Monday 8 July 2013

பாவ நகரம் - XI


பகுதி 8 ஒரு அடர்ந்த பகுதி
                இருள் தனது நாக்குகளால் அந்த நகரை சூழ ஆரம்பித்திருந்தது. பகுதி 8-ல் நடந்த குண்டு வெடிப்பைப் பற்றிய செய்தி மெதுவாக பரவ ஆரம்பித்திருந்தது. அச்செய்தி ஒரு பரபரப்பை அந்நகர வாசிகளிடையே உருவாக்கி இருந்தது. ஆனால் பரபரப்பு ஏதுமின்றி  அந்த பெண் அங்கு நின்றிருந்தாள். சில நிமிட காத்திருப்புகளுக்கு பின் ஒரு ஓல்லியான உருவம் அவளை நெருங்கியது. சில பண கட்டுகள் பரிமாற்றத்திற்குப் பின் வார்த்தைகள் பரிமாறப்பட்டன.
                “எல்லாம், கரக்ட்டா நடக்குமாயா?”
     “அதெல்லாம் நடக்கும்மா..”
     “உங்க பசங்கள நம்பலாமா?”
     “அசால்டா கொலையே பண்ணுவாங்க. இதெல்லாம் சாதாரணம்மா”
     “யோவ், மொத்தம் 300 பஸ்ஸுக்கு மேல”
     “அதெல்லாம் பண்ணிடுவாங்க”
     “மாட்டிக்கிட்டா?”
     “குடிக்க காசில்ல, திருட புந்தோம்னு சொல்லிடுவாங்க”
     “நாளைக்கு எல்லாம் சரியா நடந்தா மீதி பணம்” எனத் திரும்பியவள், மீண்டும் அவன் பக்கம் பார்வையை திருப்பினாள்.
     “எல்லாத்தையும் உங்க பசங்களேவா பண்ணுவாங்க”
     “எல்லா ஏரியாலயும் நமக்கு ஆள் இருக்கு” என்றவன் சற்று மெலிந்த குரலில் “போலீஸ்கே நாங்க ஹெல்ப் செஞ்சிருக்கோம்”
     நீங்கல்லாம் நிச்சயமா சாவ வேண்டியவங்கதான் என நினைத்துக் கொண்டே கீதா திரும்பி வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

பகுதி 7 காவல் நிலையம்:
     தரண் சில கோப்புகளைப் புரட்டிக் கொண்டிருந்தான். ஏற்கனவே ஸ்ரீதர் தப்பித்த செய்தி அவன் காதுகளை எட்டியிருந்தது. அப்போது உள்ளே வந்த கண்ணன் குண்டுவெடிப்பைப் பற்றியும், ஸ்ரீதர் மீண்டும் தப்பித்ததைப் பற்றியும் சொன்னான்.
     “செத்துப் போன அந்த கான்ஸ்டேபிள் பேரு என்ன?”
     “சுகுமார்”
     ஏதோ ஒன்று மூளைக்கு உரைக்க தரண் ஒரு கோப்பை எடுத்து அவசர அவசரமாகத் தேடினான்.  சில பக்க புரட்டல்களுக்குப் பின் ஒரு பக்கத்தை எடுத்துப் பார்த்தான். அதை கண்ணனிடம் காண்பித்தான். அவன் அதைப் பார்த்து அதிர்ந்தான்.
பகுதி 3 – மாநகர பேருந்து பணிமனை:
     அந்தப் பணிமனையில் சூப்பர்வைசராக வேலைப் பார்க்கும் குமார், எப்பொழுதும் போல வேலை செல்வதை உறுதி செய்து கொண்டு, தனது இருக்கைக்கு வந்தார். ஐந்து ஆண்டுகளாக இங்கு சூப்பர்வைசராக உள்ளார். தினமும் இரவு 9 மணி அளவில் பேருந்துகள் வர ஆரம்பிக்கும். அவருக்கு கீழ் உள்ள 5 பேர், அவற்றை சோதனை செய்வர். பிரேக் சரிசெய்தல், ஆயில் மாற்றுதல் போன்ற வேலைகள் அங்கு நடக்கும். அவ்வாறு ஒரு பேருந்து வாரத்திற்கு ஒரு முறை அங்கு வரும். இரவு சரிசெய்யப் பட்டு காலையில் ஓடும். அன்றும் வேலை நடந்து கொண்டிருந்தது.
     இரவு பத்து மணி அளவில் பணிமனையில் வேலை செய்யும் ஒருவன், சிறுநீர் கழிக்க பணிமனையின் பின்னால் சென்றான். அப்பொது இருளில் ஏதோ ஒன்று அசைந்தது. அது அவர்களைப் போலவே காக்கி சட்டை அணிந்திருந்தது. அவனுடன் வேலை செய்பவர்கள் யாரோ என நினைந்தவன், முன்னே செல்ல முயன்ற போது அவனது பின் மண்டையில் ஒரு அடி விழுந்தது. அடியின் தாக்கத்தில் மல்லாக்க விழுந்தவனுக்கு, வானம் தெரிந்தது. அதனுடே முகமூடி அணிந்த ஒரு முகமும் மங்கலாக தெரிந்தது. அது அவனது அடையாள அட்டையை எடுக்க முயன்ற போது
     “யாருடா நீ” என கேட்டான் அவன்.
அவனை ஒரு முறை முகமூடி தன் கையில் இருந்த சுத்திப் போன்ற ஒரு பொருளை வேகமாக அவனை நோக்கி ஓங்கியது.

பகுதி 6 – ஜெபக் கூட்டம்:
     பகுதி 6-ல் உள்ள ஒரு தேவாலயத்தில் ஒரு ஜெபக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அதன் ஒரு மூலையில் ஒரு தொப்பியை அணிந்த படி, ஸ்ரீதர் அமர்ந்துக் கொண்டிருந்தான். ஒன்றிரண்டு காவலர்கள் ஆங்காங்கே தென்பட்டுக் கொண்டிருந்தனர். இவன் தலையை உயர்த்தாமல் ஒரு பைபிளில் தன் பார்வையை ஓட விட்டுக் கொண்டிருந்தான். ஒரு சில நிமிடங்கள் கரைந்த பின் ஒரு சிறுவன் ஒரு டைரியை அவனிடம் தந்தான். அவன் மேடையைப் பார்த்தான். அங்கே ஜோசப் ஜபித்துக் கொண்டிருந்தார். சிறுவன் அங்கிருந்து நகர, அவன் அந்த டைரியை திறந்தான். அதன் முன் பக்கத்தில் ஒரு காகிதம் சில எழுத்துக்களை தாங்கியிருந்தது.
     “உன் பிறப்பின் கதை....” என்ற வாசகங்களை அவன் கண்கள் படித்தன. ஜெபக் கூட்டம் இப்போதுதான் துவங்கியிருந்தது. அவன் அந்த டைரியைப் படிக்கத் துவங்கினான்.
    
    
    


2 comments: