத்தனையோ மூச்சுக்கள்
இங்கே
உலாவிக்கொண்டிருக்கின்றது...
நீர் ஏன் மாய்ந்தீர் ஐயா...

உமக்காக பிராத்தனை
செய்யக் கூட
எங்களுக்கு  நீர்
காலம் கொடுக்கவில்லை

கற்கள் நிறைந்த
பாதையில்
புற்கள் மிதிக்க
கற்றுக் கொடுத்தீரே..
இனி
முட்கள் நிறைந்ததொரு
பாதை வருகிறது...
வழி நடத்த வாரீரோ


கட்டவிழ்க்க முடியாத
ஆயிரமாயிரம்
முடிச்சுக்கள்  அப்படியே
கிடக்க
இனி எப்படி ஐயா
அவிழ்ப்போம் சில
இறுகிய அரசியல்
முடிச்சுக்களை...

நின் உடல் கொண்ட மயானம்
அது ஒரு ஓரத்தில் கிடக்கட்டும்...

முதலில்
அங்கிருந்து எழுந்து வந்து
உம் தடயங்களைப்
பாரும்..

உமக்காக
வீதிகள் தோறும்
விளக்குகள்...

பள்ளிகள் தோறும்
உம் படங்களை ஏந்தித்
திரியும் மழலைகள்

சாலைகள் தோறும்
நின் கனவுகளை தூவிச்
செல்லும் இளைஞர்கள்
என நின் உருக்களைப் பாரும்

எல்லோர் வீட்டிலும்
நெருங்கிய தங்கள் சொந்தத்தை
இழந்த தவிப்பு இன்னும்
அகலவில்லை

ஐயனே
இவைகள்
சாயங்கள் அல்ல வெளுக்க..
நின் அன்பின் வெளிப்பாடுகள்..

என்றும் எங்களை
புத்தி மாறிப்
போகவிடாது உமது
முத்தான புத்தகங்கள்

நின் போல் எவரும்
இனி பிறக்கப் போவதில்லை
பிறப்பினும்
நின் போல் இறக்கப்போவதில்லை
இறப்பினும்
நின் போல் நிலைக்கப்போவதில்லை

கனவுகள் பல சுமந்து
தூங்குவது எளிதல்ல
நீர் தூங்கவில்லை..
நின் பணிகளை எங்களுள்
விதைத்து விட்டு
சற்று இளைப்பாறிக் கொண்டுதான்
இருக்குறீர்கள்

இமயத்தின் சாரலாம்
சிந்து, கங்கையை
யமுனை, கோதா வழியே
காவிரி, வைகையில் இணைத்து..
நின் பாதங்களை நனைத்த பின்னே தான்
மூடும் எங்கள்
இமைகளுக்கு நிரந்தர
ஒய்வளிப்போம்..

நின் கனவு இனி என் கனவு

2 comments: