Wednesday 11 December 2013

நிவேதிதா - சிறு கதை


நிவேதிதா
நிவேதிதா நீண்ட நேரமாக ரகுவுக்காக காத்திருந்தாள். சில நிமிடங்களில் ரகு வேகமாக ஓடி வருவது தெரிந்தது. ரகு வந்தவுடன் அவனை கட்டியணைத்துக் கொண்டு தன் காதலை வெளிப்படுத்தினாள் அவள். இருவரும் ஆறு மாதங்களாக காதலிக்கின்றனர். ரகு முகத்தில் ஏதோ ஒரு கவலை ரேகை பதிந்திருப்பதை அவள் கண்டாள். என்ன விஷயம் எனக் கேட்டும் ரகு மழுப்பி விட்டான். பின் சில நிமிட பேச்சுக்குப் பின் ரகு தன் கை விரலை அவளுக்கு பின்னால் நீட்டி, "அதோ பார் உனக்கு பிடித்தது வருகிறது". அவள் அந்தப் பக்கம் திரும்பியவுடன் ஒரு நீல நிற திரவத்தை அவள் கையில் ஊசி மூலமாக ஏற்றினான். இதனை சற்றும் எதிர்பாராத நிவேதிதா "என்ன அது?" எனக் கேட்டுக் கொண்டே மயக்கமாகி அவன் தோள் மீது சாய்ந்தாள். சிறிது நேரத்திற்கு பின் கண்விழித்த அவள் ரகுவைப் பார்த்துக் பொறுமையாக கேட்டாள் "யார் நீங்கள்?"

"உண்மையாகவா?" ரகு இன்னும் ஆச்சர்யம் விலகாமல் கேட்டான். அந்த மருத்துவ நண்பன் அமைதியாகஆமாம் என்பது போல் தலையசைத் து  "இன்னும் நீ 100 வருடம் உயிர் வாழ போகிறாய் " என்றான்.. ரகுவுக்கு தலை வெடித்து விடும் போல் இருந்தது. அவனுடைய வாழக்கையை தொலைத்துவிட்டதது போல் உணர்ந்தான்.
ஆறு மதங்களுக்கு முன்
ரகு ஒரு மருந்து தயாரிக்கும் கம்பெனியின் ஆராய்ச்சி துறையில் வேலை செய்பவன். அன்று சிறிது நேரம் அதிகமாக தூங்கிவிட்டபடியால் அலுவலக பேருந்தை தவற விட்டுவிட்டு பொது பேருந்தில் சென்றான். அதில் ஏறி அமர்ந்ததும் தூங்கிவிட்ட அவன் சத்தமான பேச்சுக்களைக் கேட்டு கண் விழித்தான். அவன் அலுவலகம் வர இன்னும் அரை மணி நேரமாவது ஆகும். சத்தம் எங்கிருந்து வருகிறது எனத் திரும்பி பார்த்த போது தான் அந்தப் பெண் அவன் கண்ணில் பட்டாள். அவளை ஒரு நான்கைந்து பேர் சத்தமாக கிண்டல் செய்து கொண்டிருந்தனர். தினமும் பேருந்தில் செல்பவர்களுக்கு இது வழக்கமான ஒன்றுதான். அனைவரும் எதுவுமே நடக்காதது போல் அமர்ந்திருந்தனர். அந்தப் பெண் மட்டும் நெளிந்து கொண்டிருந்தாள். வார்த்தைகள் மேலும் தடிக்க ஆரம்பித்திருந்தன. ரகுவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் எனத் தோன்றியது. ஆனால் எவ்வாறு செய்வது. அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. பேருந்து அடுத்த நிறுத்தத்திற்கு அருகில் வந்தது. அவன் நேராக அந்தப் பெண்ணிடம் சென்று "நாம் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது" என்றான். இவனை கண்டவுடன் வார்த்தைகளும் அடங்க ஆரம்பித்தன. அதிர்ச்சி அடைந்த அவள் சுதாரித்துக் கொண்டு அவனுடன் இறங்கி விட்டாள். பேருந்து சென்றவுடன் அவன், "சாரி. அவர்களிடம் இருந்து உங்களை  காப்பாற்றவே அவ்வாறு செய்தேன்" என்றான். "பரவாயில்லை, நிவேதிதா" என கைகுலுக்கினாள் அவள். இவனும் தன் பெயரை உதிர்த்து விட்டு அவன் வழியில் சென்றான்.
பின் ரகு தினமும் தனது பேருந்தை தவற விட்டான். அவளும் அவனை கவனிக்க தவறவில்லை. ஒரு நாள் பேருந்து அமைதியாகவே இருந்தது. யாரும் அவளை கிண்டல் செய்ய வில்லை. ஆனால் ரகு அவளிடம் சென்று , "நாம் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது". அவளும்  சிரித்துக் கொண்டே அவனுடம் இறங்கினாள்.
பேருந்து நிறுத்தத்தின் ஒரு ஓரமாக நின்ற அவளிடம் , "நான் உன்னை காதலிக்கிறேன்" என்றான் ரகு.
"அன்னிக்கு  நான் உங்கள யாருனே தெரியாதுனு சொல்லியிருந்தா என்ன பண்ணியிருப்பிங்க"
"ஒரு பொண்ணுக்கு அவங்க பேசுன வார்த்தைகள் எவ்வளவு கஷ்டமா இருக்கும்னு எனக்குத் தெரியும். அதான்  நான் அசிங்கப் பட்டாலும்  பரவா இல்லைன்னு  உங்ககிட்ட அப்படி பேசினேன்"
சிறிது நேர மௌனத்திற்கு பின் அவனே தொடர்ந்தான்.
"நான்  சொன்னதுக்கு பதிலே இல்லையா?"
நிவேதிதா ஒரு கள்ள புன்னகையை மட்டும் உதிர்த்தாள்.
சில மாதங்களுக்கு பிறகு அவனுக்கு உடல் நிலை சரியில்லை என்று ரத்தப் பரிசோதனை செய்யப் பட்டது. அவனது மருத்துவ நண்பன் அவனை தனியாக அழைத்து அவனுக்கு ஒரு வியாதி உள்ளதாகக்  கூறி அதன் பேரை சொன்னனான். அவனும் அதை கேள்வி பட்டுள்ளான். அவன் அந்த பரிசோதனை விவரங்களை வாங்கி பார்த்தான். ஆம். இனி அவன் ஓர் ஆண்டுக்கு மேல் உயிரோடு இருக்க மாட்டான் என்பதை வேறு வார்த்தைகளால் அந்த பரிசோதனை அறிக்கை கூறியது. அவனது உலகம் இடிந்து போனது. அவன் அங்கேயே அமர்ந்து விட்டான். கவலைப் பாடதே என அவனது மருத்துவ நண்பன் சொன்னான்.
"இது என்னைப் பற்றியது அல்ல. நான் நிவேதிதாவை நினைத்துதான் கவலைபடுகிறேன்"
இறுதியாக யோசித்து ஒரு முடிவு செய்தான். ஒரு மருந்து கண்டறிய முடிவு செய்தான். ஒரு சில மாதங்களில் அதனை கண்டறிந்தான். கடைசி ஆறு மாதங்களில் நடந்த விஷயங்களை அது மறக்கடித்து விடும். அவனது மருத்துவ நண்பன் அவனை எச்சரித்தான்.
"அவள் என்னை நின்னைத்து  வேதனை படுவதை விட, சில மாதங்கள் பின்னால் வாழ்வது பெரிதல்ல" என்ற பதிலை மட்டும் தந்தான். பின் அவளை அழைத்தான்  "மீட் பண்ணலாமா?"

"யார் நீங்கள் " என நிவேதிதா கேட்டவுடன் அவனது கண்கள் நீர் கோர்த்து கொண்டன. சுதாரித்துக் கொண்டு "நீங்கள்  மயங்கி கீழே விழ சென்றீர்கள். அதன் தாங்கி பிடித்தேன் " என கூறி விடு வேகமாக நகர்ந்து விட்டான்.
அவனது ஆராய்ச்சி சாலையில் நுழைந்தவுடன் வெடித்து அழத்  தொடங்கினான். கோபத்தில் அவனது டேபிளின் மேலிருந்த அனைத்தையும் கீழே தள்ளி  விட்டான். அதிலிருந்த அந்த நீல நிற திரவக்  குடுவையும் உடைந்து அந்த திரவம் ஆவியாகியது. சிறிது நேரம் யோசித்த அவன் அந்த ஆவியை முழுமையாக சுவாசித்தான். நிவேதிதாவை மறக்க இது உதவும் என அவன் நினைத்தான்.
மறுநாள் அவனுக்கு எதுவுமே மறக்க வில்லை. பரிசோதனை செய்த பொது அவனது வியாதி குனமாகியிருப்பது தெரிந்தது.
"அந்த மருந்து உன்னுடைய ஞாபக செல்களை அழிப்பதற்கு பதில், தீய செல்களை அழித்து விட்டது. நீ தீர்க்க முடியாத வியாதிக்கு மருந்து கண்டறிந்துள்ளாய்." ஆனால் அவனுடைய கவலை அதுவல்ல.
"நிவேதிதா அனைத்தையும் மறந்து விட்டாள். இதை அவளிடம் சொன்னாலும் கதை விடுவதாக நினைப்பாள். அதனால்.."
"அதனால், இந்த மருந்தின் பார்முளாவை நீயே வைத்துக் கொள். நான் அனைத்தையும் மறக்கப் போகிறேன்"
அன்றிரவு, அந்த நீல நிற மருந்தை அவனும் தன உடலில் செலுத்திக் கொண்டான்.
------------------------------------------------------------------------------------------------------------
மருந்தின் காரணமாக அவன் தாமதமாக விழித்தான். அவனுடைய அலுவலக பேருந்து சென்றிருந்தது. அதனால் பொது பேருந்தில் சென்றான். சிறிது தூரம் சென்றதும் சிலர் ஒரு பெண்ணை கேலி செய்ய  ஆரம்பித்தனர். தினமும் பேருந்தில் செல்பவர்களுக்கு இது வழக்கமான ஒன்றுதான். அனைவரும் எதுவுமே நடக்காதது போல் அமர்ந்திருந்தனர். அந்தப் பெண் மட்டும் நெளிந்து கொண்டிருந்தாள். வார்த்தைகள் மேலும் தடிக்க ஆரம்பித்திருந்தன. ரகுவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் எனத் தோன்றியது. ஆனால் எவ்வாறு செய்வது. அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. பேருந்து அடுத்த நிறுத்தத்திற்கு அருகில் வந்தது. அவன் நேராக அந்தப் பெண்ணிடம் சென்று "நாம் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது" என்றான். இவனை கண்டவுடன் வார்த்தைகளும் அடங்க ஆரம்பித்தன. அதிர்ச்சி அடைந்த அவள் சுதாரித்துக் கொண்டு அவனுடன் இறங்கி விட்டாள். பேருந்து சென்றவுடன் அவன், "சாரி. அவர்களிடம் இருந்து உங்களை  காப்பாற்றவே அவ்வாறு செய்தேன்" என்றான். "பரவாயில்லை, நிவேதிதா" என கைகுலுக்கினாள்  அவள்.

2 comments: