Saturday 24 August 2013

ஓடிக்கொண்டிருக்கிறேன்

எங்கேயோ ஓடிக்கொண்டிருக்கிறேன்.
என்னை போல பலரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
அதில் சில எங்கேயோ பார்த்த முகங்கள்
சட்டென நினைவில் வரவில்லை.
அவர்களின் பார்வையின் அர்த்தமும் புரியவில்லை,
நீயுமா… என்பது போலவேயிருக்கிறது.
சலனத்துடனே அந்த பார்வைகளை கடந்து செல்கிறேன்.


என்னை சிலர் முந்தி செல்கின்றனர்.
எனக்கு தெரியும்
என் அதிகப்பட்ச வேகத்தில்
நான் சென்றுக் கொண்டிருக்கிறேன்.
இலக்கு எதுவென்று புரியவில்லை.
எல்லோரும் செல்லும் பாதையிலேயே
நானும் சென்றுக்கொண்டிருக்கிறேன்.
வெற்றி பெற்றவர்கள் எல்லாம்
உங்கள் தனித்த பாதையில் செல்லுங்கள்
என்று அறிவுறுத்துகிறார்கள்.
பலன் இல்லை.
அதை கேட்பதற்குக்கூட எனக்கு நேரமில்லை
ஓடிக்கொண்டிருக்கிறேன்.
புன்னகைத்தப்படியே
என்னை கடந்துசெல்கிறான் ஒருவன்.
எங்கேயோ பார்த்த முகம்.
கண்டிப்பாக அவன்
என் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்ற
நண்பனாகத்தான் இருக்க வேண்டும்.
மன்னித்துவிடு நண்பா…
என் நினைவில் எதுவுமில்லை.
நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்.
நண்பனுக்கே இந்நிலை என்றால்
உறவினர்களுக்கு…
சொல்லவே தேவையில்லை,
நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்.


அதிவேகம்…
கட்டுப்படுத்தும் திராணியில்லாமல்
என் கண்ணெதிரிலேயே சரிந்து விழுகிறான் ஒருவன்.
நான் பதைப்பதைக்கிறேன்.
அதற்குள்ளாகவே
அவனை மிதித்தே,
அவனின் தடயத்தை அழித்தே ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
நானும் ஓடிக்கொண்டிருக்கிறேன்,
என் அதிகப்பட்ச வேகத்தைக் கடந்து…
இதேநிலை நாளை எனக்கும் ஏற்படலாம்.
அதையெல்லாம் யோசிக்க நேரமில்லை
ஓடிக்கொண்டிருக்கிறேன்.


சட்டென எதுவோவொன்று
என்னை பின்னால் இழுக்கிறது.
அது யாழியின் நினைவாகக்கூட இருக்கலாம்
என நீங்கள் நினைத்தால்,
ஒரு சலனமற்ற
வெறுமைக் கலந்த மௌணம் ஒன்றே
என்னிடமிருந்து பதிலாய் கிடைக்கிறது.
உங்களுக்கு புரிந்திருக்கும்
நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்.

ஓடிக்கொண்டேயிருக்கிறேன்….

                                                 -யோகி

2 comments:

  1. நண்பா ஓடிக்கொண்டிருக்கிறாய் அது புரிகிறது, தெரியவும் செய்கிறது. யாழியின் நினைவு இன்னொரு யாழியை கடக்கும் வரை மட்டுமே...
    உலகம் உருண்டை என்பதால் முடிவும் உருண்டையாகி விடாது. முற்று புள்ளி உண்டு... அப்போது இளைப்பாருவாய்...

    ReplyDelete
  2. என்னை கண்ணாடியில் பார்த்தது போன்று உள்ளது இதனை படித்தவுடன்.... யதார்த்தம்...

    ReplyDelete