Saturday 16 March 2013

ஒளிர்கிறது நம் இந்தியா!






















தீக்குச்சிகளைச் செய்து வெந்து போன,
பிஞ்சுகளின் கைகள்,
புத்தகங்களைப் புரட்டிப்,
பூரித்து உதிர்க்கும் புன்னகையிலே,
ஒளிர்கிறது நம் இந்தியா!

அநியாயங்களைக் கண்டு வெகுண்டெழுந்து,
அக்கிரமக்காரர்களைக் கூறு போட,
இளைஞரணி இமயமாய்,
மார்தட்டும் ஓசையிலே,
ஒளிர்கிறது நம் இந்தியா!

பெண்களின் நிலை சமுதாயத்திலே சீராய்,
காமக்கொடூரர்களின் அச்சமின்றி,
பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய்,
மங்கையவள் சுட்டெரிக்கும் சுடர்விழிப் பார்வையிலே,
ஒளிர்கிறது நம் இந்தியா!

சமுதாயச் சுரண்டல்களையும்,
அரசியல் அநீதிகளையும்,
அண்ணார்ந்து பார்த்து, ஆவேசத்தில் குரலெழுப்பும்,
ஒவ்வொரு இந்தியக் குடிமகனின், அசாத்திய தைரியத்திலே,
ஒளிர்கிறது நம் இந்தியா!

தீவிரவாதத் தாக்குதல்களுக்கும்,
தினவெடுத்த இனவெறிக்கும்,
இரையான அப்பாவிகளின் சடலம் கண்டு,
கண்ணீர் சிந்திப் பின் காளையாய் சீரும்,
இந்தியனின் கண்களிலே,
ஒளிர்கிறது நம் இந்தியா!

லட்சாதிபதி கோடீஸ்வரனாகிறான்,
ஏழை உழவனோ, தெருக்கோடியில் தவிக்கிறான்;
ஏழ்மையின் உழைப்பை ஏலம்போடும்,
குள்ளநரிகளின் மீதான,
சிங்கத்தின் கம்பீர கர்ஜனையிலே,
ஒளிர்கிறது நம் இந்தியா!

இறுதியாக,
நம் தேசத்தந்தை கொண்ட,
தன்னம்பிக்கைத் தலையெடுத்து,
தகாதவைகளைத் தகர்த்தெறிந்து,
"வல்லரசானது நம் இந்தியா" என்று,
நாம் போடப் போகும்,
ஆரவாரக் கூச்சலிலே;
அப்போது வழியும்,
எம் பாரதத்தாயின்  ஆனந்தக் கண்ணீரிலே;
ஒளிர்கிறது நம் இந்தியா!
ஒளிர்கிறது நம் இந்தியா!!!



                                                      -அமுத இளவரசி

7 comments:

  1. உம் கவிதையில் ஒளிர்கிறது இந்தியா....நல்ல படைப்பு அமுதா...

    ReplyDelete
  2. Nice Thinking....Very Good...Keep Writing

    ReplyDelete
  3. arumayaana padaippu ammu

    ReplyDelete
  4. குழந்தைகளின் புன்னகையில் ஒளிர்கிறது இந்தியா... நல்ல படைப்பு அமுதா...

    ReplyDelete
  5. நீங்கள் சொன்னது போல் எல்லாவற்றிலும் ஒளிரட்டும் இந்தியா...

    ReplyDelete