Tuesday 23 April 2013

பாவை ரகசியம்..



விண்ணும் வியக்கும் ,

மண்ணும் மயங்கும்
பாவை ரகசியங்கள்
பகிர்ந்து விடின்


அழகாய்,ஆசையாய்
காதல் சமைப்பாள்
காலங்களின் கோலங்களை
கண்ணீரில் கரைப்பாள் 


நண்பர்களை நாடுவாள்
நல்லுறவுகளைத் தேடுவாள்
வானத்தை வாசிப்பாள்
சில நேரங்களில்
வஞ்சகர்களையும் நேசிப்பாள் 


வின் வளைக்கும்
வித்தை தெரிந்தும்
தன்னை வளைத்தே
தரணியில் தழைப்பாள்


உண்மைப்  புன்னகை
அவள்,
உள்ளம் நிறைத்திடும்
ஒரு வரிப் பாராட்டு
உலகையே பரிசளித்திடும்


அவள்,
தனித்திருப்பின்
தன்னைத் தேடுகின்றாள்
எப்போதும் சிரித்திருப்பின்
உண்மைகளை மூடுகின்றாள்
இரவுகளில் விழித்திருப்பின்
ஏக்கங்களில் நீந்துகின்றாள்  


அவளுடைய,
ஒரு அங்குலப் புன்னகை
அரிய வித்தைகள்
அற்புதமாய்ச் செய்துவிடும்
நனைந்த கண்களோ
நீதியே நாடிச் செல்லும் 



பாம்பின் நஞ்சும்
பறவைகளின் பண்பும்
குயிலின் குரலும்
குன்றின் குணமும்
முயலின்  மனமும்
மழையின் மென்மையும்
சூரியனின் வெம்மையும்
நிலவின் ஒளியும்
நிஜத்தின் நிழலுமாய் 
ஓர் இனிய சகியவள்
இல்லாத ஓர் இடம்
இவ்வுலகில்,
இருக்கவும் இயலுமோ ?



கண்ணம்மா

2 comments:

  1. அவள்,
    தனித்திருப்பின்
    தன்னைத் தேடுகின்றாள்
    எப்போதும் சிரித்திருப்பின்
    உண்மைகளை மூடுகின்றாள்....Arumai Arumai...

    ReplyDelete
  2. பெண் இல்லா உலகம் தான் நரகம்... என்னை பெற்றவள் ஒரு பெண்..... அருமை கண்ணம்மா....
    காதல் சமைப்பவள், நல்லா ருசியா சமைங்க.....

    ReplyDelete