Sunday 22 February 2015

இயல்பு நிலைக்கு அருகில்...





பைத்தியக்காரனாகிய நான்,
சில காலம்
இயல்பு நிலைக்கு
திரும்பலாம் என்றிருக்கிறேன்.
எப்படி என்றா கேட்கிறீர்கள்…

ஒரு ரயில் நிலையத்தில்
குண்டு வெடிப்பு நிகழ்ந்தால்,
சிதறிய இரத்தம் உறைவதற்குள் – நீங்கள்
இயல்பு நிலைக்கு திரும்புவீர்களே,
அதை போல…

ஒரு பச்சிளம் குழந்தை
பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டால்,
அந்த வலி மறையுமுன்பே - நீங்கள்
இயல்பு நிலைக்கு திரும்புவீர்களே,
அதை போல…

மீத்தேன் வாயு போராட்டத்தை ஆதரித்தோ,
ஆற்று மணல் கொள்ளையை எதிர்த்தோ,
ஒருநாள் அடையாள கடையடைப்பு
போராட்டத்தை நிகழ்த்தி,
இயல்பு நிலைக்கு திரும்புவீர்களே,
அதை போல…

ஐந்து வருடத்திற்கு ஒருவரை
ஆட்சி கட்டிலில் அமர்த்தி
உங்களை சுரண்ட அனுமதித்துவிட்டு,
டீக்கடையில் அமர்ந்து
இட்லி கம்யூனிசம் பேசிவிட்டு
வீராவேசமாய் எழுந்து போவீர்களே
அதை போல…

இவையெல்லாம் விட,
தலைக்கேறிய போதையால்
விபத்தில் சிக்கி மூளை சிதறியவனையும்,
சாக்கடையில் விழுந்து
பிதற்றி கொண்டிருப்பவனையும்
சர்வ சாதரணமாய் கடந்து
இன்னொரு குவாட்டர் சொல்வீர்களே
அதை போல…

No comments:

Post a Comment