Saturday 23 February 2013

லட்சங்களில் ஒருவன் - ஈ.வே.ரா



தமிழகத்தில் உள்ள பெரும்பாலோனோர், ஏன் சில நூறு பேரைத் தவிர அனைவரும் தங்கள் பெயர்களில் தங்கள் சாதிப் பெயரை சேர்த்து எழுதுவது, சொல்லுவதில்லை. இத்தகைய பெருமைக்கு காரணமாக இருப்பவர், பெரியார் என்று அழைக்கபடுகிற தோழர் ஈ.வே.ராமசாமி.

ஆம், பெரியார் தனது ரஷ்ய பயணம் முடித்து தமிழகம் திரும்பிய பின்னர் தம்மை தோழர் என்றே அழைக்க மற்றவரை கேட்டுக்கொண்டார். தமிழ் பெண்கள் தங்கள் கணவரை எப்படி அழைப்பார்கள்? மரியாதையும் பக்தியும் மிகுந்து ஏதோ கணவனின் அடிமைப் போல கருதி இந்த காலத்தில் ’என்னங்க’ கருப்பு வெள்ளை காலத்தில் ‘நாதா’. தவறி கூட பெயரை சொல்லவிடாமல் அடிமையுண்டு கிடந்தது பெண்கள் உலகம். ஒரு கூட்டத்தில் தோழர் ராமசாமி, தன் மனைவி நாகம்மையை பார்த்து, இனி தன்னை அவர் “தோழர் ராமசாமி” என்றே அழைக்க வேண்டும் என்று கூறி, அவ்வாறு பொது மக்களிடையே தன்னை அவர் அழைக்கச் செய்து பெண் விடுதலைக்கு விதை விதைத்தார். யோசித்து பாருங்கள், எவ்வளவு பெரிய காரியம் அது. இது நடந்தது அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்னர். 


தோழர் ராமசாமி ஈரோட்டில் பிறந்தார். அவரது குடும்பம் வணிகத்தில் ஈடுபட்டு வந்தது. கடவுள் பக்தியும் அதோடு சேர்ந்து கடவுளின் அவதாரர்களாக சொல்லிக்கொண்ட பிராமணர்களையும் அவர்கள் தொழுது வந்தார்கள். அதற்கு அப்படியே மாறாக இருந்தார் தோழர் ராமசாமி. அவரது சிறு வயதில் அவருக்கு இருந்த கேள்வி கேட்கும் திறமையே அவரை பகுத்தறிவாளராக மாற்றியது. 

“ போட்டோவில் இருக்கிற சாமியெல்லாம் இரண்டு பெண்டாட்டி கட்டிகறது, அப்ப நம்ம அப்பா இரண்டு பெண்டாட்டி கட்டிகலாமா? “

“ வாலிய நேர்ல மோதி ஜெயிக்க முடியாம பின்னாடி இருந்து அம்பு விட்டு கொன்ன ராமன் வீரனா ?, இல்ல கோழை ! “

இதனைப் போல பல கேள்விகள் கேட்டார். பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் தப்பி ஓடிப்போனது  மடக் (மதக்) கூட்டம்.

ஒருமுறை பல பேரிடம் கடன் வாங்கி திருப்பி தராமல் இருந்த பிராமணன் ஒருவனை அவர்கள் சாப்பிடும் சத்திரத்தின் உட்புகுந்து காவலர்களிடம் பிடித்து கொடுத்தார். பிராமணர்கள் சாப்பிடும் இடத்திற்கு அன்னியர்கள் வந்தால் அது பாவம் என்று கருதி அந்த சாப்பாட்டை எல்லாம் கீழே கொட்டிவிட்டார்கள். அதுவும் பிற மக்கள் தானத்தில் கொடுத்த பணத்தில் இருந்து தாயரிக்கப்பட்ட உணவு. இந்த பாவச்செயலைப் பற்றி அவரின் தந்தையிடம் புகார் கொடுக்க வந்தது அந்த கூட்டம். அவர் தந்தை அவரை அனைவர் முன்னிலையிலும் அடித்து கேவலமாக திட்டி தீர்த்தார். அதற்கு அவர் “ மத்தவங்க காசுல ஓசி சாப்பாடு சாப்பிட்டு, அத தீட்டு பட்டுறிச்சினு முழுசா கீழ கொட்டி இருக்கற இவங்க திமிர் புடிச்சவங்களா நான் திமிர் புடிச்சவனா “ என்று கேட்டார். அந்த காலத்தில் நிழவி வந்த கொள்ளை இது. நீங்களும் தெரிந்துக்கொள்ளுங்கள் கேட்காத வரை நியாயம், தர்மம் இவையெல்லாம் உறங்கிக்கொண்டிருக்கும்.  


அவர் உறவுக்கார பெண் நாகம்மையை திருமணம் செய்துக் கொண்டார். அவர்களுக்கு பிறந்த குழந்தை ஐந்தாம் மாதம் இறந்தது. பெரும் சோகத்தில் ஆழ்ந்தார். அந்த சோகமான நேரத்திலே அவர் தந்தை வணிக இடத்தில் கோபம் கொண்டு கண்டபடி திட்டிவிட, வீட்டை விட்டு யாருக்கும் தெரியாமல் வெளியேறி காசிக்கு சென்றார்.


அங்கு அவருக்கு சாப்பிட சோறு கொடுக்காத பிராமணர்கள் மீது கோபம் கொண்டார். ரோட்டில் கிடந்த எச்சில் இலையில் மீதியிருந்ததை உண்டார். சாதியொழிப்பு சுடரொளி அன்று பட்ட அவல நிலை இது. அங்கேயே நிற்கவில்லை அந்த ஒளி, அது மென்மேலும் பிரகாசிக்கவே செய்தது.


பின் தன் வீட்டிற்கு திரும்ப வந்தார். வியாபாரம் செய்ய தன் தந்தைக்கு துணையாக இருந்தார். சிறிது காலம் கழித்து தந்தையின் அனைத்து பொறுப்புகளும் இவரிடம் வந்தது. அப்போது தன் கடையில் வேளைப் பார்த்த ஒருவனுக்கு வேற்று சாதியில் இருந்த பெண்ணை திருமணம் செய்து வைத்தார். அவர் செய்து வைத்த முதல் சாதி மறுப்பு திருமணம் அது. 


ஈரோட்டின் முனிசிபல் சேர்மேனாக இருக்கும் போது அவருக்கு ராஜாஜியின் நட்பு கிடைத்தது. அவரை பின்பற்றி காந்திய கொள்கையில் ஈடுப்பட்டார். மது ஒழிப்பு போரட்டத்தின் போது அவருக்கு சொந்தமான ஐநூறு தென்னை மரங்களை வெட்டச் செய்தார். தென்னை மரம் தலைமுறை தலைமுறையாக பயன் தரும். ஆனால் தான் கொண்ட கொள்கைக்காக எதையும் செய்யும் துணிவு அவரிடம் இருந்தது. இன்று தன் பையில் இருந்து 10 ரூபாய் எடுத்து தருகிற தலைவரை கண்டுப்பிடிப்பது அரிது.


தன் வீட்டு பெண் வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது என்று இன்றும் தடுத்து வைக்கிற ஆண்கள் உண்டு. மது ஒழிப்புப் போராட்டத்தின் போது தன் மனைவி, தன் தமக்கையோடு வீதிக்கு வந்து போராடினார். பெண் விடுதலைக்கு அவர் செய்த ஆரம்பத் தொண்டு இது. கதர் ஆடை உடுத்த வேண்டும் என்கிற காந்திய கொள்கயை பின்பற்ற அவரும் அவர் குடும்பத்தார் வைத்திருந்த அனைத்து பட்டுத் துணியையும் நாடக கம்பெனிக்கு வழங்கிவிட்டார். இது அவரின் தியாக குணத்திற்கு மற்றொரு எடுத்துக்காட்டு.


பதவி, பலம் என்று பெருமைக்கு அனைவரும் அலையும் இந்த காலத்தில் அவர் ஒரே கையெழுத்தில் 29 பதவிகளை ராஜினாமா செய்தார். விடுதலைப் போராட்டத்தின் போது ஆங்கிலேயர்களுக்கு எதிர்ப்பு காட்டும் விதமாக செய்த காரியம் இது. 


ராஜாஜியின் வேண்டுகோளில் காங்கிரசில் சேர்ந்தார். ஆனால் காங்கிரஸ் பிராமணர்களுக்காக மட்டுமே பேசும் கட்சியாக இருந்ததால் அதனை விட்டு வெளியேறினார். சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தார். 


கேரளாவிலுள்ள வைக்கம் என்னும் ஊரில் கீழ்ச்சாதி மக்களுக்கு கோவிலினுள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. அதனை எதிர்த்து அங்கு சென்று போராட்டம் நடத்தி அனுமதி பெற்றுத்தந்தார். அத்தகைய வெற்றியின் பின்னர் ”வைக்கம் வீரர்” என்று அழைக்கப்பட்டார். 


அவர் தான் சொல்வதை அப்படியே கேளுங்கள் என்று சொல்லவில்லை. கேட்டதை உங்கள் அறிவை கொண்டு சிந்தித்துப்பாருங்கள். உங்களுக்கு எது நல்லதாக படுகிறதோ அதனை பின்பற்றுங்கள் என்று கூறினார். அவர் மக்களை யோசிக்க செய்தார். ஒரு மனிதனை தான் ஏன் இந்த நிலைமைக்கு ஆளாக்கப் பட்டோம் என்று யோசிக்கச் செய்தால் மட்டுமே அவன் மனதில் ஒரு ஞானம் பிறக்கும். அதனை பிறக்க வழிச் செய்தார் தோழர் ராமசாமி.


தன்னுடைய எதிரியாக இருப்பினும் அவர்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவதே ஒரு சிறந்த பண்பாளரின் அடையாளம். தோழர் ராமசாமி மிகச் சிறந்த பண்பாளர். திரு.வி.க-க்காக விபூதி பூசிக்கொண்டது, தன் நண்பரின் அறுபது ஆம் பிறந்தநாளுக்காக பழனி மலையேறியது, நண்பருக்காக வீட்டில் பூசை நடத்த ஒத்துக்கொண்டது. இவையெல்லாம் அவரை நல்ல மனிதனாக பிறரை மதிக்கும் ஒரு பண்பாளனாக காட்டியது. 


இன்று பல ஆயிரம் பேர் தீண்டத்தகாதவர்களாய் இருந்தவர்கள், பெரிய பெரிய பணிகளிலும் தொழில்களிலும் படித்த பட்டதாரிகளாகவும் விஞ்ஞானியாகவும் இருக்க முடிகிறதென்றால் அதற்கு முக்கிய காரணம் தோழர் ராமசாமி. தன்னுடைய குலத்தொழிலை தான் ஒருவர் செய்ய வேண்டும் என்று இருந்த வழக்கத்தை மாற்றி இன்று முடிதிருத்துபவரின் மகன் ஒரு மருத்துவராக, பிணம் எரிப்பவரின் மகள் ஒரு பட்டதாரியாக இருக்க செய்தவர் தோழர் ராமசாமி. 


பெண் விடுதலைக்காகவும், பெண் கல்விக்காகவும் அவர் செய்த பணி கடலினும் பெரியது. ஒரு பெண் விடுதலை அமைப்பினரின் கூட்டத்தில் அவருக்கு “பெரியார்” என்று பெயர் சூட்டி தமிழகம் தனக்கு பெருமை தேடிக்கொண்டது.


பெரியார் என்று சொன்னாலே அவரது கடவுள் எதிர்ப்பு தான் அனைவரது உள்ளத்திலும் ஞாபகம் வரும். அவர் கடவுள் இருந்திருந்தால் எதிர்த்திருப்பார். இல்லையென்றானப் பின் அவர் மக்களை பகுத்தறிவாளர்களாய் மாறச் சொன்னார். கடவுள் என்கிற சர்வ வல்லமை படைத்த பொருள் இருக்குமாயின் சமூகத்தில் ஏன் இந்த ஏற்ற தாழ்வு, ஏன் இந்த பாகுபாடு. முன் ஜென்மம் பின் ஜென்மம், பாவம், புண்ணியம், தலைவிதி என்று சொல்லி திரிந்த ஏமாற்று கூட்டத்தின் கொட்டத்தை அடக்க முளைத்த வாள் தோழர் ராமசாமி. 


சாமி, கோவில் என்பது மக்களுக்கு நன்மை செய்யவே ஒழிய நடப்பதை பார்த்து ஓரமாய் ஒதுங்க இல்லை. இதே நாட்டில் தான் ஒரு இந்து கோவிலில் பல கோடி பணம் கொட்டுகிறது, பல லட்சம் மக்கள் பட்டினியில் சாகிகிறார்கள். என்ன ஒரு காட்சி!. 


அவர் தான் சொல்வதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை. தோழர் ராமசாமி உங்களுக்கு இருக்கின்ற மூளையை வைத்து சிந்திக்க சொல்கிறார். சிந்திக்காமல் விரயம் செய்கிற மூளையெல்லாம் மனிதனாக ஏற்றுக்கொள்ள மாட்டாது.


எந்த சாமியையும் சாமியின் பெயரில் அட்டூழியம் செய்யும் சாமியார்களையும் அவர் வாழ்க்கை முழுதும் சாடினாரோ, அந்த “சாமி”யின் பெயரையே தாங்கிய “ராமசாமி” நம் பெரியார். இன்று தமிழகத்தில் நடக்கின்ற அரசியல், பண்பாடு, கலாசாரம் அனைத்திலும் தோழர் ராமசாமி மறைவுண்டு வாழ்ந்து வருகிறார். 

" ஏனென்றால் பெரியார் வரலாறு அல்ல முடிந்து போவதற்கு, அவர் ஒரு தொடர் கதை. தமிழ் இருக்கும் மட்டும் அவர் இருப்பார். "

                                                - கோழி.




2 comments:

  1. நண்பா, பெரியார் பற்றி ஐந்தாம் வகுப்பில் பெண்ணடிமை பற்றி படித்ததற்கு அடுத்து இப்போது தான் கொஞ்சம் அவரைப் பற்றி தெரிந்திருக்கிறேன்.

    சில வரிகள் மிக நன்றாக எழுதி இருக்கிறாய்.......
    மடக் கூட்டம், பேருல சாமின்னு வச்சிக்கிட்டே கடவுளை எதிர்த்தார். அன்புக்கு உரியவர்கள் சொன்னதால் திருநீரிடுவது, இப்படி நிறைய வரிகள்.....

    அவருக்கும் அண்ணா அவருக்கும் உண்டான நெருக்கமும், அவர் ஏற்படுத்திய தி.க பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏன் கருப்பு சட்டை அணிகிறார் என்று அறிந்து கொள்ள ஆர்வம். விவரிக்கவும்...

    ReplyDelete
  2. பெரியார் அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய பாடம், நண்பா... அவரை பற்றி திரு.ஆனைமுத்து எழுதிய புத்தகத்தை படியுங்கள்.... அளவு கருதியே மற்றதை சுருக்க வேண்டியதாகிவிட்டது.

    ReplyDelete