Friday 26 April 2013

கலாச்சாரக் கேள்விகள் - 2



இந்த வார கலாச்சாரக் கேள்வி என்னவாயிருக்கும் ? வியந்துக்கொண்டு இருக்கிறீர்களா? இதோ இங்கே!

கிருஷ்ணன் கதைகளை ஆவலுடன் படித்துக் கொண்டிருக்கும் மகளுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது.


மகள்:

அம்மா! நான் கிருஷ்ணனின் கதைகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் முதல் அத்தியாயத்தில் கிருஷ்ணனின் பிறப்பைப் பற்றி கூறியிருக்கிறார்கள். பூமியில் அசுரர்களின் அராஜகம் தாங்க முடியாமல் பூமாதேவி பிரம்மரை சந்திக்க செல்கிறாள். பிரம்மர் இதனை மகா விஷ்ணுவிடம் முறையிட, அவர், தான் க்ருஷ்ண அவதாரம் பூண்டு விரைவில் பூலோகம் வர இருப்பதாகவும், அசுரர்களை அழித்த பின்பு பூலோக வாழ்வைத் துறப்பதாகவும் சமாதானம் கூறி பூமாதேவியை அனுப்பி வைத்தார்.


அம்மா:

சரி இதிலென்ன சந்தேகம் உனக்கு?


மகள்:

இறைவனுக்கு வேலை செய்ய தான் நிறைய வேலையாட்கள் இருக்கிறார்களே! பின் ஏன் இப்படி ஒவ்வொரு பிரச்சனைக்கும் தானே அவதாரம் பூண்டு வர வேண்டும்? அவர்களை ஏவி விட்டு பிரச்சனையைத் தீர்க்க வேண்டியது தானே?


அம்மா:

இதே ஐயம் முன்னொரு காலத்தில் தில்லியை ஆண்ட ஒரு மாமன்னருக்கும் வந்தது. அவர் யார் தெரியுமா? அக்பர்!!!


மகள்:

அப்போ நானும் அவரைப் போல் "Great " ஆ அம்மா?


அம்மா:

அவரின் வீரமும் விவேகமும் இன்று வரை எவர்க்கும் எட்டாக் கனியாக உள்ளது. சரி! கதையைக் கூறுகிறேன் கேள்! சக்கரவர்த்தி அக்பர், தனது மனைவி மகன் மற்றும் ஊழியர்களுடன் ஏரியில் உல்லாசப் பயணம் சென்றுக் கொண்டிருந்தார்.


மகள்:

பொறுங்கள். அக்பரின் மகனா? ஜஹாங்கிர்-ஆ? அல்லது அவருக்கு முதல் பிறந்த இரட்டைப் பிள்ளைகளா?


அம்மா:

ம்ம்ம்! சரித்திரத்தை நன்றாகத் தான் படித்து வைத்திருக்கிறாய். இந்த மகனின் பெயர் சலீம்! அவன் யார் என்பதை பிறகு கூறுகிறேன்.


மகள்:

சரி கூறுங்கள்!


அம்மா:

உல்லாச பயணம் போய் இருந்தாலும் அக்பரின் மனம் முதல் நாள் அவையினரிடம் பகிர்ந்து கொண்ட தனது ஐயம் ஒன்றையே சுற்றி சுற்றி வந்தது. "எல்லாம் வல்ல இறைவன் பக்தர்களின் துயர் துடைக்க ஏன் அவதாரம் எடுத்து வர வேண்டும்? தனது ஊழியர்களில் ஒருவரை  அனுப்பி மக்களின் பிரச்சனையைத் தீர்க்கலாமே?" என்பது தான் அந்த ஐயம்.

திடீரென்று அக்பரின் செல்லப் புதல்வன் சலீம் நீரில் விழுந்து விட்டான் என்று படகில் களேபரம்! அதிர்ந்த சக்கரவர்த்தி மகனைக் காப்பாற்ற உடனே ஏரியில் குதித்தார். நீரில் மூழ்கிக் கொண்டிருந்த சலீமைப் பற்றி மேலே இழுத்தார்.  ஆனால் அது சலீம் அல்ல!


மகள் :

பின் வேறு யார் அம்மா?


அம்மா:

அது சலீமைப் போலவே காட்சியளித்த ஒரு பொம்மை. சலீம் படகிலேயே பாதுகாப்பாக இருந்தான். ஆவேசத்தில்  அக்பர், " இந்த விபரீத விளையாட்டை யார் அரங்கேற்றியது?" என்று கர்ஜித்தார். அவருடைய பிரியத்துக்குப்  பாத்திரமான அமைச்சர் ஒருவர் தான் இதை செய்தது. அவர் யார் தெரியுமா?


மகள்:

அக்பர் கதைகளில் பீர்பால் நிச்சயம் இருப்பரே! அவர் தானே அது?


அம்மா:

மிகவும் சரி! பீர்பால் கூறினார், " சக்கரவர்த்தியே! தங்களின் மகன் ஆபத்தில் சிக்கிக் கொண்டதை  அறிந்ததும் அவனைக் காப்பாற்ற பணியாட்களில் ஒருவனை  அனுப்பிவிட்டு நீங்கள் ஓய்வு எடுக்கவில்லையே! நீரில் பாய்ந்து விட்டீர்கள் அல்லவா? அது போல தான்  இறைவனும் தனது செல்வங்களான பக்தர்கள் துயரப்படும் போது ஊழியன் ஒருவனை  அனுப்பிவிட்டு ஓய்வெடுத்துக் கொள்வதில்லை. தானே அவதாரம் எடுத்து  வருகிறார்!" என்று கூறினார். சக்கரவர்த்தியின் ஐயம் தெளிந்தது. பொட்டில் அறைந்தாற்போல் விளக்கிய  அமைச்சரைத்  தழுவிக் கொண்டார்.


மகள்:

சபாஷ்! என் ஐயமும் தீர்ந்தது! உங்களை நானும்  கட்டித் தழுவிக்கொள்ளட்டுமா? சரி சலீம் பற்றி ஏதோ கூறுவதாய் சொன்னீர்களே , என்ன அது?


அம்மா:

அக்பருக்கு முதலில் பிறந்த இரட்டையர்கள் இறந்தது உண்மை தான். அனால் அதன் பின் அவர் குழந்தை வரம் வேண்டி சலீம் என்ற ஒரு துறவி இடம் சென்றிருந்தார். அவரை சந்தித்தப் பிறகு அவருக்கு பிறந்த குழந்தை தான் சலீம். அவர் நினைவாக அக்பர் அவர்னுக்கு இந்த பெயரை இட்டார். இவனின் இன்னொரு பெயர் தான் ஜஹாங்கிர். முடி சூட்டும் தருணத்தில் இப்படி அழைக்கப்பட்டான்.


மகள்:

அற்புதம் அம்மா! அற்புதம்


ஜெய கீதா

2 comments:

  1. அற்புதம் ஜெய கீதா அற்புதம்

    ReplyDelete
  2. நல்ல தகவல்......

    ReplyDelete