Saturday 20 July 2013

குறள் மழை - 7


இந்த பகுதியில் நாம் காணவிருக்கும் அதிகாரம், அறத்துப்பாலின்  ஏழாவது அதிகாரமும் இல்லறவியலின் மூன்றாவது அதிகாரமுமான, "புதல்வரைப் பெறுதல்"


பெறுமவற்றுள்  யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற

அறிவும் திறனும் வாய்ந்த பிள்ளையேனும்
பொன்னும் பொருளும் பெரிதோ!
அண்டம் எல்லாம் அலையினும்
இப்பிள்ளைச் செல்வம் எளிதோ!


எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட்  பெறின்

பண்பும் பணிவும் நிறைந்த என் மகனை ஈன்றதால்
முப்பிறப்பும் இப்பிறப்பும் எப்பிறப்பும்
பழியும் பிணியும் என்னைத் அண்டா!


தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.

என் பிள்ளை என் செல்வம் என்பார் அறிந்தோர்
ஏன் எனில் ,
நம் வினையின் பயனை நாமே பெறுவோம்


அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்

என் பிஞ்சின் பஞ்சுவிரல்கள்   தொட்டு ஊட்டியக்
கூழும் இனிமையே 
வானோர்கள் கடைந்த அமிழ்தைக் காட்டிலும்!


மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம்  செவிக்கு

எம்மகன் அவன் தேகம் தீண்டி
அவனை அள்ளித் தழுவிக்கொண்டதில் 
என் உடல் சிலிர்த்துப்போனேன்....
மழலையில் கொஞ்சித் தவழும் அவன் சொல்லைக் கேட்டு
செவி குளிர்ந்து போனேன்....


குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

மூங்கில் கொடுத்த புல்லாங்குழலும்
மேலானவர் தீண்டும் யாழும் இனிதோ!
என் பிள்ளையின் மழலையைக் காட்டிலும்!


தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

அவையில் முதனிலையாம் என் மகன்...
ஆகா! இதனினும் ஒரு நன்றி அவனுக்கு செய்யத் தகுமோ!


தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

சான்றோனான என் மகன் !
என்னையும் சேர்த்து
மண்ணுலக உயிர்க்கெல்லாம்
பெருமை சேர்க்கிறான்!
சான்றோனான என் மகன் !


ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

கோடி நிலவுகள் என்னை சூழ்ந்ததினும்
பேருவகைப் பெற்றேனடா நீ பிறந்த அக்கணம்!
அதனினும் இன்பம் இப்போது உன்னை
சான்றோன் என  கேட்கும் இக்கணம்!


மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கோல்எனும் சொல்.

புண்ணியம் பல செய்தானோ ?
திண்ணிய அறிவுடைய இத்தகையப் பிள்ளையைப் பெற ...
என
எண்ணி எண்ணி அனைவரையும் வியக்க வைப்பான்
நன்றியாய்....

தன்னைச் சான்றோனாக்கிய தந்தைக்கு!

1 comment:

  1. குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
    மழலைச்சொல் கேளா தவர்.

    மூங்கில் கொடுத்த புல்லாங்குழலும்
    மேலானவர் தீண்டும் யாழும் இனிதோ!
    என் பிள்ளையின் மழலையைக் காட்டிலும்!

    அருமை அருமை.... கடைசி மூன்றும் மிக அருமை...

    பள்ளியில் படிக்கும் போது மனனம் செய்தவை.. நினைவுக்கு வருகிறது...

    ReplyDelete