Wednesday 3 July 2013

யாழிக்கு கவிதைகள்


மதுரம் கூட்டிய
உன் வெட்கப் பார்வைப்பட்டு
கலவரத்தில் சிக்கிய கண்ணாடியாய்
சிதிலமடைந்து சிதறிக்கிடக்கிறேன் நான்.
கடக்கவும் முடியாமல்
எடுக்கவும் முடியாமல்
ஒரு நூலில் கட்டிவிடப்பட்ட
இரு தும்பிகளாய் பரிதவிக்கிறாய் நீ.
உன்னையும் என்னையும் சேர்த்து
பிம்பச் சித்திரமாய்
சிரிக்கிறது நம் காதல்.

ஆற்றாமை ஒருபக்கம்
இயலாமை மறுபக்கம்.
ஆனால் அந்த சின்ன இடைவெளிக்குள்
சலனமே இல்லாமல்
ஓடிக்கொண்டேயிருக்கிறது நம் காதல்.

நீ எனக்கில்லை என்பதினை
நம் முதல் சந்திப்பிலேயே
எனக்கு நீ உணர்த்திவிட்டாய்,
ஆனால் இன்றுவரை நம் சந்திப்பு
தொடர்ந்துக் கொண்டேயிருக்கிறது.

இது எதுவரை என்பதினை
நாம் அறியவில்லை,
அறியவும் முற்படவில்லை.
பயணித்துக் கொண்டேயிருக்கிறோம்.
நம்மை சுழற்றி அடிக்கபோகும்
சூறைக்காற்றின் சத்தம்
நெடுநாட்களாகவே வெகுதூரத்தில்

கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

3 comments:

  1. அருமையான கவிதை யோகி.........

    ReplyDelete
  2. புறநானுறு காதல் போலவே யாழிக்கு கவிதைகள் படைத்துக் கொண்டிருக்கும் கோகி அவர்களே யாழி யார்?

    ReplyDelete