Friday 18 October 2013

THE BLUE UMBRELLA - புத்தக மதிப்புரை


Buy The Blue Umbrella: Book

சமீபத்தில் THE BLUE UMBRELLA என்ற புத்தகம் வாசித்தேன். இது குழந்தைகளுக்கான நன்னெறி கதையினை சார்ந்தது. RUSKIN BOND என்ற எழுத்தாளர் இந்த புத்தகத்தினை எழுதியுள்ளார்… RUSKIN இந்தியாவின் மிகச் சிறந்த ஆங்கில நாவலாசிரியர். இவரின் படைப்புகள் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது. பத்மஸ்ரீ, சாகித்ய அகடமி போன்ற உயரிய விருதுகள் பெற்றுள்ளார்.

BLUE UMBRELLA கதைக்குள் போவோம்.. 

இந்த கதை ஹிமாலயா மலைப்பிரதேசத்தின் GARHWAL என்னும் கிராமத்தில் நடக்கிறது. பின்யா அப்பகுதியில் மாடுகள் மேய்க்கும் சிறுமி. ஒருமுறை மாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது அங்கு பிக்னிக் வந்த ஒரு தம்பதியினரை தொலைவில் இருந்து பார்க்கிறாள். அவர்களின் கையில் ஒரு அழகான நீல நிறக் குடை ஒன்று இருப்பதை பின்யா பார்க்கிறாள். மெல்ல அருகில் சென்று அந்த நீலக் குடையை பார்த்துக்கொண்டே நிற்கிறாள். அவர்கள் அவளுக்கு உணவு வேண்டுமா என்று கேட்கிறார்கள் வேண்டாம் என்கிறாள். ரூபாய் தருகிறார்கள் வேண்டாம் என்கிறாள். பின் புலியின் நகம் கொண்ட அதிர்ஷ்ட சங்கிலி பின்யாவின் கழுத்தில் இருப்பதை பார்கிறார்கள். அழகாய் இருக்கிறதே எங்களுக்கு தருகிறாயா நாங்கள் பணம் தருகிறோம் என்க பின்யாவோ குடையை பார்த்தவாரு இருக்கிறாள். கடைசியாக பின்யா இந்த புலி நகம் கொண்ட செயினை உங்களுக்கு தருகிறேன் பதிலுக்கு அந்த நீல நிறக்குடையினை எனக்கு தருவீர்களா என்று கடைசியாக பேசுகிறாள்.. சிறிது யோசித்த தம்பதியினர் பிறகு குடையினை பின்யாவிக்கு கொடுத்துவிட்டு செயினை வாங்கிக்கொள்கிறார்கள்.
இப்போது நீல நிற அழகுக் குடை பின்யாவின் வசம் வந்தது. அதை எப்போதும் தன் கையில் வைத்துக்கொண்டேதான் மாடுகளை மேய்ப்பாள். தன் அண்ணன் பிஜ்ஜுவிடம் அதை காண்பித்து மகிழ்கிறாள். அந்த கிராமத்தில் உள்ள எல்லோரும் பின்யாவின் குடையை அதிசயமாக பார்க்கிறார்கள்.. சிலர் எப்படியாவது அந்த அழகு குடையை இவளிடமிருந்து பறித்துவிட முற்படுகிறார்கள்…
அங்கே டீ கடை நடத்தி வருபவர் திரு ராம் பரோஷா. அவர் அந்த கிராமத்தின் பெரிய மனிதர் பணக்காரர் கூட. அந்த குடை அவரின் கண்களில் படுகிறது. டீ வாங்க பின்யா குடையுடன் வருகிறாள். ராம் பரோஷா அவளிடம் இந்த குடையை எனக்கு விலைக்கு தருவாயா என்று கேட்க பின்யா முடியாது என்கிறாள். இந்த அழகிய விலை மதிப்புடைய குடை இவளின் கையில் இருப்பதா என்று பொறாமைப்படுகின்றனர் அங்குள்ள சிலர்.

பின்யா அந்த அழகிய குடையினை தினமும் எல்லோர் கண்களிலும் படுமாறு எப்போதும் விரித்தே செல்கிறாள். ஒரு நாள் குடை காற்றில் அடித்துச் சென்றுவிடுகிறது.. மலைகளில் அது பறந்தோடுகிறது. மிகுந்த சிரமத்திற்க்கு பிறகு குடை மீண்டும் கிடைக்கிறது. பின்யா எதிர்பார்த்த மழைக் காலம் வருகிறது.. மழையில் குடையினை பிடித்துக்கொண்டே செல்கிறாள். மற்றவர்கள் மழைக்கு பயந்து ஓடுகிறார்கள். பின்யாவோ குடையை பிடித்தவாறூ ஓடாமல் மிக மெதுவாக சிரித்து கொண்டே நடக்கிறாள்.
பிஜ்ஜுக்கு பள்ளி விடுமுறை வருகிறது. டீக்கடை பரோஷா அவனை வேலைக்கு அமர்த்தி எப்படியாவது அந்த குடையை பின்யாவிடம் வாங்க திட்டமிடுகிறார். ஆனால் பிஜ்ஜுக்கு வீட்டு வேலைகளே போதுமானதாக இருக்கிறது என்று அவனின் அம்மா சொல்லிவிடுகிறாள். முடிவாக பக்கத்து கிராமத்திலிருந்து பிஜ்ஜுவுடன் படித்த ராஜாராம் என்ற சிறுவனை வேலைக்கு அமர்த்துகிறார்.
சில வாரங்கள் கழித்து பின்யா அந்த பக்கம் குடையுடன் வருவதை பார்த்த பரோஷா கோபப்படுகிறார். இதை அறிந்த ராஜாராம் முதலாளிக்கு அந்த குடையின் மேல் கண் இருப்பதை உணர்கிறான். பிறகு ராஜாராம் முதலாளியிடம் அந்த குடையினை அவளிடமிருந்து நான் பறித்து தருகிறேன் பதிலுக்கு என்னுடய சம்பள்த்தை உயர்த்துவீர்களா என்கிறான். பரோஷா சரி என்கிறார். சரியான நேரம் பார்த்து பின்யாவிடமிருந்து குடையினை பறித்து ஓடுகிறான் ராஜாராம். அழுதுகொண்டே பின்னால் துரத்துகிறாள் பின்யா.. பிறகு அந்த பக்கம் வந்த பிஜ்ஜு தங்கையின் அழுகுரல் கேட்டு அங்கே வருகிறான். நடந்ததை அழுது கொண்டே சொல்கிறாள் பின்யா. பின் பிஜ்ஜு வேகமாக ஓடி ராஜாராமிடம் சண்டையிட்டு குடையினை மீட்கிறான். சண்டையின் முடிவில் பரோஷாதான் இப்படி செய்யச் சொன்னார் என்று ராஜாராம் உண்மையை உளறிவிடுகிறான். இந்த நிகழ்வுக்கு பிறகு அவருடைய கடையில் அந்த கிராமத்தில் உள்ள மக்கள் யாரும் பொருட்கள் வாங்குவதில்லை. பின்யா அந்த கடைப் பக்கம் குடையினை பிடித்து செல்லும் போது குடையை மடக்கி வைத்துக் கொண்டு ஓடிவிடுவாள். இதை பார்த்த பரோஷா தன்னுடய செயலுக்கு வருத்தப்படுகிறார். அவரின் வியாபாரம் குறைந்து கடும் நஷ்டப்படுகிறார்.
சில வாரங்கள் கழித்து பின்யா அந்த கடையில் பொருட்கள் வாங்க வருகிறாள். பரோஷாவிடம் தேநீர் கொடுங்கள் என்று கேட்கிறாள். குடையுடன் வந்த பின்யா குடையை கடையிலேயே விட்டுச் செல்கிறாள். குடையைப் பார்த்த பெரியவர் ஓட்டமாய் ஓடிப்போய் உன் குடையை மறந்து விட்டுவிட்டாய் என்று பின்யாவிடம் கொடுக்கிறார். இல்லை நான் வேண்டுமென்றே தான் விட்டு விட்டு வந்தேன் என்கிறாள். இதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு ஓடுகிறாள் பின்யா.. பெரியவர் பின்யாவின் செய்கையை கண்டு வியக்கிறார். பின் தன்னிடம் உள்ள விலை உயர்ந்த கரடியின் நகம் பதித்த செயினை பின்யாவிற்க்கு பரிசாக அளிக்கிறார்.. இத்துடன் கதையும் முடிகிறது..

கதை ஆங்கிலத்தில் இருந்தாலும் கதை முடியும் போது ஒருவித மன நிறைவு ஏற்பட்டது ஆகவே இதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்…
  





2 comments:

  1. புத்தகம் படிக்க எப்படி இருக்கும்னு தெரியல, ஆனா மதிப்புரை ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க விஜய்..

    ReplyDelete
    Replies
    1. Nandri Pri...Thiraippadamum eduthaahi vittathu

      Delete