Saturday 6 July 2013

யாருமற்ற என் இன்னொரு இரவு...



















என்னுடன் நான் பேச
என் பின்னே நானே அலையும்
விந்தையான இரவிது

தனிமையில் எழுதிக் கொண்டிருக்கும்
ஒவ்வொரு இரவும்
எனக்காக விழித்திருக்கிறது...

இரவில் கிடைத்த
சிச்சிறு  உறவையும்...
பிரிக்க நினைக்கிறது
அவ்வப்போது வரும்
சிற்றுறக்கங்கள்.

நான் தூங்கிப் போன
ஒவ்வொரு இரவையும்
குறித்துக் கொண்டே வருகிறது
என் நாட்குறிப்பின்
வெற்றுப் பக்கங்கள்....

பேதங்கள் எதுவுமின்றி
தேகத்தை வருட வரும்
சில நிமிடத் தூறல்…

சேதங்கள் எதுவுமின்றி
சுவாசத்தை திருட வரும்
நல் வாடைக் கூதல்

நேரங்கள் எதுவுமின்றி
நெஞ்சத்தை கவர வரும்
சில வரிக் கவிதை
இப்படியாய்….
விழித்தவரே அறிவர்
நள்ளிரவின் அர்த்தங்களை…..

நையெனப் பெய்யும் மழை இரவில்
தனிமையில் விழிக்க
மழையோடே விடிகின்றது
முகில் வானம்…


புளித்துப் போன
ஒவ்வொரு நாளையும்
இனிக்க வைக்கிறது நள்ளிரவு

கசந்து போன
ஒவ்வொரு நினைவையும்
மறக்க வைக்கிறது வெண்ணிலவு

மின் விளக்குகள் இல்லாத
நள்ளிரவு சாலையில்
இரைச்சல்கள் எதுவுமின்றி
எங்கோ தூரத்தில்
ஊறும் ஓரிரு ஊர்தியும்
ஒலிக்கும் பண்பலை கீதமும்
காதை மென்மையாய்
குடைந்திடும் அவ்வப்போது...

என்னுடைய ஒவ்வொரு பகலும்
விண்மீன்கள் குவிந்து கிடக்கும்
இரவையே ஓயாது தேடுகிறது

இதோ இன்றும் வந்துவிட்டது
என்னைக் காண
யாருமற்ற என் இன்னொரு இரவு....

6 comments:

  1. நான் தூங்கிப் போன
    ஒவ்வொரு இரவையும்
    குறித்துக் கொண்டே வருகிறது
    என் நாட்குறிப்பின்
    வெற்றுப் பக்கங்கள்....


    arumai arumai.....thanimaigal miga kodumai

    ReplyDelete
  2. நன்றி கார்த்தி...

    ReplyDelete
  3. அருமையான கவிதை... இதனால் சகலருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் என் இரவு பற்றிய கவிதையை சில காலத்திற்கு வேறு வழியின்றி ஒத்தி வைக்கிறேன்...

    ReplyDelete
  4. Nanum ezhutha poren en iravai patriya kavithaiyai, arumaiyana varigal Vijai :)

    ReplyDelete