Saturday 11 May 2013

குறள் மழை - 6



இல்லறவியலின் இரண்டாவது அதிகாரமும் அறத்துப்பாலின் ஆறாவது அதிகாரமுமான, "வாழ்க்கைத் துணை நலம்" இந்த மாத இடுகையாக!


மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

பிறந்த வீட்டுக்கும்
புகுந்த வீட்டுக்கும்
பெருமை சேர்த்து
புதுமை பொதித்து
பெற்றப் பணத்தில்
பெருமிதமாய் வாழ்பவளே
இனிய வாழ்க்கைத் துணையாள்!


மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.

கோடி கொடியாய்க் கொட்டிக்கிடப்பினும்
கட்டிக்கொண்டவள் குணமற்றுப் போனால்
இல்லறம் மணமற்றுப் போகும்


இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை

நற்குணம் கொண்ட கொண்டவளைக் கொண்டவன்
கொள்ளாதது தான் என்ன!
நற்குணம் கொள்ளாக் கொண்டவளைக் கொண்டவன்
கொண்டது தான் என்ன!


பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

ஒருவனுக்கு மட்டும் அள்ளிக் கொடுக்க
கற்பென்னும் கருமணியை
கருத்தாய்க் காத்து
கொண்டவனுக்கேக் கொடுப்பவளைக் காட்டிலும்
அவனுக்கு எதுவும் பெரிதல்ல!


தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

திடமான தெய்வமென
தினம் தினம்
உன்னை மட்டுமே தொழுதெழும்
உன்னுயிர்த் தோழி
பெய் என்றால்
மழையும் பொழியும்
இயற்கைப் பணியும்


தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

மனம் காத்து
குணம் காத்து
தன்மானம் அதைக் காத்து
கணவன் தன் புகழ்க் காத்து
குடும்பக் கோவிலைச் செய்பவள் தான் மனைவி!


சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

நல்லொழுக்க நகை சூடி
கரும்பெட்டியிலே அவளைப் பூட்டி வைத்து
பெரும் சாதனைப் புரிந்துவிட்டதாய் நினைக்கும் கணவனே கேள்!
அவள் ஒழுக்கத்தை அவளாலன்றி வேறு யாராலும் காக்க முடியாது.


பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

சீரும் சிறப்பும் கொடுத்து
சீக்கில்லா செம்மையான வாழ்க்கையை
தன் கணவனுக்குக் கொடுக்கும் மனைவிக்கு
மேலுலக எட்டாக் கனியும் எட்டும்!


புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.

புகழ்ப் போற்றும் பெண் கிட்டாதவன்
பழித் தூற்றும் படையர் முன்
புழுதி நோக்கி பயனிக்கலாகிறான்!


மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு

நர்குணமாம் அவள் அழகு
நற்பேறு அவள் அணிகலன்
இவை முன் புற அழகு புரண்டோடும்
அக அழகு நிறைந்தாடும்!

No comments:

Post a Comment