Wednesday 12 December 2012

வரலாறு முக்கியம் அமைச்சரே - 1


இந்தியா என் தாய் நாடு!
இந்தியர்கள் அனைவரும் என்னுடன் பிறந்தவர்கள்!
என்    தாய்த் திருநாட்டை......


     
இப்படியாய் பள்ளிக்கூட நாட்களில் தினமும் இந்தியா என்ற வார்த்தை  என்  செவிகளில் ஒலிக்கும்போதெல்லாம் எனக்கு புரியவில்லை நம் தாய் நாட்டைப் பற்றி நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியது நம் கடமை என்று! தாய்நாட்டுப்பற்று என்பது எப்போது நமக்கு பிறக்கும்? நம் தாய்நாட்டை நாம் எப்போது புரிந்துக்கொள்ள முயல்கிறோமோ அப்போது தான். முழுமையாய் நாம் புரிந்துக்கொண்ட நிலையில், அந்தப் பற்று முழுமை அடையும். அவள் மீது ஒரு நேசம் பிறக்கும். அவளுக்கென எதையும் செய்ய துணிவு பிறக்கும். எனவே நான் என் தாய்நாட்டை நேசிக்க முழுமையாய் ஆயத்தமானேன். அவளைப் பற்றி அணு அணுவாய் அறிந்துக்கொள்ள புறப்பட்டேன். அந்தத் தேடலில் நான் அறிந்த சிலவற்றை ஒவ்வொரு இந்தியரும் அறிந்துக்கொள்ளவேண்டும் என நினைத்தேன். அதன் விளைவே இந்த பக்கம் இந்த இதழில் அச்சடிக்கப்பட்டது!!!!

குழந்தையைப் பேருவகையுடன் பெற்றத் தாய், முதலில் சிந்திப்பது அவளுக்கு என்ன பெயர் இடலாம் என்று தான். என் தாய் நாட்டையும் நான் முதலில் ஒரு குழந்தையாகவே பார்த்தேன். அவளின் பெயர் இந்தியா என்று நமக்குத் தெரியும். எனக்கு முன் அவளுக்கு யார் பெயர் சூட்டி இருப்பார்கள் என யோசித்தேன். அதன் விடையும் அவள் பெயர்க் காரணமும் இங்கே!

என் பெயர் இந்தியா!

இந்தியா எப்படி உருவாகினாள் என்பதை அவளின் பெயர்க் காரணத்தை அறிந்தப் பிறகுப் பார்ப்போம். இந்தியா என்ற சொல் "இண்டஸ்" என்ற நதியின் பெயரில் இருந்து எடுக்கப்பட்டது. இண்டஸ் நதியைப் பழங்காலத்தவர் "சிந்து" என்ற சான்ஸ்க்ரிட் வார்த்தையால் அழைத்தனர். அதில் இருந்து பாரசிக மொழியில் கிடைத்தப் பெயர் "ஹிந்து". "ஹிந்து" வில் இருந்து பிறந்தப் பெயர் "இண்டஸ்". இப்படியாய் இந்தியா என அழைக்கப்பட்ட இவள்,  முன்னொரு நாளில் வேறு பெயர்களாலும் அழைக்கபட்டாள். அவற்றுள் "ஹிந்துஸ்தான்" மற்றும் "பாரத்" முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்து மக்களைக் கொண்ட நாடு ஆதலால் "ஹிந்துஸ்தான்" என பாரசிக மொழியில் அழைக்கபட்டாள். புராணங்களில் பெருமையாய் பேசப்பட்ட பரத மன்னர் ஆண்ட நாடு ஆதலால் "பாரத்" என்று அழைக்கப்பட்டாள்.  எனினும் இப்போதைய அவளின் அதிகாரப்பூர்வப் பெயர்கள், "இந்தியா" மற்றும் "பாரத்". ஏன் எனில் ஹிந்துஸ்தான் என்பது 1947-க்கு முன் வடஇந்தியா மற்றும் பாகிஸ்தானைக் குறித்தது. இப்பெயர் முழு இந்தியாவைக் குறிக்க மறந்ததால் இது இன்று வழக்கில் இல்லை.

இந்தியப் புவி பிறந்தது!

நாம் இன்று பார்க்கும் உலக வரைபடம் சுமார் 210 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வேறுமாதிரி    இருந்தது   என்று   கூறினால்   நம்மால்   நம்ப   முடியுமா?            கண்ணால் பார்த்தவர் எவரும் இலர் என்பதற்காக  நாம் இதனை மறுக்க முடியாது. புவியைப் பற்றிய வரலாற்றில் எழுதப்பட்ட உண்மைகள் இவை.

210 மில்லயனுக்கும் மேலான ஆண்டுகளுக்கு முன்னர், ராட்சத தொன்மாக்கள் இந்த உலகம் முழுவதையும் ஆண்டுக்கொண்டு வாழ்ந்தன. மனித இனம் என்ற ஒன்று மறைந்திருந்தக் காலம் அது. அந்த காலத்தில் இந்த உலகில் உள்ள அனைத்து நிலப்பகுதிகளும் பிரிவின்றி பிளவின்றி ஒன்றாய் இருந்தன. அப்பெரும் நிலப்பகுதி "பான்ஜியா" என்று அழைக்கப்பட்டது. அந்த நிலப்பகுதியைச் சுற்றி கடல் சூழ்ந்திருந்தது. இந்த கடல் "பான்தலசா" என்று அழைக்கப்பட்டது.


பின்னர் இந்த "பான்ஜியா" நிலம் பிளவுக்கு உள்ளாகி, இரு பெரும் பாகங்களாய்ப் பிரிந்தது- லாரேஷியா மற்றும் கோன்ட்வானா. லாரேஷியா என்பது இன்றைய வட அமெரிக்கா மற்றும் யூரேஷியாவைக் குறிக்கும்.  கோன்ட்வானா என்பது இன்றைய தென்உலக கண்டங்கள் அனைத்தையும், இந்திய மற்றும் அரபிய  தீபகற்பத்தையும் குறிக்கும். இந்தப் பிளவின் விளைவால் உருவான வெற்றிடம், சுற்றி இருந்த கடலைத் தன்னுள் நிரப்பிக்கொண்டது, "டெதிஸ்" கடலாய்.


இப்படியாய்ப் பிளவுகளும் விரிசல்களும் ஒன்றின் பின் ஒன்றாய்த் தொடர்ந்து உலக கண்டங்களை உருவாக்கின. இப்போது நம் கவனத்தை இந்தியாவின் மீது செலுத்துவோம். ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிக்கா கண்டங்களின் இடுக்கில் சிக்கித் தவித்த இந்திய தீபகற்பம், வடக்கு நோக்கி வேகமாய் மிதந்துக் கொண்டு இருந்தது. அதே வேகத்தில் தனக்கு முன்னே இருந்த ஆசிய கண்டத்தை சிறிதும் போருட்பதுத்தாமல், டெதிஸ் கடலை வெளியே தள்ளி இடியென  மோதியது. விளைவாய், மேடுகளும் பள்ளங்களும் உருவாகின. இந்தியா பிறந்தாள்; இமயம் மேலோங்கியது; டெதிஸ் கடல் சிதறி சிறு சிறு ஆறுகளாகவும் நதிகளாகவும் பிரிந்து சென்றது. கிழக்கே பாயும் கங்கையும் பிரமபுத்ரியையும், மேற்கே பாயும் ஜீலம், செந்நாப், ராவி, சட்லஜ், பியாஸ் ஆகியனவும் பிறந்தன! இந்தியா அழகானாள்!

முதல் மனிதனின் கால்தடம்

இந்திய தீபகற்பம் வட இந்தியாவுடன் இணைவதற்கு முன் இரு நிலங்களும் வெவ்வேறான பதத்தில் இருக்க, வெவ்வேறு வகையான  உயரினங்கள் தோன்ற ஆரம்பித்தன. பாலூட்டிகளும், எலி வகைகளுமே வட இந்தியாவில் தோன்றின, முக்கியமாக இந்திய கங்கை சமவெளியில். ஆனால் இதே நேரத்தில், ஆபிரிக்க கண்டத்தில் வேறு ஒரு புது வகையான பாலூட்டி, தன் இனத்தை மென்மேலும் புதுமைப் படுத்த தன்னை ஆயத்தமாக்கிக் கொண்டிருந்தது. அவை குரங்குகள். மெல்ல இந்த குரங்குகள் நிமிர்ந்து நடக்க தங்களைத் தயார் செய்துக்கொண்டன.

1974-இல் எத்தியோப்பியாவில் நடந்த ஓர் அறிவியல் ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பு இதோ. சுமார் 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஓர் உயிரினத்தின் எலும்புகள் கண்டறியப்பட்டன. அது முக்கால் பாகம் குரங்கைப் போலவே காட்சியளித்தாலும்  ஒரு வியக்கத்தக்க அம்சம் அதனிடம் இருந்தது. அது மனிதனைப் போலவே நிமிர்ந்து நின்றும் நடந்தும் இருந்திருக்கிறது. "ஆஸ்த்ரலோபிதிகஸ்   ஆபரென்சிஸ்" என்ற வகையை சேர்ந்த இவ்வினம் ஒரு பெண் குரங்கின் தோற்றம் கொண்டதால் அனைவரும் இதனை "லூசி" என்று அழைத்தனர். இவளை மனிதனுக்கும் குருங்குக்கும் இடையவள் என்றும் சொல்லலாம்.

ஒன்றரை மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவான "ஹோமோ எரெக்டஸ்" வகை தான் இப்போதைய மனிதனின் மாதிரி. அதிலிருந்து சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் தேவைப்பட்டது இந்த "மாதிரி"க்கு  முழு மனிதனாய் மாற. இப்படி முதல் மனிதன் ஆபிரிக்க கண்டத்தில் தோன்றி, பின் கிழக்கு நோக்கி பயணித்து அனைத்து நில பகுதிகளையும் ஆக்கிரமிக்க ஆரம்பித்தான். இந்தியாவிற்கும் வந்தான்!

முதல் இந்தியன்!

இப்படி 1 மில்லியன் ஆண்டுகள் வரை நாடோடியாய் வாழ்ந்தான் மனிதன். அவன் அப்படி சுற்றித் திரியக் காரணம்?? உணவு! வேட்டைக்காரனாய் வாழ்ந்த மனிதன், புது புது இடங்களுக்குப் பயணித்து அவன் பசி தேவைகளைப் பூர்த்தி செய்துக் கொண்டான். அப்போது செல்வ செழிப்பாய் இருந்த இந்திய கங்கை சமவெளி அவனை ஈர்த்திற்று. இப்படி முதன்முதலில் இந்தியாவுக்கு வந்தவன் இம்மண்ணின் முதல் இந்தியன் ஆனான். அங்கு இருந்த விலங்குகளை வேட்டையாடி, குகைகளில் வாழ்ந்து வந்தான். பொழுதுபோக்கிற்கு ஓவியங்களும் தீட்டினான் போலும்.  அதற்கு ஆதாரமாய் விளங்குகிறது இந்த இடம்- பிம்பேட்கா, மத்திய பிரதேசம்.                                                                        

சுமார் 60000 ஆண்டுகள் வரை  வேட்டை மட்டுமே ஆடிக்கொண்டு இருந்த மனிதனுக்கு  இந்த சமவெளியின் செழித்த மண், விவசாயத்தைக் கற்பித்தது. ஆறுகளின் அருகில் அவன் விவசாயத்தைத் தொடங்கினான்.  விலங்குகளை அவன் நண்பர்களாய் மாற்றிக் கொண்டான். மெல்ல அவன் நாடோடி வாழ்க்கை மாறியது. கூட்டம் கூட்டமாய்ச் சேர்ந்து குடியேற ஆரம்பித்தான். நிறைய கைத் தொழில்கள்-கூடைப் பின்னுதல், பானை செய்தல், ஆயுதங்கள் செய்தல் போன்றவற்றைக் கற்றுக்கொண்டான். அவன் ஆயுதமாய் பயன்படுத்திய சில பொருட்கள் கர்நாடகம் மற்றும் நர்மதா பள்ளத்தாக்கில் கண்டறியப்பட்டன. இதுவரை வெறுமையாய் இருந்த இந்தியா, வந்தோர் அனைவரையும் இந்தியர்களாக்கி தன்னுடைமையாகிற்று! இந்தியர்கள் பிறந்தார்கள்!!

தொடரும்……………  ஜெய கீதா

No comments:

Post a Comment